2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

பதுளை தமிழர்களைப் பார்த்து கற்றுக்கொள்ளுங்கள்: பிரபா எம்.பி

Gavitha   / 2014 செப்டெம்பர் 29 , மு.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடந்து முடிந்த ஊவா மாகாணசபைத் தேர்தலில் ஆளும் அரசாங்கத்துக்கு வாக்களித்ததன் மூலம் தங்களுக்கு தேவையான அபிவிருத்திகளை பெற்றுக் கொள்ளக்கூடிய வெற்றியீட்டாளர்களாக பதுளை மாவட்ட தமிழர்கள் விளங்குகின்றார்கள்.

இந்த முன்னுதாரணத்தையே கொழும்பு மாவட்ட தமிழ் மக்கள் பாடமாகக் கொண்டு செயல்பட வேண்டும் என ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் தொலைத்தொடர்புகள், தகவல் தொழில்நுட்பவியல் பிரதி அமைச்சருமான பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

ஊவா மாகாணசபைத் தேர்தல் பதுளை மாவட்ட மக்கள் ஆளும் அரசாங்கத் தரப்பில் மூன்று வேட்பாளர்களையும் எதிர்க்கட்சி சார்பில் 1 வேட்பாளரையும் வெற்றி பெற செய்து, தங்களது புத்திசாலித்தனமான நிலைப்பாட்டினை உறுதி செய்துள்ளனர். அரசாங்க தரப்புக்கு வாக்களித்து அந்த பிரதிநிதிகள் மூலமாக தங்களுக்கு தேவையான கல்வி, சுகாதாரம், பொது வசதிகள் போன்றவற்றை தமது சமூகத்தை முன்னெடுக்கக்கூடிய சூழலை உருவாக்கியுள்ளனர்.

கடந்த மாகாணசபையில் வெற்றி பெற்ற எதிர்க்கட்சி உறுப்பினரால் எந்த ஒரு அபிவிருத்தியையும் செய்ய முடியவில்லை. வெறுமனே மாகாணசபை கதிரையை அலங்கரித்ததை மட்டுமே காண முடிந்தது. அதே நிலை இம்முறை வெற்றி பெற்ற எதிர்க்கட்சி உறுப்பினருக்கும் ஏற்படும்.

இருப்பினும், ஊவாமாகாண தமிழ் மக்கள் இரு தரப்புக்கும் வாக்களித்து தமிழ் பிரதிநிதித்துவத்தை அதிகரித்துள்ளனர். ஆனால் கொழும்பு மாவட்டத்தில் வீரவசன அறிக்கை மாயைக்குள் விழுந்து உணர்ச்சி வசப்பட்டு வாக்களித்ததன் மூலமாக மேல்மாகாணசபை ஆளுந்தரப்பில் கொழும்பு மாவட்ட மக்களுக்கு தேவையான குறைந்த பட்சம் கல்வியை அபிவிருத்தி செய்வதற்கு கூட ஒரு தமிழ் உறுப்பினர் இல்லை.

கொழும்பு மாவட்டத்தில் வெற்றி பெற்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மேலும் வீரவசன ஊடக அறிக்கைகளின் மூலமாக நாடாளுமன்றத் தேர்தலைக் குறிவைத்துத்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். மாறாக வெற்றிக்கு வாக்களித்த கொழும்பு மாவட்ட வரிய ஏழை எளிய மக்களின் கல்வி, சுகாதாரம், பொது வசதிகள் எதனையும் கருத்திற் கொள்வதில்லை.

கொழும்பு மாவட்ட தமிழ் மக்கள் இதனை நன்கு மனதில் எடுத்துக் கொண்டு எதிர்வரும் காலங்களில் செயல்பட வேண்டும். அரச அபிவிருத்திகள் தேவைப்படாத நிலையிலுள்ள வசதி படைத்தவர்கள் பொருளாதார மட்டத்தில் நலிந்து போயிருக்கும், கொழும்பு வாழ் ஏழை எளிய மக்களை மனதில் கொண்டு அவர்களுக்கு அரச அபிவிருத்திகள் அவசியம் என்பதை புரிந்து கொண்டு தமது வாக்குகளை செலுத்தினால் தான் எமது சமூகத்தை மேம்படுத்தலாம் என்று தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .