2025 ஜூன் 21, சனிக்கிழமை

ஜோர்தானிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட 2 சிறுவர்கள் பெற்றோரிடம் ஒப்படைப்பு

Thipaan   / 2014 ஓகஸ்ட் 30 , மு.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.இஸட். ஷாஜஹான்

இன்னொருவரின் கடவுச்சீட்டைப் பயன்படுத்தி சட்டவிரோதமான முறையில் இத்தாலி செல்வதற்காக அழைத்துச் செல்லப்பட்ட போது ஜோர்தானிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட இரு சிறுவர்களையும் தலா ஒரு இலட்சம் ரூபா பிணை முறியில்  பெற்றோர்களிடம் ஒப்படைக்குமாறு, நீர்கொழும்பு பிரதான நீதவான் பூர்ணிமா பரனகமகே, நேற்று வெள்ளிக்கிழமை (29) உத்தரவிட்டார்.

இந்த சிறுவர்களுடன் திருப்பி அனுப்பப்பட்ட பெண்  எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 11 வயதுடைய சிறுவன் ஒருவனும் சிறுமி ஒருவருமே  அவர்களது பெற்றோர்களிடம்  ஒப்படைக்க உத்தரவிடப்பட்டவர்களாவர்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சோதி ஜெசந்தா என்ற பெண்ணே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டவராவார்.  முகவர் ஒருவர் மூலமாகவே சட்டவிரோதமான முறையில்  வெளிநாடு செல்வதற்கு முயற்சி செய்யப்பட்டுள்ளது. இரு சிறுவர்களும் இரு பெற்றோர்களுடையவர்களாவர்.

சந்தேகநபரான பெண் இரு சிறுவர்களுடனும்  சட்டவிரோதமான முறையில் இத்தாலியை நோக்கி சென்றபோது ஜோர்தானிலிருந்து அதிகாரிகளால்  திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை (26) இவர்கள் மூவரும் கட்டுநாயக்கா விமான நிலையத்தை வந்தடைந்த போது  புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பின்னர் நீர்கொழும்பு நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட போது குறித்த பெண்ணை விளக்கமறியலில் வைக்குமாறு  நீதவான் உத்தரவிட்டார்;.
அத்துடன், இரு சிறுவர்களையும் சிறுவர் பாதுகாப்பு இல்லங்களில் வைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார்.

இந்நிலையில், இரு சிறுவர்களினதும் பெற்றோர்கள் தொடர்பாக புலனாய்வுப் பிரிவினர் விசாரணை மேற்கொண்டு  நேற்று வெள்ளிக்கிழமை இரு சிறுவர்களினதும் பெற்றோர்கள் நீதிமன்றிற்கு அழைத்து வரப்பட்டிருந்தனர்.

வழக்கு விசாரணையின் போது இரு சிறுவர்களையும் தலா ஒரு இலட்சம் ரூபாய் பிணை முறியில்  பெற்றோர்களிடம் ஒப்படைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார். இந்த வழக்கு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
சட்டத்தரணி எம்.பி.எம். மாஹிர் இருசிறுவர்கள் சார்பில் மன்றில் ஆஜராகி இருந்தார்;.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .