2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

கூட்டமைப்பை புளொட் சீர்குலைக்காது: சித்தார்த்தன்

Menaka Mookandi   / 2015 ஜூலை 02 , மு.ப. 10:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை சீர்குலைக்கும் வகையில் எவ்வித முடிவுகளையும் எமது கட்சியான தமிழ் மக்கள் விடுதலைக் கழகம் எடுக்காது என அவ்வமைப்பின் தலைவர் த.சித்தார்த்தன் தெரிவித்தார்.

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் புளொட் அமைப்பின் செயற்பாடுகள் குறித்து அவரிடம் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதுகுறித்து, அவர் மேலும் கூறுகையில், 'தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றியை உறுதி செய்யும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் எமது கட்சி வேட்பாளர்களை நிறுத்தவுள்ளோம்' என்றார்.  

'பொதுத் தேர்தல் குறித்து கட்சி பிரமுகர்களுடன் அண்மையில் கலந்துரையாடினோம். இதற்கிணங்க மட்டக்களப்பு, வன்னி போன்ற மாவட்டங்களில் போட்டியிடுவது குறித்து இதுவரை தீர்வு எட்டப்படவில்லை. திருகோணமலை, அம்பாறை போன்ற மாவட்டங்களில் போட்டியிடுவதற்கான முடிவுகள் எட்டப்பட்டுள்ளன.

மட்டு, வன்னி மாவட்டங்களிலும் போட்டியிடுவதற்கான சந்தர்ப்பம் எமக்கு கிடைக்கும். அதன் பின்னரே வேட்பாளர் சம்பந்தமாக உத்தியோகபூர்வ முடிவுகள் எடுக்கப்படும். மட்டக்களப்பு மாவட்டம் சார்பாக எந்தவொரு நபரையும் எமது கட்சி சார்பாக நிறுத்துவதற்கு முடிவெடுக்கவில்லை' என்றும் அவர் கூறினார்.

'என்னுடன் பலர் தொடர்புகொண்டு சந்தர்ப்பம் தருமாறு கேட்கின்றனர். இதேபோன்று தான் செட்டிபாளையத்தைச் சேர்ந்த ஒரு ஆசிரியரும் நாடாளுமன்றம் கலைப்பதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு என்னிடம் நேரில் வந்து தன்னை வேட்பாளராக நியமிக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.

இதன்போது அவருக்கு எந்தவிதத்திலும் உறுதியளிக்கவில்லை. இருந்தும் அவரை நான் இம்முறை வேட்பாளராக நியமித்ததாக செய்திகளில் பார்க்கின்றேன். இது எந்தவிதத்திலும் உண்மையில்லை.
இந்தச் செய்தியின் பின்னர் மட்டக்களப்பில் இருந்து சில கட்சிகளின் எதிர்ப்புக்கள் வந்த வண்ணம் உள்ளன. காரணம், அவர் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியில் தேர்தலில் போட்டியிட்ட காரணத்தினால் இந்த எதிர்ப்புக்கள் வந்துகொண்டிருக்கின்றன.

கூட்டமைப்பை சீர்குலைக்கும் வகையில் எந்தவித முடிவினையும் எமது கட்சி எடுக்காது என்பதை நான் உறுதியாகக் கூறிக்கொள்ள விரும்புகிறேன்;. பட்டிருப்புத் தேர்தல் தொகுதியில் இம்முறை கூடுதலான வேட்பாளர்கள் தேர்தலில் இறங்கவுள்ளதால் இத்தொகுதியில் எமது கட்சி சார்பாக வேட்பாளரை நிறுத்துவது சாத்தியமற்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வேறு தொகுதியில் தான் வேட்பாளர்களை நிறுத்துவதற்குரிய நடவடிக்கைகளை எமது கட்சியின் மட்டக்களப்பு கிளை மேற்கொண்டு வருகின்றது' என அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .