2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

சிரேஷ்ட சுகாதார சேவை அதிகாரிகளுக்கு பாதுகாப்பு காப்புறுதி வழங்கப்பட வேண்டும்: ஜயலத் ஜயவர்தன

Menaka Mookandi   / 2012 ஜூலை 13 , பி.ப. 03:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

'சுகாதார சேவையில் சிறந்த பணியினை நிறைவேற்றிவரும் அதிகாரிகள் பயம், பீதியின்றி தங்களது பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்ள திடீர் விபத்து உயிர் பாதுகாப்பு காப்புறுதி வழங்க சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என ஐ.தே.க.வின் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜயலத் ஜயவர்தன கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

'சுகாதார சேவையில் சிறந்ததொரு பணியை நிறைவேற்றிவரும் சுகாதார துறைக் குழுவினருக்கு கீழ் பணியாற்றும் பொது சுகாதார பரிசோதகரில் ஒருவரை உழக்கையால் தாக்கி கொலை செய்த சம்பவமொன்று இடம்பெற்றது. மிகவும் துரதிஷ்டவசமாக இச்சம்பவம் இடம்பெற்றதை அறிவோம்.

அரச ஊழியர் ஒருவரை மரத்தில் கட்டிவைத்த அமைச்சர்களும், தனது பாதுகாப்பு அதிகாரிகள் சகிதம் வீடொன்றினுள் பலாத்காரமாக நுழைந்து தனியாருக்குச் சொந்தமான சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த அமைச்சர்களும் இருக்கின்ற இந்த நாட்டில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுகின்றமை ஒரு புதுமையான விடயமல்ல.
 
அத்துடன் சுயாதீன பொலிஸ் ஆணைக்குழு, சுயாதீன அரச சேவை ஆணைக்குழு மற்றும் சுயாதீன நீதிச் சேவைகள் ஆணைக்குழு இல்லாத இந்த நாட்டில் நீதி, சட்டம் என்பன முறைப்படி நடைமுறைப்படுத்தப்படாதுள்ளமையும் வியத்தகு விடயமல்ல. பொலிஸ் திணைக்களம் இன்று முழுமையாக அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது.
 
சட்ட நடவடிக்கைகள், நீதிமன்ற நடவடிக்கைகள் மீது இருந்த மக்களின் நம்பிக்கை இன்று வீழ்ந்து போயுள்ளது. இன்று மக்கள் இவ்வாறானதொரு சூழ்நிலையிலேயே வாழ்க்கை நடத்தி வருகின்றனர்.

இலங்கையில் இன்னமும் சுயாதீன சுகாதார சேவை ஒன்று கட்டியெழுப்பப்பட வில்லை. குறிப்பாக சுகாதார சேவையில் பொது சுகாதார ஊழியர்கள், பரிசோதகர்கள், சுகாதார சேவை தாதியர்கள் ஆகியோருக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இந்த அதிகாரிகள் பயம், பீதியின்றி தங்களது பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்ள திடீர் விபத்து உயிர் பாதுகாப்பு காப்புறுதி வழங்கப்பட சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் குறிப்பாக வைத்தியர் என்ற ரீதியில் வேண்டுகோள் விடுக்கின்றேன்' என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .