2025 ஜூன் 23, திங்கட்கிழமை

மலையகப் புத்திஜீவிகள் எதிர்பார்க்கும் ஒற்றுமை சேவல் கூட்டணியில் நிலவுகிறதா? :பிரபா கணேசன்

Kogilavani   / 2012 செப்டெம்பர் 04 , மு.ப. 09:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

'நடைபெறவுள்ள சப்ரகமுவ மாகாண சபைத் தேர்தலில் அங்கு வாழும் தமிழ்மக்கள் சேவல் சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும் என மலையக புத்திஜீவிகள் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். புத்திஜீவிகள் அரசியல்  செயற்பாடுகளில் இருந்து விலகி நின்று விமர்சனம் செய்வோராக மாத்திரமல்லாமல் இவ்வாறு பகிரங்கமாக செயற்பட முன்வருவது வரவேற்கத்தக்கது. எனினும் அவர்கள் வாக்களிக்குமாறு வேண்டியிருக்கும் அந்த சேவல் சின்னக் கூட்டணியில் அவர்கள் எதிர்பார்க்கும் ஒற்றுமை நிலவுகின்றதா என்பது கேள்ளிக்குள்ளாக்கப்பட வேண்டிய சூழலே இப்போது இரத்தினபுரியில் நிலவுகின்றது' என கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன் விடுத்திருக்கும் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்திருக்கும் அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது,

நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தலில்  சேவல் சின்னக் கூட்டணியில் மூன்று கட்சிகள் போட்டியிட்டாலும் அவை மூன்றும் ஒன்றாக தேர்தல் பிரசார பணிகளில் ஈடுபடுவதை அவதானிக்கக் கூடியதாக இல்லை. மலையக மக்கள் முன்னணியின் அரசியல்துறைத் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வே.இராதாகிருஸ்ணன் கலந்துகொள்ளும் கூட்டங்களில் இ.தொ.கா கலந்தகொள்வதில்லை. அதேபோல ஜனநாயக மக்கள் முன்னணியும் மலையக மக்கள் முன்னணியும் ஒரு அணியாகவும் இ.தொ.கா தனித்துமே பிரசார நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்ற நிலைமை காணப்படுகின்றது. எனவே இது மக்களுக்கான முறையான கூட்டணி இல்லை என்பதையே காட்டுகின்றது.

இவ்வாறு பிரிந்து சென்று பிரசாரம் செய்வதன் உச்சகட்ட விளைவாக தற்போது கூட்டணி கட்சிகளிடையே வன்முறை தோன்றியுள்ளது. ஜனநாயக மக்கள் முன்னணி வேட்பாளர் ஒருவரின் தேர்தல் பிரசார அலுவலகத்துக்குள் புகுந்த இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் குழுவினர் அங்கு அரசியல் பணிகளில் ஈடுபட்டிருந்த சிவபாலன் எனும் அரசியல் செயற்பாட்டாளரை தாக்கியுள்ளனர்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அவர், தற்போது சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பியுள்ள போதும் தாக்குதல் நடாத்திய இ.தொ.கா உறுப்பினர்களுக்கு எதிராக பொலிஸில் முறைப்பாட்டினை பதிவு செய்துள்ளார்.

சப்ரகமுவை மாகாணத்தில் எந்த காரணங்களைக் காட்டி ஓரணியாக தேர்தலில் களம் இறங்கவேண்டும் என சொல்லப்பட்டதோ அதே நிலைமை இன்று அவர்களது சேவல் கூட்டணிக்கு உள்ளாகவே இடம்பெறுவதையும் புத்திஜீவிகள் அவதானிக்க வேண்டும். இங்கு இன ரீதியான தாக்குதல்கள் ஏதும் இடம்பெறவில்லை. மாறாக இனரீதியான தாக்குதல்களுக்கு எல்லாம் முகம்கொடுக்க தமிழ்மக்களை தயார்படுத்தும் பாரிய நோக்கத்தோடு செயற்படப்போவதாக புறப்பட்ட கூட்டணியில், அதே சின்னத்திற்காக ஆதரவு தெரிவித்து அரசியல் செயற்பாட்டில் ஈடுபடும் கூட்டணி கட்சி ஆதரவாளரான சிவபாலன் எனும் சகோதரரை தாக்கியுள்ளனர் என்பது வேதைனைக்குரியது.

பொதுவாகவே அரசியல் கட்சிகள் தேர்தல் காலத்தில் கூட்டணி தொடர்பாக எடுக்கும் தீர்மானங்களை தங்களால்தான் ஆனதாக மார்தட்டிக்கொள்வதற்கு அப்பால் மலையக புத்திஜீவிகளுக்கு, இதையெல்லாம் தாண்டிய மலையக அரசியல் பொறுப்புணர்வு இருக்கிறது. ஏனெனில் இத்தகைய சிவில் சமூக தலையீடு இல்லாமலும் மலையகத்தில் பல்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு  கூட்டணிகள் அமைக்கப்பட்டு அவை தேர்தல்களில் சாதித்தும் காட்டியிருக்கின்றன என்பதையும் தற்போது சேவல் சின்னத்துக்கு வாக்களிக்குமாறு கோரி இ.தொ.காவை பலப்படுத்திவிட்டு மீண்டும் இ.தொ.காவோ மற்றைய அரசியல் அமைப்புக்களோ மலையக மக்களுக்கு எதுவும் செய்யவில்லை என விமர்சனக் கட்டுரை எழுதுவதும் புத்திஜீவித்துவம் ஆகாது என்பதையும் நினைவுபடுத்த விரும்புகிறேன்'.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .