Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 21, சனிக்கிழமை
Princiya Dixci / 2015 மார்ச் 19 , மு.ப. 05:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வடிவேல் சக்திவேல், கனகராசா சரவணன்
1990ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல 2009ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 6ஆம் திகதி வரை 41 ஊடகவியலாளர்கள் கொலைச்செய்யப்பட்டுள்ளனர் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், தெரிவித்தார்.
இன்றைய காலகட்டத்தில் பாதுபாப்பு தரப்பினரை விடவும் ஊடகத்துறையினரே அதிகமாக பயப்படுகின்றனர். பொதுவாக அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்களுக்கு அதிகம் பயப்படுவார்கள். அரசியல்வாதிகள் மேற்கொள்ளும் ஊழல்களையெல்லாம் ஊர்ந்துபிடித்து வெளிக்கொணர்பவர்கள் ஊடகவியலாளர்கள்தான் என்றும் அவர் தெரிவித்தார்.
இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், கொழும்பு தமிழ்ச் சங்க கேட்போர் கூடத்தில் செவ்வாய்க்கிழமை (17) நடத்திய ஊடகவியலாளர்களுக்கு விருது வழங்கும் விழாவும் கௌரவிப்பு நிகழ்விலும் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
தமிழ் அரசியல் கட்சிகளை பலவற்றை ஒன்றிணைத்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எனும் அரசியற் கட்சியை உருவாக்கியவர்கள் இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர்கள்தான். இதனை யாரும் மறக்கவோ மறைக்கவோ முடியாது.
1990ஆம் ஆண்டு மார்ச் மாதம், 15ஆம் திகதி றிச்சட் டி சொய்சா என்கின்ற ஊடகவியலாளர் கொல்லப்பட்டது தொடக்கம், 2009ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 6ஆம் திகதி சசிமதன் என்கின்ற ஊடகவியலாளன் கொல்லப்பட்டது வரை 41 ஊடகவியலாளர்கள் இந்த நாட்டிலே கொல்லப்பட்டிருக்கின்றார்கள். இவற்றில் 02 ஊடகவியலாளர்கள் முஸ்லிம்கள், 05 ஊடகவியலாளர்கள் சிங்களவர்கள், 34 ஊடகவியலாளர்கள் தமிழர்கள் ஆவர். இங்கு பெரும்பாலும் கொல்லப்பட்டவர்கள் தமிழ் ஊடகவியலாளர்களே.
இந்த ஊடகக் கொலைகள் எல்லாம் நாட்டிலே நிறைவேற்றுத்துறை ஆட்சிக்காலத்திலேதான் நடந்தேறியுள்ளன. முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவின் ஆட்சிக் காலத்தில் 02 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டார்கள், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கவின் ஆட்சிக் காலத்திலே 13 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டார்கள், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்திலே 26 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள்.
அத்தோடு, ஊடகவியலாளர்கள் பலர் எச்சரிக்கப்பட்டார்கள், கடத்தி செல்லப்பட்டு விடுவிக்கப்பட்டார்கள். ஊடக நிறுவனங்களும் தாக்கப்பட்டன. இவ்வாறான துன்பகரமான காலகட்டத்தில்தான் இன்றும் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்.
இதனால், 50க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் புலம்பெயர்ந்து வாழ்ந்து வருகின்றனர்.
1992ஆம் ஆண்டு தொடக்கம் 2014ஆம் ஆண்டு வரை 580 ஊடகவியலாளர்கள் சர்வதேச ரீதியில் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். இதில் நம் நாட்டில் 7 சதவீதமான ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். எனினும், ஊடகவியலாளர்களைக் கொன்றவர்கள் இதுவரையில் கைது செய்யப்படவில்லை.
தற்போது நாட்டில் ஆட்சிமாற்றம் என எல்லோரும் நினைத்துக்கொண்டு வாழ்கின்றோம். ஆனால், புலனாய்வுப் பிரிவினர், ஊடகவியலாளர்களை பின்தொடர்ந்த வண்ணமேயுள்ளார்கள்.
ஊடகவியலாளர்களின் மரணம் தொடர்பாக ஆராயப்படல் வேண்டும். இலங்கை அரசியல் மாற்றத்துக்கு வழிவகுத்த இனம் என்பதால் நாம் இதனைக் கேட்கின்றோம். இது தொடர்பாக கிடப்பில் இருக்கும் அறிக்கைகள் வெளியிடப்படல் வேண்டும். குற்றவாளிகள் தண்டிக்கப்படல் வேண்டும். இதற்கு அரசியல்வாதிகளும் தேசிய சபைப் பிரதிநிதிகளும் பாடுபட வேண்டும்.
ஊடகவியலாளர்களில் பெரும்பாலானவர்கள் வறுமையானவர்கள். கடந்த காலத்தில் பாதிக்கபட்ட ஊடகவியலாளர்களுக்கு நஷ்ட ஈடுகள் வழங்கப்படவில்லை, இவ்வாறான விடையங்களுக்கு இந்த இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியமும் பாடுபட வேண்டும். அரசியல்வாதிகளாகிய நாங்களும் ஒத்துழைப்பு வழங்குவோம் என அவர் தெரிவித்தார்.
shanmugam Thursday, 19 March 2015 07:45 PM
Good
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Jun 2025
21 Jun 2025