-எஸ்.எம்.மும்தாஜ், எம்.என்.எம்.ஹிஜாஸ்
தெதுரு ஓயா ஆற்றில் குளிக்கச் சென்ற இரு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பள்ளம பொலிஸார் தெரிவித்தனர். இன்று ஞாயிற்றுக்கிழமை பகல் பள்ளம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெதுரு ஓயா ஆற்றின் தம்மன்ன எனும் பிரதேசத்திலேயே இன்று பகல் 2.10 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பள்ளம ரஸ்நாயகபுர மகுரங்கடவள எனும் பிரதேசத்தைச் சேர்ந்த சகோதரர்களான இவ்விருவரும் இன்று பகல் அவர்களது வீட்டுக்கு வந்த உறவினர்களுடன் ஆற்றில் குளிப்பதற்காகச் சென்றுள்ளனர். ஆற்றில் குளித்துக் கொண்டிருக்கையில் நிபுண ரசங்க (வயது 16) என்பவர் நீரில் மூழ்கியதை அவதானித்த அவரது அண்ணனான அசித உதயங்க (வயது 21) என்பர் அவரை மீட்க முற்பட்டபோது அவரும் நீரில் மூழ்கியுள்ளார்.
இவ்வாறு நீரில் மூழ்கிய இருவரும் மீட்கப்பட்டு உடனடியாக சிலாபம் வைத்தியசாலையில் அனுமதித்த போதும் அச்சமயம் அவ்விருவரும் உயிரிழந்திருந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. உயிரிழந்த இருவரின் பிரேதங்களும் பிரேத பரிசோதனைக்காக சிலாபம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன.