2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மே தின பிரகடனங்கள் வெளியீடு

Kogilavani   / 2014 மே 02 , மு.ப. 09:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

நா.நவரத்தினராசா

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மே தின நிகழ்வுகள் வியாழக்கிழமை (01) சாவகச்சேரியில் நடைபெற்றது. இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் மே தினப் பிரகடனங்கள் இன்று வெளியிடப்பட்டன.

அவையாவன

உலகத் தொழிலாளர்களின் உரிமைகள் ஐ.நா.மற்றும் மாநாடுகளின் தொழிலாளர் உரிமை சாசனங்கள், பிரகடனங்கள் என்பவற்றிலும் அந்தந்த நாடுகளின் நிறைவேற்றப்பட்டு அங்கீகரிக்கப்பட்டு நிறைவேற்றுதலுக்குரித்தான சட்டங்களினாலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் இலங்கையிலும் உழைக்கும் வர்க்க மக்களின் அடிப்படை உரிமைகள் அங்கீகரிப்பதுடன் அவை பாதுகாக்கப்படவும், நடைமுறைப்படுத்தப்படவும் வேண்டும் என  இன்று மே நாளில் நாம் வலியுறுத்தி நிற்கின்றோம்.

2.   இலங்கையில் தொழிலாளர், விவசாயிகள் மற்றும் பலதுறைகளில் அறிவியல், தொழில்நுட்பத்துறைகளில் உழைப்போர் அரச ஊழியர் அரசுசாரா தனியார்துறை ஊழியர் என்போரின் உரிமைகள் பேணப்பட வேண்டும் எனவும், நாட்டில் கட்டுப்பாடற்று உயர்ந்து செல்லும் வாழ்க்கைச் செலவை ஈடுசெய்யக் கூடிய வகையில் அவர்கள் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டு வழங்க  அரசு பொருத்தமான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்

3.   நாட்டில் வேலையில்லாதோருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படவேண்டும் என்பதுடன்  கல்வி கற்ற துறைகளுக்குப் பொருத்தமான வேலை வாய்ப்பு வழங்குவதையும் உறுதிப்படுத்த வேண்டும். வேலைபெறும் தகுதியை உடைய ஒவ்வொருவருக்கும் வேலை கிடைக்கும் வரை அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்றும்

அ. உயர் தொழில்நுட்பக் கல்லூரியில் கணக்கியல் பட்டம் பெற்ற மாணவர்களுக்கு நேர்முகத் தேர்வு முடிந்தும், நீதிமன்றத் தீர்ப்பு வழங்க உத்தரவிட்டு இன்றும் நியமனங்கள் வழங்கப்படவில்லை. இம் மாணவர்கள் மற்றும் நியமனம் வழங்கப்படாது போராடும் பட்டதாரிகளுக்கும் தொண்டர் ஆசிரியர்களுக்கும் உடன் நியமனம் வழங்க வேண்டும் எனவும்.

4.   வடக்கு- கிழக்கு மாநிலங்களில் தமிழ்-முஸ்லீம்  மக்களுக்குச் சொந்தமான நிலங்கள் அப் பிரதேசத்தில் கோவில்கள் பாடசாலைகள், பொதுக் கட்டங்கள், சொத்துக்கள் குறிப்பாக வலி வடக்கு மக்கள் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாகவும் , சம்பூர் மக்கள் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாகவும் ஒட்டுமொத்தமாக உள்நாட்டில்  சுமார்  ஒரு இலட்சம் மக்களும் இந்தியாவில், முகாம்களில் மட்டும் சுமார் இரண்டு இலட்சம் மக்களும் அகதிகளாகவுள்ளனர். அவர்களுக்கு மீளக்குடியேற்றப்படும் வரை போதுமான நிவாரணம் வழங்கப்படவேண்டும் என்றும்

5.   ஆக்கிரமிப்புக்குள்ளான சொந்தக் காணிகளில் அந்த தமிழ்-முஸ்லீம் அகதி மக்கள் மீளக்குடியேற்றப்படவேண்டும் என்பதுடன் அதற்காக அந்தக் காணிகளை ஆக்கிரமித்து நிற்கின்ற இராணுவத்தினர்  வெளியேற்றப்படவேண்டும், அந்த மக்களின் வாழ்வுரிமை உறுதிப்படுத்தப்படவேண்டும் எனவும்

6.   சட்டபூர்வமற்ற வகையில் ஆக்கிரமிப்பு நிலங்களிலிருந்து வெளியேற்றப்பட்ட மக்களை அந்த நிலங்களில் மீளக் குடியேற்ற வேண்டும் என்பதுடன் அவர்களுக்கு ஏற்பட்ட நட்டங்களும்  மதிப்பீடு செய்யப்பட்டு நட்டஈடுகள் வழங்க வேண்டும் என்றும்

7.   பொதுத் தேவைகளுக்கு என்ற பெயரில் அரசினால் இராணுவத் தேவைக்காகவும் அவர்களின் வர்த்தகம் மற்றும் ஆடம்பர தேவைகளுக்காகவும் பயன்படுத்தப்படுவதற்கு வசதியாக நிலங்களை கையகப்படுத்தும் சட்டங்களையும் அறிவித்தல்களையும் அரசு உடன் திரும்பப் பெற வேண்டும் என்றும்

8.   போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்குப் பிரதேசங்களையும் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தையும் மீளக் கட்டியெழுப்புவதற்கு அரசு எந்தவொரு திட்டத்தையும் முன் வைக்கவில்லை. மக்கள் பிரதிநிதிகளான நாடாளுமன்;ற உறுப்பினர்களையோ, உள்ளூராட்சி மன்றங்களையோ மேற்படி விடயங்களில் பங்களிக்க அனுமதிக்கவில்லை. புலம்பெயர்ந்த தமிழ் சமூகத்தையும் அனுமதிக்கவில்லை. வடக்கு மாகாண சபை முன் முயற்சிகள் எடுப்பதையும் சர்வதேச சமூகம் பங்களிப்பதையும் அரசு அனுமதிக்கவில்லை. இனிமேலாவது இக் கட்டுமானப்பணிகளில் வடக்கு-கிழக்கு மாகாணசபைகளும் மக்கள் பிரதிநிதிகளும் பங்கு பெறும் வகையில் பொருத்தமான பொறிமுறைக் கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும் அதற்கான அதிகாரங்களும் இருக்க வேண்டும் என்றும்

9.   வடக்கு கிழக்கப் பிரதேசங்களில் மூலவளங்கள் சூறையாடப்படுவது உடன் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். சுற்றுச் சூழல் பாதுகாப்புத்துறை மூலவளங்களைப் பயன்படுத்தும் போதும் அத் தொழில்துறைகளை தொடங்குவதிலும் விதிமுறைகள் தீவிரமாக அமுல் படுத்துவது மட்டுமல்ல  இல்மனைட், சுண்ணாம்புக்கல்,  மணல், களிமண் முதலான மூலவளங்கள் பயன்பாட்டில் அவ்வப் பிரதேச மாகாண மற்றும் உள்ளூராட்சி மன்றங்களில்  சிபாரிசு முக்கியமென்பது மட்டுமல்ல அவ்வாறான பயன்பாடுகள் இடம்பெறுமானால் அதன் இலாபங்கள் மாகாணங்கள் உள்ளூராட்சி மன்றங்களுக்கும் பயன் கிடைக்க வேண்டும் என்றும்

10.  வடக்கு கிழக்குப் பிரதேசக் கடலில் மீன்பிடிப்பதற்கு தடைவிதிக்கும் இராணுவ 'பாஸ்'  நடைமுறை நிறுத்தப்படவேண்டும். இந்திய சீன, தென்னிலங்கை மீனவர்கள் மீன் வளத்தைக் கொள்ளையடிப்பது உடன் நிறுத்தப்படவேண்டும் என்றும்

11.  வடக்கு கிழக்கு கடல் பிரதேசங்களில் தொழில்புரியும் மீனவர்களுக்கு உயர் விசை (Mechanised Boats) அழுத்த இயந்திர வள்ளங்கள், பல நாட்கள் தங்கி மீன்பிடிக்கும் வழங்கவும் சுதந்திரமாக தொழிலில் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்கவும் வேண்டும் என்றும்

12.  பாரம்பரியதொழில் புரிவோர் சிறு வர்த்தகர்கள் விவசாயிகள் பனம் பொருள் உற்பத்திப் பாவனையாளர் பாதிக்கப்படும் வீழ்ச்சி நிலையில் உள்ளமைக்கு வெளிநாட்டு பெரு முதலீட்டு வர்த்தககம் அனுமதிக்கப்படுவதும் கட்டுப்பாடற்ற இறக்குமதிகளும் காரணமாகும். இவ்விடயத்தில் மத்திய அரசுக்குரிய ஏகபோகம் கட்டுப்படுத்தப்படவேண்டும் மாகாண  அரசு அதற்கான அதிகாரம் கொண்டிருக்க வேண்டும் என்றும்

13.  பனைவளம் அதன் உற்பத்திகள், பயன்பாடுகள் சந்தைப்படுத்தல் என்பன  அதனிடமுள்ள கூட்டுறவுத்துறையிடமே விடப்படவேண்டும். பனைவளம் தனியார் துறையிடம் கொள்ளைபோக இடமளிக்கக் கூடாது. பனைவள அபிவிருத்தி வடக்கு மாகாணசபைக்கு மாற்றப்பட வேண்டும். பனைவள  நன்மைகள் ஆதாயங்கள் அதன் உற்பத்தித் தொழிலாளர் குடும்பங்களுக்கு பங்குடமையாக்கப்படவேண்டும் என்றும்

14.  உலகில் மேம்பட்டுவரும் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் உலகமயமாக்கல் பொருளாதாரக் கொள்கை,  சந்தைப் பொருளாதாரம் என்பனவற்றின் வளர்ச்சிக்கேற்ப உயர்தர வகுப்பு மற்றும் பல்கலைக்கழகங்கள் போதியளவு பாடத்திட்டங்கள் மாற்றியமைக்கப்படவில்லை. அறிவியல் ஆய்வுகள், தொழில் வாய்ப்பில் திட்டமிடல் அதற்கேற்ற கல்விக் கொள்கையில் பிராந்தியங்களின் வகுக்கப்பட்ட திட்டங்கள் உள்வாங்கப்படவேண்டும். தேசியக் கொள்கை எனும் வகையில் பிராந்தியங்களுக்கும் உலகிற்கும் பொருந்தாக் கொள்கைகளைத் திணிப்பது நிறுத்தப்படவேண்டும் என்றும்
 
15.  கல்விக் கூடங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்குள் இராணுவத்தினர் அத்துமீறி நுழைவது நிறுத்தப்படவேண்டும். மாணவர் கல்வியில் இராணுவத் தலையீடு நீக்கப்படவேண்டும். மாணவர் இராணுவச் சூழல் அற்ற சுதந்திரமாகவிருந்து கல்வி பயில அனுமதிக்கப்படவேண்டும் என்றும்  இராணுவத் தலையீடுகளை உயர் கல்வி அமைச்சு உடன் நிறுத்த நடவடிக்கை  எடுக்கவேண்டும் என்றும்
 
(அ) பல்கழைக்கழக ஊழியர், உயர் நியமனங்கள், நிர்வாக நடவடிக்கைகள் பல்கலைக்கழக ஆட்சிக்குழு என்பன ஆளுவோர்  அவர் அடியாட்கள் இராணுவத்தலையீடுகளால் சீர்குலைக்கப்படுகின்றமை, நிர்வாகச் சீர்கேடுகள் உடன் நிறுத்தப்பட வேண்டும் என்றும்

16.  வடக்கு கிழக்கு மாநிலத்தில் வறுமைக் கோட்டின் கீழ்வாடும் தாய்மார் குழந்தைகள் சிறுவர் உணவின்மையால் போதிய வளர்ச்சியின்றி இலட்சக்கணக்கில் வீழந்து கிடக்கின்றனர். இவர்களுக்குப் பாடசாலைகளிலும் பொது இடங்களிலும் சத்துணவு வழங்க வேண்டும் என்றும்

17.  மழையின்மையால் பாதிக்கப்பட்டு உற்பத்தி வீழ்சியடைந்த விவசாயிகளுக்கு அடுத்த கால போக மழை வரும் வரை நட்ட ஈடும் நிவாரணமும் வழங்க வேண்டும்.

18.  அரசியல் காரணங்கள் என்று கூறி சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளோர் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக விடுதலையோ நீதியோ வழங்கப்படாமல் இருக்கும் பெண்களுள்ளிட்ட கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் அல்லது நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்படவேண்டும் என்றும்

19.  போர்க்குற்றங்கள், காணாமற்போனோர், கொல்லப்பட்டவர்கள், பாலியல் கொடுமைகள் தொடர்பில் உண்மைகள் கண்டறியப்படும் வகையிலும் குற்றவாளிகள் தண்டிக்கப்படும் வகையிலும், கண்டறியப்படும் உண்மைகள் அடிப்படையிலும் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு ஏற்படும் வகையிலும் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் விசாரனைகள் நடைபெறுவதற்கும் அரசும் மக்களும் முழுழையாக ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும்

20.  இலங்கையில் நடைமுறையிலிருந்த 17ஆவது அரசியலமைப்புத்திருத்தம் ஓரளவுக்கேனும் சுதந்திரமான தேர்தல் ஆணைக்குழு, நீதி சேவை ஆணைக்குழு பொதுச்சேவை ஆணைக்குழு என்று இருந்தது. அரசு சர்வாதிகாரத்தனமாக அதனை நீக்கி  18ஆவது அரசியலமைப்புச் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றி நிர்வாகமுறை ஜனாதிபதியிடம்  அதிகாரங்களைக் கையளிக்க நடவடிக்கை எடுத்தது. 18ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் உடன் நீக்கப்பட்டு 17ஆவது அரசியலமைப்பு திருத்தம் மீண்டும் நடைமுறைக்குக் கொண்டு வரப்படவேண்டும் என்றும்

21.  ஆட்சி அதிகாரங்களைப் பகிர்ந்து மாகாணங்களுக்குக் குறிப்பாக வடக்கு கிழக்கு இணைந்த மாநிலத்திற்கு அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டுமெனவும், அதற்கு அப்பால் சென்று அதிகாரங்கள் பகிரப்பட்டு அர்த்தமுள்ள அரசியல் தீர்வு எட்டப்பட  வேண்டும் எனவும் இந்திய அரசு வற்புறுத்துகிறது. அத்துடன் உள்ளூராட்சி மன்றங்களுக்கும் தேவையான போதிய அதிகாரங்கள் பகிர்தளிக்கப்படவேண்டும் எனவும்

22.  கல்விக்கொள்கை, உயர்கல்விக்கொள்கை வகுப்பதிலும் ஆசிரியர் தேர்வு, இடமாற்றங்கள் ஊதிய உயர்வு ஆசிரிய மாணவர்கள் நலவுரிமைகள் முதலான விடயங்களில் ஆசிரியர் சங்கங்களுடன் கலந்து ஆலோசித்து தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதில் உயர்கல்வி ,பொதுக்கல்வி அமைச்சுக்களும் மாகாணக் கல்வி அமைச்சுகளும் விதிமுறைகளைப் பொருத்தமாக உருவாக்கப்படவேண்டும் என்றும்

23.  போரினால் பாதிக்கப்பட்ட தொழில்துறையினர்  விவசாயிகள் வறுமைக்கோட்டின் வாழும் மக்கள் வங்கிகளிடம் பெற்ற கடன்களை, வட்டியைக்கட்டுவதில்      இயலாமலுள்ளனர்.  வங்கி ஊழியர்களும் நெருக்கடிகளுக்குள்ளாகின்றனர். அதுபோல வெள்ளம், வரட்சியினால் விவசாயிகள் பெரும்பாதிப்புக்குள்ளாகின்றனர். இத்தகையவர்களின் கடன்களை பொதுத் திட்டமொன்றின் கீழ் நீக்கி விட அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும்

24.  கூட்டுறவுத்துறை குறிப்பாக வடபகுதியில் மக்களின் தேவைகளிலும் பொருளாதாரவிருத்தியிலும், சமூகப்பங்களிப்பிலும்பெரும் பங்காற்றிப் பெருமை சேர்த்திருக்கிறது. ஆனால் புதிய பொருளாதாரக்கொள்கை, தனியார்மயக்கொள்கை பெரு முதலாளிகளின் முதலீடுகளினால் கூட்டுறவுத்துறை பெரிதும் வீழ்ச்சியடைந்துள்ளது. ஊழியர்களுக்குக்கூட சம்பளம் வழங்கமுடியாமலும் உள்ளன. தனியார் துறையுடன் போட்டிபோட்டு முன்னேறுவதற்கு அரசு கூட்டுறவுத்துறைக்கு நிவாரணம் வழங்க வேணடும். ஊக்கமளிக்க வேண்டும். கூட்டுறவுத்துறைக்கு புத்துயிர் அளிக்கப்படவேண்டும் என்றும்

25.  வடபகுதி விவசாயிகளின் உற்பத்திப் பெருக்கம் ஏற்படுகின்ற காலப்பகுதியில் வெளிநாட்டிலிருந்தும் தெற்கிலிருந்தும் அப்பொருட்களின் இறக்குமதி,  வடபகுதிக்கு இறக்குமதி செய்வதையும் நிறுத்துவேண்டும் என்றும்

26.  பாரம்பரியமாகப் பனங்கள் இறக்குமதியீலீடுபடுபவர்கள் நவீன முறைகளினூடாக ஊக்கப்படுத்தப்பட வேண்டும், புளிப்பு நீக்கியும், பதநீர் ஆக்கியும்  மக்கள் பாவனைக்கு தரமிக்க மருத்துவப் பானமாக மலிவு விலையில் விற்பனை செய்யப்படவும் நடவடிக்கை எடுக்கவேண்டும். காலம்காலமாக இத் தொழில்களிலீடுபடுவோர் கொத்தடிமைகளாக நடத்தப்படகின்றனர். பனம் பொருள் பண்டங்கள் உற்பத்தி   குடிசைக் கைத் தொழிலாகவும், கூட்டுறவத்துறை அப்பண்டங்களைச் சந்தைப்படுத்தவும் பனம் பொருள் உற்பத்தியினால் வரும் ஆதயங்களில் அத்தொழிலாளர்கள் பங்க தாரராகவும் மாற்றப்படவேண்டும் என்றும்

27.  போதைவஸ்துக்கள், வீரியத்தன்மை அதிகரித்த மேலை நாட்டுக் குடிவகைகள், பாவனை தமிழர் பிரதேசங்களில் அதிகரித்தள்ளன. இளம் சமூகம் கலாசார சீரழிவுகளிலிருந்து பாதுகாக்கப்படவேண்டும். பெண்கள் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்படுவதும் சிறுவர் துஷ்பிரயோகங்களுக்கள்ளாக்கப்படுவதும் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். மக்கள் மத்தியில் இதற்கான விழிப்புணர்வூட்ட ப்படுவதுடன் இளம் பெண்கள் சிறுவர்கள் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படவேண்டும்.இதற்கென சட்டம் ஒழங்கு அதிகாரங்கள் மாகாணங்களுக்கு இருக்க வேண்டும் எனவும்

28.  இலங்கையில் நடைமுறையிலிருக்கும் கொடூர பயங்கரவாதத் தடைச்சட்டம் முற்றாக நீக்கப்படவேண்டுவதுடன் அதனால் ஏற்பட்ட பாதிப்புக்கள் நம்பிக்கை வாய்ந்த விசாரணைக்குழுவினால் விசாரிக்கப்பட்டுப் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் எனவும்

29.  இலங்கையில் ஒற்றை ஆட்சி, சர்வ அதிகார நிர்வாக ஐனாதிபதிஆட்சி அரசியலமைப்பின் கீழ் வடக்கு கிழக்கில் பேரினவாத பௌத்த, இராணுவ மேலாதிக்கத்தினால் தமிழ் முஸ்லீம் மக்களுக்குரித்தான நிலங்கள், சொத்துக்கள் ஆக்கிரமிப்புக்கும, கொள்ளையடிப்புக்கும், வர்த்தகத்திற்கும் உள்ளாக்கப்பட்டு வருவது மட்டுமல்ல தமிழ்த் தேசிய இனத்தின் தனித்துவமும் அடையாளங்களும் அழிக்கப்படும் நடவடிக்கைகள் கடந்த ஐந்து ஆண்டுகளில் தீவிரமடைந்து வருகிறது. அத்துடன் பௌத்த மேலாதிக்கமானது ஆட்சியினதும் இராணுவத்தினதும் பாதகாப்புடன் ஏனைய மதங்களையும் சமய நம்பிக்கைகளையும் சிதைத்து அழித்துவரும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது. அதற்கு புனித பிரதேசம், புதைபொருள் ஆராய்ச்சி எனும் பிரகடனங்களும் பயன்படத்தப்பட்டு வரலாறுகள் அழிக்கப்பட்டும் வருகின்றன. இதனால் பேரினவாத பௌத்த, இராணுவ ஆதிக்கமும்  அதன் நடவடிக்கைகளும் தடுத்து நிறுத்தப்படவேண்டும், அதற்காக சிங்கள-தமிழ்-முஸ்லீம் முற்போக்குச் சக்திகள் மற்றும் ஐனநாயக சக்திகள் ஒன்றினைந்து போராடவும் முன் வரவேண்டும் எனவும்

30.  இலங்கையில் மனித உரிமைகள், மனிதாபிமானச் சட்டங்கள் மற்றும் ஐனநாயக அடிப்படை உரிமைகள் மீறப்படுவது தீவிரமாக மீறப்படுவது மட்டுமல்ல தமிழ்த் தேசிய இனம் பூண்டோடு அழிக்கப்படும்  நடவடிக்கைகளும் தீவிரமடைந்து வருகின்றன. ஐ.நா.மனித உரிமைப் பேரவையின் 2012, 2013, 2014 ஆம் ஆண்டுகள் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் இதனை உறுதிப்படுத்துகின்றன. அதுமட்டுமல்லாமல்  அரசும் பொறுப்புக் கூறும் கடப்பாட்டை நிறைவேற்ற மறுத்து வருவதையும் அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ளன.  இதனடிப்படையில்  இலங்கையில் ஒரு தேசிய இனம், தமிழ் தேசிய இனம் அழிக்கப்படுவதை சர்வதேசம் பூரணமாக மதிப்பிட்டு தமிழ்த் தேசிய இனமும் ஏனைய சிறிய தேசிய இனக் கூறுகளும், அவர் மதங்களும் நிலங்களும், சொத்தக்களும,; பண்பாடுகளும் பாதுகாக்கப்படும் வகையில் சர்வதேச சட்டங்கள் தீர்மானங்கள் பிரகடனங்களைப் பயன்படுத்தி, சர்வதேசம், பாதிக்கப்படும் இனங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், அவற்றின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொறுப்பை நிறைவேற்ற வேண்டும் எனவும்

31.  இலங்கையில் புரையோடிப்போயிருக்கும் இனப்பிரச்சினைக்குத்  தீர்வை முன் வைக்கும் எண்ணமோ தீர்த்து வைக்கும் திடசங்கற்பமோ  இன்றைய அரசுக்கும் ஆட்சிக்கும் இல்லை.  தமிழ்த் தேசிய இன மக்கள் இலங்கை சுதந்திரம் பெற்றதாகச் சொல்லப்படும்  அறுபது ஆண்டுகளாகவும் குறிப்பாக 2009 போருக்குப் பின்னராகவும் தொடர்ச்சியாக  ஏற்ப்பட்ட ஜனநாயக சந்தர்ப்பங்களில்  அரசியல் தீர்வுக்காக வெளிப்படுத்தி வந்த திடசங்கற்பத்தினையும் தீர்ப்புக்களையும், போராட்டங்களின் நோக்கங்களையும், மக்களின்  அர்ப்பணம், தியாகங்களையும் மாறி மாறி வந்த அரசுகள் மதிப்பிடவில்லை. புறக்கணித்தே வந்துள்ளன. ஐனநாயகத் தீர்ப்புக்களை ஏற்று தீர்வு காணும் ஜனநாயக அரசாங்கம் ஒன்று இன்னும் இந் நாட்டில் ஏற்படவில்லை.  இருப்பினும் இன்று உருவாகி வரும் சர்வதேச சந்தர்ப்பங்களைப் பற்றி நின்று  இப் பிராந்தியத்தில் இந்தியாவில் ஏற்படக்கூடிய அரசியல் ஆட்சி மாற்றங்கள்  மதிப்பிட்டு, இராஜதந்திர மற்றும் மூல உபாயங்களை வகுத்து, தமிழ்த் தேசிய  இன மக்களுக்கும் ( முஸ்லீம் ) சமூக மக்களுக்கும் உரித்தான இறைமை, சுயநிர்ணய உரிமை மற்றும்  ஜனநாயக அடிப்படை உரிமைகள், மனித உரிமைகள் மனிதாபிமான உரித்துக்கள் அடிப்படையிலும் ஒன்றுபட்ட இலங்கைத்தீவில் வடக்கு கிழக்கு மாநிலத்து  மக்கள் தம்மைத் தாமே ஆளும் தன்னாட்சி உரிமையை அங்கீகரிக்கும் அரசியல் தீர்வு ஒன்று ஏற்பட அனைவரும் ஓரணியில் அணி திரண்டு இயங்கவும், ஐனநாயக வழிமுறைகளில் போராடவும் அவ் இலக்கை  அடையவும். இம் மே நாளில் உறுதி பூணுவோம்.

32.  இம் மேநாளில் உழைக்கும் வர்க்கம் தொழிலாளர், விவசாயிகள்  அறிவியலாளர், புதிய தொழில் நுட்பவியலாளர்,  நுகர்வொர் மொத்தத்தில் உழைக்கும் வர்க்கத்தின் உரிமைக்காக உள்நாட்டிலும் உலகத்தோடு ஒட்டியும் குரல் கொடுக்கவும்  போராடவும் பயனுறவும் ஒன்றுபட்டு உழைப்போம் எனவும் இலங்கையில் புரையோடிப் போயிக்கும் தீர்க்கப்படாமலிருக்கும் ஒரு தேசிய இன அடையாளத்தையே அழித்து விட பேரினவாத சக்திகள் அரசின் நிகழ்ச்சி நிரலில் இயங்கும் போது போர்க்குற்றங்களை விசாரிக்கவும் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணவும் ஏற்பட்டு வரும் சர்வதேசத்தின் சந்தர்ப்பங்களையும் அனுசரணையையும் பற்றி நின்று இராஜதந்திர மூலோபாய அணுகுமுறைகளில் ஒன்றுபட்ட  இலங்கைத் தீவில்  வடக்கு கிழக்கு வாழ் தமிழ் முஸ்லீம் மக்கள் தம் மண்ணில் தன்னாட்சி உரிமையை நிலை நாட்டும் அரசியல் தீர்வை சர்வதேசமே அங்கீகரி எனவும் அணி திரண்டு உரக்க உயரக் குரலெழுப்புவோம்! செயலாற்ற உறுதி பூணுவோம் வாருங்கள் என அறைகூவல் விடுக்கின்றோம்.

போன்ற பிரகடங்கள் வெளியிடப்பட்டன.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X