2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

தமிழர்களின் வாக்குகளை பெறவேண்டுமாயின் இனப்பிரச்சினைக்கு தீர்வு வேண்டும்: பிரபா எம்.பி

Menaka Mookandi   / 2012 ஜூன் 20 , மு.ப. 09:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்காலத்தில் நடைபெறவிருக்கும் வட, கிழக்கு மாகாணசபை தேர்தல்களில் பிரசாரத்திற்கு அமைச்சர் பட்டாளங்களை அனுப்புவதை விட இனப்பிரச்சினைக்கான துரித தீர்வை அரசு மேற்கொண்டாலேயே தமிழ் மக்கள் அரசாங்கத்திற்கு நிச்சயமாக வாக்களிப்பார்கள் என ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கடந்த வட மாகாணத்திலுள்ள உள்ளூராட்சி சபை தேர்தல் நேரத்தில் தென்னிலங்கையிலுள்ள அமைச்சர்களும் அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும் பிரசாரத்திற்கு சென்றிருந்தார்கள். நானும் அவர்களுடன் இணைந்து அரசாங்கத்திற்காக வாக்குகளை கோரியிருந்தேன்.

வாக்காளர்களுக்கு பலவித சலுகைகளை அரசாங்கம் வாரி வழங்கியிருந்தாலும் அரசாங்கம் வெற்றி பெறவில்லை. சலுகைகளை பெற்றுக்கொண்ட மக்கள் பெரும்பாண்மையின கட்சிகளில் போட்டியிட்ட தமிழ் வேட்பாளர்களுக்கு வாக்களிக்கவில்லை. இதிலிருந்து வடகிழக்கு மக்கள் அபிவிருத்தியை மட்டுமின்றி அரசியல் தீர்வையும் எதிர்ப்பார்க்கின்றார்கள் என்பது தெளிவாகிறது.

எதிர்வரும் கிழக்கு மாகாணசபை தேர்தலிலே தமிழ் மக்களின் வாக்குகளை பெருவதாயின் அரசியல் தீர்விற்கான நகர்வை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும். சிங்களவர்கள் வாழாத தமிழர் பிரதேசங்களில் இராணுவத்தினர்  பௌத்த விகாரைகளையும் புத்தர் சிலைகளையும் நிறுவுவதை தடுத்து நிறுத்த வேண்டும். வட பகுதியில் இராணுவத்தின் பிரசன்னத்தை குறைக்க வேண்டும். வட, கிழக்கு மாகாணங்களில் ஆளுநர்களாக இராணுவத்தை சாராதவர்களை நியமிக்க வேண்டும்.

இப்படியான முஸ்தீபுகளுடன் இனப்பிரச்சினை தீர்வுக்கான பேச்சுவார்த்தைக்கு அரசாங்கம் செல்லுமாயின்; தமிழ் மக்களின் வாக்குகளை அரசாங்கம் கோரி நிற்கலாம். தமிழ் மக்களும் அரசாங்கத்திற்கு நிச்சயமாக வாக்களிப்பார்கள்.

நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்குள் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் வராமல் பிடிவாதம் பிடித்து வருகின்றனர். ஆறு மாத காலத்திற்குள் நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் மூலமாக அரசியல் தீர்வை காண்பதற்கு அரசாங்கம் தயாராக இருக்கின்றது. நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்குள் வருமாறு அழைப்பு விடுத்து இன்று ஆறு மாதத்திற்கும் அதிகமாகிவிட்டது.

கிடைக்கப்பெற்ற சந்தர்ப்பங்களை கைநழுவ விடுவதே தமிழர்களின் கடந்த கால வரலாறாகும். யுத்த காலத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்விகளை கருத்திற் கொள்ளாமல் யுத்தத்திற்கு பின்னர் கிடைத்திருக்கும் முதல் சந்தர்ப்பமான நாடாளுமன்ற தெரிவுக்குழு என்ற பேச்சுவார்த்தை மேடைக்கு கூட்டமைப்பினர் செல்ல வேண்டும்.

அதேபோல் கூட்டமைப்பினர் தெரிவுக்குழுவுக்கு வராத பட்சத்தில் அரசாங்கம் இனப்பிரச்சினைக்கான பரிந்துரைகளை முன்வைத்து அதை அமுல்படுத்த வேண்டும். வெறுமனே கூட்டமைப்பினர் கலந்து கொள்ளவில்லை என்று கூறி கூட்டமைப்பினரை பகடை காயாக பயன்படுத்தி இனப்பிரச்சினைக்கான தீர்வை அரசாங்க தரப்பில் முன்வைக்காதது அரசாங்கத்தை சர்வதேச ரீதியில் பலமிழக்க வைக்கிறது.

தென்னிலங்கை தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற ரீதியில் நான் வெகுவாக தமிழ் தேசியம் பேசுவதில்லை. மாறாக எமது தமிழ் சமூகத்தின் எதிர்கால நல்வாழ்விற்கும் கல்வித்துறைக்கும், வேலைவாய்ப்பிற்கும் முழுமையான முறையில் அரசாங்கத்திடமிருந்து பெறக்கூடியதை பெற்றுக் கொடுக்கின்றேன்.

தமிழ் தேசியம் பேசுவதன் மூலமாக சர்வதேச துணையுடன் எமது மக்களுக்கு அரசியல் தீர்வு கிடைக்குமேயாயின் அது மகிழ்ச்சிக்குறிய விடயமாகும். அதே நேரம் தமது எதிர்கால அரசியலுக்காகவும் வாக்குகளுக்காகவும் தமிழ் தேசியத்தை பேசுவார்களேயாயின் அது எமது மக்களை பின்னோக்கி கொண்டு விடுவதற்கு சமமானதாகும்' என்று அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .