2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

ஐக்கிய நாடுகளின் ஆணையத்தின் ஊடாக புகலிடம் கோரிய 9 பாகிஸ்தானியர்கள் திருப்பி அனுப்பிவைக்கப்பட்டனர்

Thipaan   / 2014 ஓகஸ்ட் 02 , மு.ப. 08:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

  -எம்.இஸட். ஷாஜஹான்

இலங்கையில் தங்கியிருந்தபடி ஐக்கிய நாடுகளின் ஆணையத்தின் (UNHCR) ஊடாக வெளிநாடுகளுக்கு புகலிடம்  கோரிய பாகிஸ்தானியர்கள் சிலர்  நேற்று வெள்ளிக்கிழமை (01) குடிவரவு குடியகல்வு அதிகாரிகளால் அவர்களது தாய் நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

நீர்கொழும்பின் பல பிரதேசங்களிலிருந்தும் கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்டு பூஸாவில் உள்ள பயங்கரவாத விசாரணைப் பிரிவு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்ட பாகிஸ்தான் நாட்டுப் பிரஜைகள்  ஒன்பது பேரே இவ்வாறு தமது தாய் நாட்டுக்கு, கட்டுநாயக்கா விமான நிலையத்தினூடாக திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக இலங்கை அஹ்மதியா முஸ்லிம் ஜமாஅத்தின் முக்கியஸ்த்தர் ஒருவர் தெரிவித்தார்.

வெள்ளிக்கிழமை அன்று  பாகிஸ்தானியர்கள் 10 திருப்பி அனுப்படவிருந்தனர். இவர்களில் 8பேர் அஹ்மதி முஸ்லிம்களாவர். இருவர் கிறிஸ்தவர்களாவர். அஹ்மதி முஸ்லிம்களில் ஏழு பேர் திருமணமாகாத இளைஞர்களாவர்.

ஒருவர் திருமணமாகி குடும்பத்துடன் இலங்கை வந்தவராவார். திருமணமான நபரை தவிர்த்து ஏனையோரும் இரு கிறிஸ்த்தவர்களுமே இன்று திருப்பி அனுப்பப்பட்டுள்ளவர்களாவர்.

திருமணமான அந்த பாகிஸ்தான் பிரஜை  இன்று சனிக்கிழமை அவரது குடும்பத்துடன் திருப்பி அனுப்பப்படவுள்ளதாக அஹ்மதியா முஸ்லிம் ஜமாஅத்தின் பேச்சாளர் தெரிவித்தார்.

பாகிஸ்தானைச் சேர்ந்த அஹ்மதி முஸ்லிம்கள், ஷியா முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள் 1,400 இற்கும் மேற்பட்டோர் நீர்கொழும்பு நகரத்தின் பல்வேறு பிரதேசங்களிலும் தங்கியிருந்தபடி அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையத்தின் (UNHCR) ஊடாக ஐரோப்பிய நாடுகளுக்கு தஞ்சம் கோரியுள்ளனர்.

இவர்கள் கட்டுநாயக்கா விமான நிலையத்தடைந்து அங்கு 'வருகை விசாவை' பெற்றுள்ளவர்களாவர். சிலர் புகலிடக் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டு அகதி அந்தஸ்த்து வழங்கப்பட்டுள்ளவர்களாவர்.

இவ்வாறு அகதி அந்தஸ்த்து வழங்கப்பட்டுள்ளவர்கள் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையத்தால் அவர்கள் புகலிடம் கோரியுள்ள நாடுகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர். ஏனைய புகலிடக் கோரிக்கையாளர்களின் புகலிடக் கோரிக்கை மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்த புகலிடக் கோரிக்கையாளர்களில் 180 இற்கும்   மேற்பட்டோர் கடந்த ஜூன் மாதம் 9ஆம் திகதி முதல் கைது செய்யப்பட்டு பூஸா முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம் புகலிடக் கோரிக்கையாளர்களின் புகலிடக் கோரிக்கை மனுவை விசாரிப்பதில் ஏற்பட்டுள்ள காலதாமதமே இலங்கையில் அவர்கள் பல மாத காலமாக தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக புகலிடக் கோரிக்கையாளர்களால் குற்றச்சாட்டு தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, பூஸா தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஏனையோரும் கட்டம் கட்டமாக திருப்பி அனுப்படவுள்ளதாக  தெரிய வருகிறது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .