2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

அரசாங்கம் கண்மூடித்தனமாக பயணிக்கிறது: பிரபா எம்.பி.

A.P.Mathan   / 2014 ஜூலை 31 , பி.ப. 05:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடு முழுவதிலும் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளில் மஹிந்த சிந்தனையில் கீழ் 280 தொழில்நுட்பவியல் பீடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. மேல்மாகாணத்திலுள்ள மூன்று மாவட்டத்திற்கும் 52 பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. அதில் கொழும்பு மாவட்டத்தில் மட்டும் 23 பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. 
 
இருப்பினும் எந்தவொரு தமிழ் பாடசாலையும் தெரிவு செய்யப்படாததை தமிழ் பாடசாலையின் அதிபர்கள், கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பிரபா கணேசன் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார்கள்.
 
இது சம்பந்தமாக பிரபா எம்.பி ஊடகங்களுக்கு தெரிவிக்கையில்,
 
1,000 பாடசாலைகள் அபிவிருத்தியிலும் கொழும்பு மாவட்டத்தில் எந்தவொரு தமிழ் பாடசாலையும் உள்வாங்கப்படாத பொழுது உடனடியாக மேல்மாகாண முதலமைச்சருடன் பேசி தெமட்டகொட விபுலானந்தா பாடசாலை இத்திட்டத்தின் கீழ் உள்வாங்கப்பட்டு இன்று அபிவிருத்திக்கான கட்டிடங்கள் கட்டப்பட்டு முடியும் தருவாயில் உள்ளன. அதேபோல் நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளை தெரிவு செய்து தொழில்நுட்பவியல் பீடங்களை அமைக்கும் புதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. 
 
ஆனால், மேல்மாகாணத்தில் தெரிவுசெய்யப்பட்ட 52 பாடசாலைகளும் மல்வானை அல்முபாரக் முஸ்லிம் பாடசாலையைத் தவிர வேற எந்த தமிழ்மொழி பாடசாலைகளும் தெரிவு செய்யப்படவில்லை. குறிப்பாக எனது கொழும்பு மாவட்டத்தில் எந்தவொரு தமிழ் பாடசாலையும் உள்வாங்கப்படாதது இத்திட்டத்தை முன்னெடுப்பவர்களின் இனவாதத்தை எடுத்துக் காட்டுகிறது. 
 
அரசாங்கம் அறிமுகப்படுத்தும் இத் தொழில்நுட்பம் கொழும்பு மாவட்ட தமிழர்களுக்கு இல்லையா என்ற கேள்வி எழும்புகின்றது.
 
இது சம்பந்தமாக கல்வியமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளேன். தமிழ் மொழி மூலம் கல்வி பயிலும் முஸ்லிம் மாணவர்களுக்கும் இத்திட்டம் சென்றடைய வேண்டும். மத்திய கல்வியமைச்சு கடந்த நான்கு வருடகாலமாக தமிழ் கல்வித்துறையை புறக்கணித்து வருகின்றது. ஓவ்வொரு முறையும் நாம் கவனத்துடன் செயல்படுவதனால் தான் எமது தமிழ் கல்வி சமூகத்தை காப்பாற்றி வரக்கூடியதாக இருக்கின்றது. 
 
இன்று இப்படியான பாரபட்சம் அரசாங்க மட்டத்தில் அனைத்து துறைகளிலும் இருப்பது அரசாங்கத்திற்கு ஒரு பாரிய பின்னடைவை எதிர்காலத்தில் ஏற்படுத்தும். கண்மூடித்தனமான ஒரு பயணத்தை இன்று அரசாங்கம் அனைத்து துறைகளிலும் முன்னெடுத்து வருகின்றது. சிறுபான்மை மக்களின் ஒட்டு மொத்த ஆதரவை அரசாங்கம் இழந்து வருவது அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கு காரணமாகிவிடும் என எச்சரிக்கை விடுக்க வேண்டியுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .