2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

'காயமடைந்த அரசியல் கைதிகளை சட்டத்தரணிகள் பார்வையிடுவதற்கான உரிமை மறுக்கப்பட்டுள்ளது'

Super User   / 2012 ஜூலை 04 , மு.ப. 11:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

29ஆம் திகதி நடைபெற்ற சம்பவத்தை அடுத்து ஏற்பட்ட நெருக்கடி நிலைமையினால் மஹர சிறைசாலைக்கும் ராகம மருத்துவமனைக்கும் காயமடைந்த நிலையில் கொண்டுவரப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளை பார்வை இடுவதற்கு சட்டத்தரணிகள் முயற்சி செய்ததனர். ஆனால், இந்த காயமடைந்த கைதிகளை பார்வையிடுவதற்கு சட்டத்தரணிகளுக்கு உள்ள உரிமை மறுக்கப்பட்டுள்ளது என  தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் மக்கள் கண்காணிப்பு தெரிவித்தது.

இது தொடர்பில் குறித்த அமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது,

"மக்கள் கண்காணிப்பு குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டு கொழும்பில் இன்று கூடிய அரசியல் தலைவர்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகள், சட்டத்தரணிகள் மற்றும் சமூக செயல்பாட்டாளர்கள் அடங்கிய கூட்டத்தில் இது தொடர்பில் தீவிரமாக ஆராயப்பட்டது.

இந்த சந்தர்ப்பத்தில் மஹர சிறைச்சாலையில் வைக்கப்பட்டு ராகம மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட தமிழ் அரசியல் கைதி நிர்மலரூபன் மரணமடைந்துள்ளார் என்ற செய்தி எங்களுக்கு கிடைத்துள்ளது.

மஹர, போகம்பர சிறைச்சாலைகள், அனுராதபுர, ராகம, வெலிசர மருத்துவமனைகளுக்கு சென்று  சம்பந்தப்பட்ட அனைத்து கைதிகளையும் பார்வை இடுவதற்கு  கைதிகளின் குடும்ப உறுப்பினர்களுக்கும் சட்டத்தரணிகளுக்கும் உள்ள உரிமை உறுதிப்படுத்தப்பட வேண்டும் என நாம் கோருகிறோம்.

காயமடைந்த கைதிகளை   பார்வையிட்டு அவர்களுக்கு சிகிச்சைகள் மற்றும் மனிதாபிமான உரிமைகள் வழங்கப்படுவதையும் நடந்த சம்பவம் தொடர்பான பக்கசார்பற்ற முழு விசாரணைகள் நடத்தப்படுவதையும்  உடனடியாக உறுதி செய்ய வேண்டும் என நாம் சர்வதேச செஞ்சிலுவை சங்கம், இலங்கை மனித உரிமை ஆணைக்குழு ஆகியவற்றை கோருகிறோம்.

அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பில் இனிமேல் ஒத்திவைக்கப்பட முடியாத நிரந்தர தீர்வுக்கு அரசாங்கம் உடனடியாக வர வேண்டும் என வலியுறுத்தி கூறுவதுடன் இது தொடர்பான மேல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு இங்கு இன்று கூடிய நாம் அனைவரும் திட சங்கற்பம் பூண்டுள்ளோம்.

இது  தொடர்பில்  உடனடியாக அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கும் சர்வதேச சமூகத்தின் கவனத்திற்கு கொண்டு வருவதற்கும் உரிய பல்வேறு முடிவுகளை  நாம் எடுத்துள்ளோம்.

மக்கள் கண்காணிப்பு குழு இணை தலைவர்கள் நிமல்கா பெர்னாண்டோ, சிறிதுங்க ஜெயசூரிய, ஏற்பாட்டாளர் மனோ கணேசன், நாடாளுமன்ற  உறுப்பினர்களான மாவை சேனாதிராஸா, சுரேஷ் பிரேமச்சந்திரன், ஜயலத் ஜெயவர்தன, எம்.ஏ.சுமந்திரன், சிவசக்தி ஆனந்தன், செல்வம் அடைக்கலநாதன், ஈ.சரவணபவன், அப்பாதுரை  விநாயகமூர்த்தி, பொன் செல்ராசா, கட்சி தலைவர்கள்  வி.ஆனந்த சங்கரி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .