2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

வலி. வடக்கு மீள்குடியேற்றப் பகுதிக்கு டக்ளஸ் விஜயம்

Kanagaraj   / 2014 மே 02 , மு.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


வலி.வடக்கு பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட மாவை கலட்டிப் பகுதிக்கு வியாழக்கிழமை (01) விஜயம் மேற்கொண்ட பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அங்கு வாழும் மக்களின் அடிப்படைத் தேவைகள் உள்ளிட்ட ஏனைய விடயங்கள் தொடர்பில் நேரில் ஆராய்ந்தறிந்து கொண்டார்.

இதன்போது அங்கு தற்காலிக மற்றும் இந்திய வீடமைப்புத் திட்டத்திலும், ஏனைய வீடமைப்பு திட்டங்களிலும் வாழ்ந்து வரும் மக்களின் அடிப்படைத் தேவைகள் தொடர்பிலும் மக்கள் எதிர்நோக்கி வரும் ஏனைய இடர்பாடுகள் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.

இதனிடையே குறித்த பகுதியில் கல்லை அகழ்ந்தெடுக்கும் போது துறைசார்ந்தோர் தமக்கு உரிய அறிவித்தல்கள் வழங்கியதன் பின்னர் அதுகுறித்து ஆராய்ந்ததன் பின்னரே அதன் பணிகளை தொடர வேண்டுமெனவும் அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமென பிரதேச செயலருக்கும், பொலிசாருக்கும் அமைச்சரினால் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

அங்குள்ள பொதுக்கிணற்றை பொது இணக்கப்பாட்டுடன் எல்லா மக்களும் குடிநீருக்காக பயன்படுத்த வேண்டுமெனவும் இதற்காக எல்லோரும் ஒற்றுமையுடன் செயற்பட வேண்டுமெனவும் அமைச்சர் கேட்டுக் கொண்டார். 

அத்துடன், அங்கு  உடனடியாக 7 குடும்பங்களுக்கு மலசலகூடங்களை அமைக்கும் வகையில் குழிகளை அமைத்துக் கொடுப்பதற்கும் இரண்டு குழாய் கிணறுகளை அமைப்பதற்கும் அமைச்சர் நடவடிக்கை முன்னெடுத்துள்ளதுடன், குழாய் கிணறுகளுக்கான நீர்ப்பம்பிகளை பெற்றுக் கொள்வது தொடர்பில் நீர் வளச்சபையின் உதவியைப் பெற்றுக் கொள்வது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.

இந்நிலையில் அந்தப் பகுதி மக்களுக்கு காணிகள் பகிர்ந்தளிக்கப்படும் போது முன்னுரிமை வழங்கப்பட வேண்டுமென்பதுடன் அதன்பின்னரே ஏனைய வெளிமாவட்டங்களைச் சேர்ந்த மக்களுக்கு வழங்க வேண்டுமென அமைச்சர் அவர்கள் துறைசார்ந்தோருக்கு பணிப்புரை விடுத்தார்.

இதனிடையே தொழிற்சாலையொன்றை நிறுவி அதனூடாக அங்கு வாழும் இளைஞர், யுவதிகளுக்கு வேலை வாய்ப்பினை வழங்குவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.

அத்துடன், தற்போது மக்கள் குடியிருப்புப் பகுதியிலுள்ள கள்ளுத்தவறணையை அப்புறப்படுத்தி அதற்கென வேறு இடத்தில் நான்கு பரப்புக் காணியை பெற்றுக் கொடுப்பதற்கான நடவடிக்கையினை மேற்கொண்ட அமைச்சர், பொது மக்களுடனும் கலந்துரையாடி அவர்களது தேவைகள் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார்.

இதன்போது வலி.வடக்கு பிரதேச செயலர் எஸ்.சிறிமோகனன், ஈ.பி.டி.பியின் வலிகாமம் இணைப்பாளர் சிவகுரு பாலகிருஸ்ணன், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கே.வி.குகேந்திரன், உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.



 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X