2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

சுற்றுலாத்துறையால் யாழ்ப்பாணத்தை வளர்க்க முடியும்

Princiya Dixci   / 2015 செப்டெம்பர் 07 , பி.ப. 01:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா 

யாழ். மாவட்டத்தின் அழிந்து போன பொருளாதார வளத்தை மீளக்கட்டியெழுப்ப சுற்றுலா பயணத்துறையினால் முழுமையான பங்களிப்பை வழங்க முடியும். யாழ்.மாவட்டத்திலும், வடபகுதியிலும் உரிய முறையில் சுற்றுலா பயணத்துறையை ஊக்குவிக்க வேண்டுமென வடமாகாண சுற்றுலா பயணத்துறை ஒன்றியத்தின் தலைவர் தவராசா திலகராஜ் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்திலுள்ள விருந்தினர் விடுதியொன்றில் நேற்று திங்கட்கிழமை (07) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே இவ்வாறு தெரிவித்தார். 

அவர் தொடர்ந்து கூறுகையில்,  

ஹோட்டல் பாடசாலையானது சர்வோதயம் மற்றும் கனடா நாட்டிலுள்ள உலக பல்கலைக்கழக அமைப்பு என்பவற்றின் உதவியுடன் நிறுவப்பட்டுள்ளது. இதற்கு சுமார் 4.5 மில்லியன் ரூபாய் நிதி கிடைக்கப்பெற்றுள்ளது. இதற்கு மேல் பயிற்சிகளை உரியமுறையில் வழங்கவென உபகரணங்களும் கிடைக்கப்பெற்றுள்ளன.

முதற்கட்டமாக 100 பேர் பயிற்சிபெற தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். இவர்களில் கடந்த கால யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு விதவையானவர்கள் மற்றும் புனர்வாழ்வு பெற்று திரும்பியவர்கள் வறுமைக்கோட்டுக்குட்பட்டவர்கள் என தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். இவர்களுக்கான வேலைவாய்ப்புக்கள் உத்தரவாதப்படுத்தப்படுவதுடன், வெளிநாடுகளிலும் வேலைவாய்ப்புக்களை பெறமுடியும். முதற் கட்டமாக இவர்களுக்கு உரிய ஆரம்ப பயிற்சிகள் வழங்கப்படுவதுடன் ஆங்கில மொழியும் கற்பிக்கப்படும். எதிர்காலத்தில் பிரான்ஸ் மொழி கற்பிக்கவும் நடவடிக்கைகள்  மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த பயிற்சி நெறியானது 6 மாத காலங்களைக் கொண்டதாகும். வாரத்தில் 3 நாட்கள் அறிமுக பயிற்சிகளையும் இரண்டு நாட்கள் செயல்முறைப் பயிற்சிகளையும் கொண்டதாக பயிற்சிநெறி நடைபெறும். பரீட்சையில் சித்தியடைபவர்களுக்கு தேசிய தொழிற்பயிற்சி அதிகாரசபையினால் தரம் மூன்றுக்கான தகுதி சான்றிதழ் வழங்கப்படும்.

பயிற்சிக் காலத்தின் போது போக்குவரத்துச் செலவு வழங்கப்படுவதுடன் காலணிகள் உட்பட உரிய உடைகளும் இலவசமாக வழங்கப்படும். எதிர்காலத்தில் ஹோட்டல்களுக்கான வேலையாட்களின் கேள்வியானது அதிகரித்து காணப்படுவதினால் அடுத்தடுத்த பயிற்சிநெறிகளும் தொடர்ந்து ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.   
 
வடமாகாண சுற்றுலா பயணத்துறை ஒன்றியத்தின் செயலாளர் மரியதாஸ்சிகோ அன்ரன் மற்றும் சர்வோதயா யாழ். மாவட்ட பணிப்பாளர் எஸ்.யுகேந்திரன் ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .