2025 ஜூன் 21, சனிக்கிழமை

இது நம் நாடு என்று தமிழர் கூறினாலும் இல்லை என்கின்றது மஹிந்த அரசு: மனோ

Gavitha   / 2015 ஜனவரி 03 , மு.ப. 07:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனவரி மாதம் 8ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தலில் வாக்களித்து தமது தேசிய கடமையை செய்வோம் என்று வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்கள் முன் வந்தால் அதை மஹிந்த அரசு கொச்சைப்படுத்துகின்றது.

அதாவது, நாம் இந்நாட்டவர், இது ஒரே நாடு என்று தமிழர் கூறினாலும் இல்லை, நீங்கள் வேறு நாட்டவர் என்று மஹிந்த அரசு சொல்கின்றது என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

எதிர்கட்சி தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற விஷேட செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

த.தே.கூ. வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களின் ஆணையை பெற்ற ஒரு கட்சி. சமீபத்தில் த.தே.கூ. விடுத்திருந்த அறிவிப்பு ஆளும் அரசுக்கு எதிரான, பொது எதிரணிக்கு ஆதரவான அறிவிப்பு என்றவுடன், இந்த அரசுக்கு கோபம், ஆற்றாமை, ஆத்திரம் வந்துவிட்டது. ஒரு வேளை கூட்டமைப்பின் ஆதரவு அரசுக்கு கிடைத்திருந்தால், இந்த கோபம் மறைந்து கூட்டமைப்பின் மீது காதல் வந்திருக்கும்.

இந்த அரசு ஒரு சிறுபிள்ளைத்தனமான கொள்கையை பின்பற்றுகிறது. நாடு என்பது வேறு, அரசாங்கம் என்பது வேறு என்பதை இந்த அரசு மறந்துவிட்டது. தாம் நாட்டை நேசிப்போர் என்று, அடிக்கொரு தடவை கூறுபவர்கள், இன்று நாட்டை விட தங்கள் கட்சி அரசியல்தான் முக்கியம் என்று நிரூபித்து விட்டார்கள்.

இந்நாட்டு தேர்தல், சிங்கள நாட்டு தேர்தல். அதனால், இதில் பங்கு பற்றி வாக்களிக்கும் அவசியம் எமக்கு கிடையாது என்று, ஒருகாலத்தில் இருந்த வடக்கு, கிழக்கு வாழ் தமிழ் மக்களும் அவர்களது தலைமைகளும் இன்று இந்த தேர்தலில் பங்கு பற்றுவதன் மூலம் தாம் இந்த நாட்டு குடி மக்கள் என்ற அடிப்படையை ஏற்றுக்கொண்டு விட்டார்கள். இது ஒரு வரவேற்க கூடிய மாற்றம். இந்த நாட்டை நேசிக்கும் எவரும் இந்த மாற்றத்தை வரவேற்க வேண்டும்.

ஆனால், இந்த மஹிந்த அரசு இதை புரிந்துகொள்ள மறுக்கின்றது. மஹிந்த, தனது அமைச்சரவை சகாக்கள் மூலம், கூட்டமைப்பின் அறிவிப்பை திரித்து கூறி துர்பிரசாரம் செய்ய ஆரம்பித்துவிட்டார். கூட்டமைப்பு யாருக்கு ஆதரவு தருகிறது என்பதைவிட, வடக்கு கிழக்கு தமிழ் வாழ் மக்கள், இலங்கை ஜனாதிபதியை தெரிவு செய்யும் தேர்தலில் பங்கு பற்றுகிறார்கள் என்பது முக்கியமானதாகும்.

தேர்தலில் பங்கு பற்றி வாக்களிக்கும் தமிழ் மக்களுக்கு, தங்கள் விரும்பிய கட்சிக்கு, சின்னத்துக்கு வாக்களிக்கும் உரிமை உண்டு. இதை எவரும் தட்டி பறிக்க முடியாது. அதேபோல் அந்த மக்களின் ஆணையை பெற்ற ஒரு கட்சிக்கு தமது மக்கள் தொடர்பில்  வழிகாட்டல் செய்ய பூரண உரிமை உண்டு. இதையும் எவரும் தட்டி பறிக்க முடியாது.

இந்த அடிப்படையை இந்த அரசு புரிந்துக்கொள்ள மறுக்கிறது. தங்களது சொந்த கட்சி அரசியல் தேவைகளுக்காக, ஆட்சி நீடிக்க வேண்டும் என்ற பதவி ஆசை காரணமாக மஹிந்த அரசு படு பாதக இனவாத பிரசாரத்தை முன்னேற்றுகின்றது.

கடந்த காலங்களிலும் இத்தகைய முறையில் தங்கள் கட்சி அரசியல், பதவி ஆசைகளை நிறைவேற்றுக்கொள்ள, பெரும்பான்மை கட்சிகள் இனவாத பிரச்சாரம் செய்தார்கள். பின்னர் அவற்றுக்கான விலையை அவர்கள் கொடுக்கும் நிலைமை ஏற்பட்டது. இதற்கான விலையை இந்த அரசும் விரைவில் கொடுக்க வேண்டிவரும்.
 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .