2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

மாணவர்களின் எதிர்காலத்தை நினைத்து சேவையாற்றுங்கள்

George   / 2014 ஜூலை 23 , மு.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

மேல்மாகாணத்தில் தமிழ் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் முகமாக களுத்துறை மாவட்டத்திற்கு ஆசிரியர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ள  உங்கள் கைகளில், இன்று முதல் ஐந்து வருடங்களுக்கு இப்பிரதேசத்திலுள்ள ஏழை எளிய தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளின் எதிர்காலம் கொடுக்கப்பட்டிருக்கின்றது என நினைத்து சேவையாற்ற வேண்டும் என ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பிரபா கணேசன் தெரிவித்தார்.

மேல்மாகாண முதலமைச்சர் காரியாலயத்தில் 136 ஆசிரியர்களுக்கான நியமனம் வழங்கும் வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை கூறினார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

கடந்த இரண்டு வருடங்களுக்குள் சுமார் 1000 தமிழ் ஆசிரியர் நியமனங்கள் மேல்மாகாணத்தில் வழங்கப்பட்டுள்ளது. எவ்விதமான பரீட்சையோ நிபந்தனைகளோ விதிக்காது இவ் ஆசிரியர் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முழு ஒத்துழைப்பு வழங்கிய ஆளுநர் அலவி மௌலானா அவர்களுக்கும் முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்க அவர்களுக்கும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையிலும் மேல்மாகாண தமிழ் மக்கள் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன்.

களுத்துறை மாவட்டத்திற்கு நியமனம் பெற்று செல்லும் புதிய ஆசிரியர்களின் மூலமாக இத்தூர பிரதேசத்தில் ஐந்து வருடத்திற்கு மேல் பணி புரிந்து வரும் ஆசிரியர்களுக்கு கொழும்பு மாவட்டத்திற்கு மாற்றம் பெற்றுக் கொள்ள கூடியதாக இருக்கும். இதன் காரணமாக புதிதாக நியமனம் பெற்றவர்களுக்கு ஒரு போதும் இடமாற்றம் வழங்கப்பட மாட்டாது. இடமாற்றம் பெறுவதற்காக எனது அலுவலகத்திற்கு வர வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்கின்றேன்.

இத்தமிழ் ஆசிரியர் நியமனங்களைப் பெறுவதற்கு நாங்களும் கடினமாக உழைத்திருக்கின்றோம் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். அதே நேரத்தில் இப்படியான தமிழ் ஆசிரியர்கள் நியமனங்கள் வழங்கப்படுவதுகூட மாகாணசபையிலுள்ள தமிழ் உறுப்பினர்களுக்கு தெரியவில்லை என்பது  வேடிக்கையாக இருக்கின்றது. இங்கே இந்நிகழ்ச்சியில் மாகாணசபையில் பிரதான எதிர்கட்சியாக இருக்கும் ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினரும்  கலந்து கொண்டிருக்கும் வேளையில் தமிழ் மாகாணசபை உறுப்பினர்கள் கலந்து கொள்ளாதது வாக்களித்த மக்களுக்கு கிடைத்திருக்கும் பரிசாகும்.

மேலும பல தமிழ் ஆசிரியர் நியமனங்கள் மீண்டும் வழங்கப்படவிருக்கின்றது. அதே போல் மத்திய அரசாங்கத்திடம் க.பொ.த உயர்தர பரீட்சையில் சித்தி பெற்றவர்களுக்கும் ஆரம்பப் பிரிவு ஆசிரியர்கள் நியமனங்கள் வழங்குவதற்கான பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளேன். இவர்களுக்கு ஆசிரியர்கள் நியமனம் கிடைக்கும் பட்சத்தில் களுத்துறை பிரதேசத்தில் க.பொ.த உயர் தரம் சித்தியடைந்தவர்களுக்கும் இந்நியமனங்கள் வழங்கக்கூடியதாக இருக்கும் என அவர் கூறினார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .