2025 ஜூன் 21, சனிக்கிழமை

குப்பைகள் அகற்றப்படாமை குறித்து மக்கள் விசனம்

Gavitha   / 2015 ஜனவரி 19 , மு.ப. 11:23 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.இஸட்.ஷாஜஹான்


நீர்கொழும்பு நகரில் கடந்த சில நாட்களாக குப்பைகள் அகற்றப்படாமை குறித்து நீர்கொழும்பு, சுற்றுலாத்துறை ஹோட்டல் உரிமையாளர்கள் நீர்கொழும்பு மேயரிடம், திங்கட்கிழமை (19) முறையிட்டுள்ளனர்.

குப்பைகள் அகற்றப்படாமையினால் சுற்றுலாத்துறைக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் மேயரிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இது தொடர்பாக நீர்கொழும்பு மேயர் அன்டனி ஜயவீர தெரிவிக்கையில்,

'1985ஆம் ஆண்டிலிருந்து கொச்சிக்கடை, ஒவிட்டியாவத்தை பிரதேசத்தில் குப்பைகள் கொட்டப்பட்டு வந்தன. அப்போது அந்தப் பகுதியில் மக்கள் வசிக்கவில்லை. ஆனால் தற்போது அங்கு மக்கள் அதிக எண்ணிக்கையில் வசிக்கின்றனர்.

மாநகர சபையினால் அங்கு கொட்டப்படும் குப்பைகள் காரணமாக பிரதேசத்தின் சுற்றாடல் மாசடைந்துள்ளதாகவும், நுளம்புப் பெருக்கம் உட்பட பல்வேறு சுகாதாரப் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாகவும் குற்றஞ்சாட்டி, பிரதேசவாசிகள் வழக்குத் தொடர்ந்து அப்பகுதியில் குப்பைகளைக் கொட்டுவதற்கான தடையுத்தரவைப் பெற்றுள்ளனர்' எனத் தெரிவித்தார்.

நீர்கொழும்பு மாநகர சபையின் கழிவகற்றும் பிரிவினரால் கொச்சிக்கடை ஒவிட்டியாவத்தை பிரதேசத்தில் இதுவரை காலமும் குப்பைகள் கொட்டப்பட்டு வந்தன. இந்நிலையில், நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் கடந்த 16ஆம் திகதி வரை ஒவிட்டியாவத்தை பிரதேசத்தில் குப்பைகள் கொட்டப்பட்டன.

ஆனால், 16ஆம் திகதிக்கு பின்னர் நீர்கொழும்பு நகரில் குப்பைகள் அகற்றப்படாமை காரணமாக பாடசாலைகள் மற்றும் வீதிகளில் நிறைந்திருக்கும் குப்பைகளால் பெரும் சுகாதாரப் பிரச்சினைகள் ஏற்படும் என பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

மேலும் வைத்தியசாலைகளிலும் குப்பைகள் நிறைந்து காணப்படுகின்றன. குப்பைகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்காவிட்டால் கிருமி தொற்றுக்கள் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் ஓரிரு தினங்களில் நகரில் பெரும் சுகாதாரப் பிரச்சினைகள் ஏற்படுவதை தடுக்க முடியாது எனவும் வைத்தியசாலை அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .