2025 நவம்பர் 20, வியாழக்கிழமை

'நான் இயற்கையை நேசிப்பவன்'

Niroshini   / 2016 ஜூன் 27 , மு.ப. 08:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

“நான் இயற்கையை நேசிப்பவன். இயற்கையின் சமநிலை கெடுவதால், மக்களுக்கு ஏற்படும் பாதிப்புக்களை உணர்கின்றோம்” என அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

தேசிய கூட்டுறவு வாரத்தை முன்னிட்டு, நாடளாவிய ரீதியில் ஒரு இலட்சம் மரக்கன்றுகளை நாட்டும் கைத்தொழில், வர்த்தக அமைச்சின் முடிவுக்கிணங்க, இன்று (27) கொழும்பு, விகாரமகா தேவி பூங்காவில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் சந்தன மரக்கன்று ஒன்றை நாட்டி வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைத்தார்.

இதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

“இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்காக அமைச்சர் ஹரிசன், மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அனுரகுமார திசாநாயக்க, கைத்தொழில் வர்த்தக அமைச்சின் செயலாளர் தென்னகோன் ஆகியோரும் குறைந்தது ஒரு மரக்கன்றையாவது, நாட்டி வைக்குமாறு அழைப்பு விடுக்கின்றேன்.

அத்துடன், நாட்டில் இயங்கும் கூட்டுறவுச் சங்கங்கள், கூட்டுறவு வங்கிகள், கூட்டுறவு துறை சார்ந்த நிறுவனங்கள் இந்தப் பாரிய வேலைத்திட்டம் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமன்றி, ரோட்டறி கழகத்துடன் இணைந்து, சதொச பத்து இலட்சம் மரக்கன்றுகளை நடுவதற்கான திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

நான் இயற்கையை நேசிப்பவன். இயற்கையின் சமநிலை கெடுவதால், மக்களுக்கு ஏற்படும் பாதிப்புக்களை உணர்கின்றோம். கடந்த ஏப்ரலில் ஏற்பட்ட வெப்பநிலை மாற்றம் எமக்கு இதை உணர்த்தியது. எனவே, தான் இவ்வாறான முயற்சியில் நாம் ஈடுபட்டுள்ளோம். இந்தப் பணிக்கு அனைவரும் உதவ வேண்டும்” எனவும் அவர் கூறினார்.   

இந்த நிகழ்வில், அமைச்சின் செயலாளர் டி.எம்.கே.பி.தென்னகோன், மேலதிக செயலாளர்  மல்காந்தி, கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர் ஜீவானந்தம், உணவு ஆணையாளர் திருமதி.கிருஷ்ணமூர்த்தி, பொல்கொல்லை தேசிய கூட்டுறவுச்சங்கத் தலைவர் லலித் கங்கவத்த, அமைச்சரின் ஆலோசகர் யூசுப் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X