2025 ஜூன் 28, சனிக்கிழமை

'தமிழகத்திலிருந்து மீள்குடியேறவரும் மக்களுக்கான ஏற்பாடுகள் என்ன?'

Thipaan   / 2015 ஜூன் 22 , மு.ப. 08:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழகத்திலுள்ள முகாம்களிலிருந்து இலங்கை வந்துள்ள மக்கள் தங்களது சொந்த நிலங்களில் மீள்குடியேற இயலாத நிலையில் பரிதவித்து வருவதாக தெரிவிக்கின்றனர். எனவே, இம் மக்களின் மீள்குடியேற்றத்துக்கான ஏற்பாடுகள் என்ன? என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

யாழ். குடா நாட்டிலிருந்த தங்களது சொந்த இடங்களிலிருந்து 1990ஆம் ஆண்டு வெளியேறி, இந்தியா - தமிழகம் சென்று, அங்கு முகாம் வாழ்க்கை வாழ்ந்து வந்த மக்களை, தற்போதைய ஆட்சியில் இலங்கை வந்து மீள்குடியேறுமாறு அழைப்பு விடுக்கப்பட்டது என தெரிவித்தார்.

இவ் விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அவர்,

தமிழ் நாட்டுக்கு இடம் பெயர்ந்து சென்றிருந்த எமது மக்கள், அங்கு பல்வேறு துயரங்களுக்கு மத்தியில் முகாம் வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர்.

தங்களது வாழ்க்கையை ஓரளவுக்குக் கொண்டு செல்லும் இவர்கள், எந்தவிதமான பொருளாதார வசதிகளையும் உடையவர்கள் அல்லர்.

இந்த நிலையில், இலங்கையில் தங்களது சொந்த நிலங்களில் வந்து மீள்குடியேறுமாறும், இவ்வாறு வருபவர்களுக்கு பல்வேறு வசதிகள் செய்து கொடுக்கப்படுமென்றும் தற்போதைய அரசு அழைப்பு விடுத்திருந்தது.

இதற்கமைய குறிப்பிட்ட சிலர் இலங்கை வந்துள்ளனர். இவ்வாறு வருகை தந்தவர்கள் கோலாகலமாக வரவேற்கவும்பட்டனர்.

தமிழகத்தில் இம் மக்கள் வாழ்ந்திருந்தபோது, துயரங்கள் நிறைந்திருந்தும், குடியிருக்கத்தக்க வசதிகளை இந்திய அரசு செய்துகொடுத்திருந்தது.

எனினும், தங்களது சொந்த நிலங்களில் வாழ வேண்டும் என்ற உணர்வுகளுடனும் இலங்கை அரசு தங்களது மீள்குடியேற்றத்துக்கான வசதிகளை செய்து கொடுக்கும் என்ற நம்பிக்கையுடனும் இலங்கை திரும்பிய இம் மக்கள், இன்று அநாதரவான நிலையில் கைவிடப்பட்டுள்ளதாகக் குற்றஞ்சுமத்துகின்றனர்.

இம் மக்களின் மீள்குடியேற்றத்துக்கான வசதிகளை செய்து கொடுப்பது அரசின் கடமையாகும். இதனை உணர்ந்து அரசு, உடனடி நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .