2025 மே 05, திங்கட்கிழமை

’தயக்கமின்றி தடுப்பூசியை பெற்றுக்கொள்ளவும்’

Niroshini   / 2021 மே 31 , மு.ப. 11:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-என்.ராஜ், எம்.றொசாந்த்

உலக சுகாதார ஸ்தாபனத்தினால் அங்கிகரிக்கப்பட்ட தடுப்பூசியே யாழில் வழங்கப்படுகின்றதெனத் தெரிவித்த யாழ். மாவட்டச் செயலாளர் க.மகேசன், எனவே பொதுமக்கள் தயக்கமின்றி  தடுப்பூசியை பெற்றுக்கொள்ளலாமென்றும் கூறினார்.


யாழ். மாவட்டத்தில், இன்று (31) இரண்டாவது நாளாகவும் பொதுமக்களுக்கு தடுப்பூசி வழங்கும் செயற்பாடு இடம்பெறுகின்ற நிலையில், யாழ். பரியோவான் கல்லூரி தடுப்பூசி வழங்கும் நிலையத்துக்கு வருகை தந்த மாவட்டச் செயலாளர், தடுப்பூசி வழங்கும் நிலைமைகளை ஆராய்ந்ததன் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், சில இடங்களில் உள்ள மக்கள் மிகவும் ஆர்வம் காட்டி, தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளுகிறார்களெனவும் எனினும், சில இடங்களில் உள்ள மக்கள் தடுப்பூசிகளைப் பெறுவதில் உள்ள ஆர்வம் குறைவாக காணப்படுகின்றதெனவும் கூறினார்.

வடக்கு மாகாணத்தில், முதற்கட்டமாக யாழ். மாவட்டத்துக்கு மாத்திரமே தடுப்பூசி கிடைத்திருக்கின்றதெனத் தெரிவித்த அவர், எனவே, பொதுமக்கள் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி  தடுப்பூசி பெற்றுக் கொள்ள முன்வர வேண்டுமென்றார்.

'பொதுமக்கள் தடுப்பூசியை பெறுவதில் தயக்கம் காட்டிய காரணத்தால், நேற்றைய எமது இலக்கில்  52 சதவீதமானோருக்கு மாத்திரமே தடுப்பூசி வழங்கக் கூடியதாக இருந்தது.

'எனினும், எதிர்வரும்  மூன்று நான்கு நாள்களுக்குள் இந்தத் தடுப்பூசி வழங்கும் செயற்பாடு முடிவுறுத்தப்பட வேண்டியுள்ளது
'ஏதாவது ஒவ்வாமை அல்லது ஒரு நோய் இருந்தால், அதற்குரிய அறிவுறுத்தல் அதற்குரிய நடைமுறை சுகாதாரப் பிரிவினரால் வழங்கப்படும். அவ்வாறு ஏதேனும் ஒவ்வாமை இருந்தால், வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அவர்களுக்குரிய தடுப்பூசி வழங்கப்படும். எனவே, பொதுமக்கள் தயக்கமின்றி தமக்குரிய தடுப்பூசி பெற்றுக் கொள்ளலாம்' என்றும், மாவட்டச் செயலாளர் கூறினார்.

மேலும், நாளை (01), 22 புதிய நிலையங்களை  பிரதேச செயலாளர் பிரிவுகளில் ஆரம்பிக்கவுள்ளதாகத் தெரிவித்த அவர், இந்த தடுப்பூசியை மிக விரைவாக செலுத்துவதற்கு புதிய நிலையங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன எனவும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X