Princiya Dixci / 2015 நவம்பர் 17 , மு.ப. 11:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
-இக்பால் அலி
வடமேல் மாகாண சபையில் ஏனைய பாடசாலைகளுக்கு ஒதுக்கப்படுகின்ற வளப்பங்கீடுகள் நிதி ஒதுக்கீடுகள் இடம்பெறும் போதெல்லாம் குருநாகல் மாவட்டத்திலுள்ள தமிழ் மொழி மூலப் பாடசாலைகளுக்கு நியாயமான முறையில் பகிர்ந்தளிக்கப்படுவதில்லை என்று வடமேல் மாகாண சபை உறுப்பினர் ரிஸ்வி ஜஹவர்ஷா தெரிவித்தார்.
என்னுடைய 13 வருட கால அரசியல் பயணத்திலே எமது சமூகம் சார்ந்த விடங்களுக்காக குரல் கொடுத்தோ போராட்டங்கள் நடத்தியோ அதிலே எந்தப் பயனையும் காணவில்லை. நாம் இதுவரையும் தோல்வி அடைந்தவர்களாக இருந்து கொண்டு இருக்கின்றோம். இந்தப் பயணம் தொடர வேண்டுமா எனவும் நாங்கள் யோசிக்க வேண்டி இருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.
குளியாப்பிட்டிய கல்வி வலயத்துக்கு உட்பட்ட யகம்வெல முஸ்லிம் வித்தியாயலத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கௌரவ அதிதியாகக் கலந்து கொண்ட வடமேல மாகாண சபை உறுப்பினர் ரிஸ்வி ஜவஹர்ஷா அங்கு இவ்வாறு இதனைத் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து பேசுகையில்,
இந்த வருடத்தில் பாடசாலைகளில் நிலவும் பௌதீக வளப் பற்றாக்குறை, வகுப்பறைக் கட்டடங்கள் மற்றும் விஞ்ஞான ஆய்வு கூடம் போன்றவற்றை நிர்மாணிப்பதற்காக மத்திய அரசாங்கத்திடமிருந்து கிடைக்கப் பெற்ற நிதி 571 மில்லியன் ஆகும். அதேபோன்று உலக வங்கியின் நிதி உதவி ரூபாய் 221 மில்லியன் ஆகும். இந்த மொத்த நிதிதொடர்பாக வடமேல் மாகாண சபையில் பகிர்ந்தளிக்கும் விடயம் தொடர்பாக கதைக்கப்பட்டது.
நாங்கள் தமிழ் மொழி மூலமான பாடசாலைகள் தொடர்பாக வளப்பற்றாக் குறை தொடர்பாக நிதி ஒதுக்கீடு செய்து தருமாறு ஆலோசனைகள் பரிந்துரைகள் செய்தோம். எவ்வளவு கதைத்தும் குருநாகல் மாவட்டத்திலுள்ள தமிழ் மொழி மூலப் பாடசாலைகள் இரண்டுக்கு மட்டும்தான் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
குருநாகல் மாவட்டத்திலுள்ள தமிழ் மொழி மூலப் பாடசாலைக்கு கிடைக்கப் பெற்ற மிகச் சொற்பமான நிதி இவ்வளவுதான். நாங்கள் மாகாண சபையில் இருந்து கொண்டு இது தொடர்பாக தொடர்ந்து பேசிப் பேசி இருப்பதில் அர்த்தமில்லை எனவும் இந்த மாகாண சபையிலிருந்து விலகி இருப்பதுதான் இலகுவானது எனவும் கருத வேண்டி இருக்கிறது என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .