2025 ஜூலை 14, திங்கட்கிழமை

'தமிழர்களுக்கு நூறு நாள் திருப்தியில்லை'

Suganthini Ratnam   / 2015 ஏப்ரல் 24 , மு.ப. 04:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

- நா.நவரத்தினராசா

ஆட்சிக்கு வந்த புதிய அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டத்தில் தமிழ் மக்கள் திருப்திப்படக்கூடிய வகையில் எதுவும் நடைபெறவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாணசபை உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசாங்கத்தின் 100 நாள் வேலைத்திட்டம் தொடர்பில் சித்தார்த்தனிடம் வினாவியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

தொடர்ந்து தெரிவித்த அவர்,

'கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஒட்டுமொத்த தமிழ் மக்களும் இணைந்து ஆட்சி மாற்றத்துக்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களித்து புதிய ஆட்சி அமைக்கப்பட்டது. கடந்த காலங்களில் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட அடக்கு முறைகளின் வெளிப்பாடாகவே மக்கள் ஆட்சி மாற்றத்தை எதிர்பார்த்தனர்.

பல்வேறு நம்பிக்கைகளின் அடிப்படையில் பலத்த எதிர்பார்ப்புக்கள் தமிழ் மக்களிடம் இருந்தது. ஆட்சி அமைத்த புதிய அரசாங்கமும் 100 நாள் திட்டம் என்று கூறி மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியிருந்தன. தென்னிலங்கை மக்களுக்கு அரசாங்கம் பலதை செய்திருந்தாலும், தமிழ் மக்களுக்கு பெரிதாக எதனையும் செய்யவில்லை.

நம்பிக்கையுடன் வாக்களித்த மக்கள் திருப்திப்படக்கூடிய வகையில்  100 நாள் திட்டம் நடைபெறவில்லை. சில ஆரம்பங்கள் நடைபெற்றிருக்கின்றன. குறிப்பாக, நீண்டகாலமாக இராணுவத்தினரின் ஆக்கிரமிப்பில் உயர்பாதுகாப்பு வலயமாக இருந்த பிரதேசங்களில் 1,000 ஏக்கர் நிலப்பரப்பு விடுவிக்கப்பட்டு, மக்கள் மீள்குடியமர்த்தப்படவுள்ளனர்.

தமிழ் மக்களின் தேவைகளை நிறைவேற்றக்கூடிய அல்லது பிரச்சினைகளை தீர்க்கக்கூடிய வகையில் பெரிதாக எந்த மாற்றமும் ஏற்படவில்லை. புனர்வாழ்வு அளிக்கப்பட்டவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டு, அவர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும். நீண்டகாலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்ற அரசியல் கைதிகளின் விடுதலை, காணமாற்போனவர்கள் கண்டறியப்படவேண்டும், இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகள் முழுமையாக விடுவிக்கப்பட்டு மீள்குடியேற்றம் செய்யப்பட வேண்டும் உள்ளிட்ட விடயங்களையே செய்ய வேண்டும் என்று நாம் அரசாங்கத்திடம் கோரியிருந்தோம்.

அவற்றில் பலதை அரசாங்கம் செய்யத்தவறிவிட்டது. குறிப்பாக, காணாமல் போனோர் விடயத்தில் அரசாங்கம் இதுவரையில் எந்தவித ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. இத்தகைய விடயங்களை அரசாங்கம் கட்டாயம் செய்து கொடுக்க வேண்டும்.

இவற்றைச் செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, அரசாங்கத்திடம் மீண்டும் கோரிக்கை முன்வைப்போம்' எனத் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .