2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

சிவில் பாதுகாப்பு குழுவில் இருப்பவர்கள் அடிமைப்படுத்தப்பட மாட்டார்கள்: அனந்த பீரிஸ்

Menaka Mookandi   / 2014 ஜூன் 05 , மு.ப. 10:50 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.றொசாந்த்


சிவில் பாதுகாப்பு குழுவில் இணைத்துக்கொள்ளப்பட்டவர்கள் ஒரு போதும் இராணுவத்தினரால் அடிமைப்படுத்தப்பட மாட்டார்கள். அவர்கள் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் கீழே பணியாற்றுவார்கள் என சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் அத்தியட்சகர் அட்மிரல் அனந்த பீரிஸ் தெரிவித்தார்.

பலாலி பாதுகாப்பு படைத்தலைமை அலுவலகத்தில் யாழ். மாவட்டத்தில் இருந்து சிவில் பாதுகாப்பு குழுவுக்கு இணைத்துக்கொள்ளப்பட்டவர்களுக்கான நியமன கடிதங்கள் வழங்கும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை (05) மதியம் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

சிவில் பாதுகாப்பு குழுவில் இணைத்து கொள்ளப்பட்டவர்களில் யாரும் நாங்கள் இராணுவத்தினரால் அடிமைப்படுத்தப்படுவோம் என ஒரு போதும் நினைக்க வேண்டாம். சிவில் பாதுகாப்பு திணைக்களம் என்பது அரச திணைக்களம். தற்போது நாங்கள் எமது திணைக்களத்தின் ஊடாக பல்வேறுபட்ட அபிவிருத்திகளை மேற்கொண்டுள்ளோம்.

இந்த திணைக்களத்தின் ஊடாக கல்வி, கலாச்சாரம், விவசாயம் என பல்வேறுபட்ட அபிவிருத்திகளை அரசாங்கத்துடன் சேர்ந்து முன்னெடுத்து வருகின்றோம். யாழ்ப்பாணத்தில் சிவில் பாதுகாப்பு திணைக்களம் இல்லாதமையால் இராணுவத்தின் ஒத்துழைப்பு எமக்கு தேவைப்படுகின்றது. இதேபோல தான் கிளிநொச்சியில் சிவில் பாதுகாப்பு குழு ஆரம்பித்த போதும் எமக்கு இராணுவ ஒத்துழைப்பு தேவைப்பட்டது.

அப்போது அங்கு இராணுவ கட்டளைத்தளபதியாக மேஜர் ஜெனரல் உதயபெரேராவே கடமையாற்றினார். அவர் பல்வேறு உதவிகளை எமக்கு செய்திருந்தார். அதேபோல இங்கு (யாழ்ப்பாணத்தில்) தற்போது ஆரம்பிக்கும் போதும் அவர் எமக்கான உதவிகளை செய்வார்.

சிவில் பாதுகாப்பு குழுவில் முதற் தடவையாக இணைத்துக் கொள்ளப்படவர்களுக்கு மாதாந்த சம்பளமாக 18 ஆயிரம் வழங்கப்படும். அதேவேளை அவர்களின் கல்வி நடவடிக்கையை முன்னேற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

சிவில் பாதுகாப்பு குழுவில் கடமையாற்றும் ஒருவர் இறந்து போனால் அவரின் பிள்ளைகளுக்கு ஒரு மில்லியன் ரூபாய் ஒதுக்கப்படும். அதன் ஊடகாக கிடைக்கும் பணத்தின் வட்டி மூலம் அவரது பிள்ளைகள் வாழ்க்கையினைக் கொண்டு நடத்தலாம்.

இறப்பு நடந்தால் இறப்பு தொகையாக 3 இலட்சம் வழங்கப்படும். அதேபோல விண்ஷட நிகழ்வுகளுக்கான கொடுப்பனவுகளும் வழங்கப்படும். சிவில் பாதுகாப்பு குழுவில் ஆறுமாதங்கள் தொடர்ச்சியாக திறமையாக வேலை செய்பவர்களுக்கு மோட்டார் சைக்கிள், துவிச்சக்கர வண்டிகள் என்பனவும் வழங்கப்படும்

இத்திணைக்களத்தில் திறமையாக வேலை செய்பவர்களில் 20 பேர் தெரிவு செய்து இந்தியாவுக்கு அழைத்து செல்லப்படுவார்கள்.

இன்றைய தினம் நியமன கடிதம் வழங்கப்படவர்களுக்கான சீருடைகளும் அவரவர் கல்வித்தகைமை மற்றும் திறமைக்கான வேலைகளும் விரைவில் வழங்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X