2025 ஜூன் 23, திங்கட்கிழமை

மேயர் முஸம்மில் தனது கட்சியை விற்று பதவியை தக்க வைத்துக் கொள்கிறார்: ஜனநாயக மக்கள் காங்கிரஸ்

A.P.Mathan   / 2012 ஓகஸ்ட் 02 , மு.ப. 06:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 கொழும்பு மாநகரசபை மேயர் முஸம்மில் தன் பதவியை தக்க வைக்க உதவி செய்யும் ஜனநாயக மக்கள் முன்னணிக்கு ஆதரவளிப்பதனூடாக தன்னை மேயராக்கிய ஐக்கிய தேசிய கட்சியின் தொழிற்சங்க பொறுப்பாளரான ஊவா மாகாணசபை உறுப்பினர் வேலாயுதத்தை கண்டித்து தனது கட்சியை விற்கின்றார் என ஜனநாயக மக்கள் காங்கிரஸின் பொதுச் செயலாளர் கலாநிதி சுரேஷ் கங்காதரன் தெரிவித்தார்.

ஊவா மாகாணசபை உறுப்பினர் வேலாயுதம் தொடர்பாக கொழும்பு மாநகரசபை மேயர் முஸம்மில் தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்குமுகமாக ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பிலேயே சுரேஷ் கங்காதரன் மேற்ப கூறியுள்ளார்.

அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவையாவன...

சப்ரகமுவ மாகாணத்தில் ஐக்கிய தேசிய கட்சிக்கு கிடைக்கும் தமிழ் வாக்குகளை தடுக்கும் சதியில் ஈடுபட்டு வரும் ஜனநாயக மக்கள் முன்னணியை காப்பாற்றி தனது கட்சியின் மத்தியகுழு உறுப்பினரும் மாகாணசபை உறுப்பினருமான வேலாயுதத்தின் கூற்றை புறந்தள்ளுகின்றார் மேயர் முஸம்மில். ஜனநாயக மக்கள் முன்னணியின் மாநகரசபை உறுப்பினர் திருமதி பிரியாணி குணரத்தினவின் நியமனமானது பல தமிழ் வேட்பாளர்களின் முதுகில் குத்திய செயல் என்பது கொழும்பு மாவட்ட தமிழர்கள் அறிவார்கள். தேர்தலில் திருமதி பிரியாணி போட்டியிட்டபோது அவருக்கு வாக்களிக்க சொல்லி ஏன் ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவர் கோரவில்லை? கொழும்பு மாநகரசபை தேர்தலின்போது நேர்மையான மாநகரசபை சேவையை மக்களுக்கு வழங்குவோம் என வாக்கு கேட்டிருப்பார்களேயானால் இன்று பிரியாணி குணரத்தினவின் நியமனம் நியாயமானதாக இருக்கும். ஆனால், தமிழ் தனித்துவத்தை காப்போம், தமிழரின் பிரதிநிதித்துவத்தை கொழும்பு மாநகரசபையில் அதிகரிப்போம், தலைநகர் தமிழர்கள் அணிதிரண்டு வாக்களித்து சர்வதேசத்தை திரும்பிப் பார்க்க வைப்போம், அதன் மூலம் சிங்கள பேரினவாதத்திற்கு பாடம் படிப்பிப்போம் என விளம்பரப்படுத்தியே வாக்குகளை கோரினார்கள். தலைநகர தமிழ் மக்களும் தமிழ் பிரதிநிதித்துவத்திற்காக அணிதிரண்டு வாக்களித்தார்கள். இப்படி தமிழ் பிரதிநிதித்துவத்தைப் பெற்று பெரும்பான்மை பெண்மணிக்கு பதவியை தாரைவார்த்தது தமிழர்களுக்கு இழைத்த துரோகமாகும். இந்த நியமனம் மூலம் ஜ.ம.மு. இனவாதத்தை காட்டவில்லை என்கிறார்கள். நாட்டில் வட பகுதியிலே இந்த கட்சியினர் தமிழ் இனவாதத்தை பேசி பேரினவாதத்திற்கு எதிராக செயல்படுவதை நாம் அறிவோம்.

திருமதி பிரியாணி குணரத்தின சிங்கள அதிகாரிகளிடம் தமிழ் மக்களின் பிரச்சினையை சிங்களத்தில் பேசி வேலை செய்கிறார் என மேயர் முஸம்மில் கூறுகிறார். அப்படியானால் மேயருக்கு சிங்களம் தெரியாதா? ஜ.ம.மு. மாநகரசபை உறுப்பினர்களான குருசாமி, லோரன்ஸ் போன்றவர்கள் சிங்கள மொழியில் மேடைகளில் உரையாற்ற கூடியவர்கள். இவர்களுக்கு சிங்கள அதிகாரிகளிடம் சிங்களத்தில் பேச தெரியாதா?

பிரதி மேயருடன் திருமதி பிரியாணி குணரத்தின மாநகர நிர்வாக ஆலோசனைக் குழுவில் இணைந்துள்ளதாக தெரிவிக்கும் மேயருக்கு ஏன் வேலணை வேணியன், குருசாமி போன்ற அனுபவம் வாய்ந்த தமிழ் மாநகரசபை உறுப்பினர்களை நியமிக்க முடியாதா?

பல ஆயிரம் தமிழ் மக்களின் வாக்குகளை பெற்று தமிழ் பிரதிநித்துவத்தை சிங்கள பெண்மணிக்கு தாரைவார்த்ததை நியாயப்படுத்துவதை சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த மேயர் முஸம்மில் ஆதரித்து தவறிழைக்கின்றார். இதை அவர் புரிந்து கொள்ள வேண்டும்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .