Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 08, வியாழக்கிழமை
Niroshini / 2021 ஒக்டோபர் 10 , பி.ப. 12:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
நான் தயாரித்த சட்டமூலத்தை உபயோகித்து, மாகாண சபை தேர்தலை நடத்த பலரும் விருப்பம் தெரிவித்துள்ளனர் என, யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் கூட்டமைப்பின் பேச்சாளருமான எம் ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.
வவுனியாவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, மாகாணசபை தேர்தல் நடத்தப்படும் முறை தொடர்பில் அவரிடம் கேட்டபோதே, இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
வெள்ளிக்கிழமையன்று நடைபெற்ற பாராளுமன்ற தெரிவுக்குழு தேர்தல் முறை மறுசீரமைப்பு பற்றிய கூட்டத்தில், இந்த தெரிவுக்குழுவுக்கு பசில் ராஜபக்ஷவும் நியமிக்கப்பட்டுள்ளார் என்றார்.
இந்தக் குழுவிடம், ஆரம்பித்ததிலிருந்து, மாகாண சபை தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்பதனை நாங்கள் சிலர் வலியுறுத்தி வந்திருக்கின்றோம் எனத் தெரிவித்ந அவர், அதை நகர்த்துவதில் உள்ள சட்ட சிக்கல்கள் சம்பந்தமாக ஒவ்வொரு தடவையும் பிரஸ்தாபிக்கப்படும் எனவும் கூறினார்.
"ஆனாலும் ஒரு சிறிய சட்ட திருத்தத்தின் மூலமாக முன்னர் இருந்த தேர்தல் முறையையே பின்பற்றி தேர்தல் நடத்த முடியும் என்ற கருத்தை நான் வெளிப்படுத்தியிருந்தேன். அதற்கான ஒரு சட்ட மூலமும் 2019ஆம் ஆண்டில், நான் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்திருந்தேன். அதன் அடிப்படையில், இது செய்யப்படலாம் என்ற கருத்து கூறிய போது, சட்டமா அதிபருடைய ஆலோசனை பெறப்பட்டது. இறுதியாக சட்டமா அதிபரும் அந்த முறையிலும் செய்யலாம் என்ற ஒரு கருத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
"இந்த பின்னணியில்தான், வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்துக்கு வந்திருந்த பசில் ராஜபக்ஷ, வெகுவிரைவாக மாகாண சபை தேர்தலை நடத்துவதென்று அரசாங்கம் முடிவெடுத்திருப்பதாக அறிவித்தார்.
"தங்களுக்கும் மாகாண சபை தேர்தல் நடத்த வேண்டும் என்ற தேவையும் அழுத்தங்களும் இருப்பதாக கூறினார். இது இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் வந்து சென்றதன் பின்னர் இதை கூறியுள்ளார்.
"இது எப்படியாக இருந்தாலும், மாகாணசபை தேர்தல் உடனடியாக நடத்தப்படவேண்டும் என்பது எங்களுடைய நிலைப்பாடாக தொடர்ச்சியாக இருந்து வந்துகொண்டிருக்கின்றது" எனவும், சுமந்திரன் தெரிவித்தார்.
ஆகையினால், தன்னுடைய சட்டமூலத்தை உபயோகித்து, ஒரு சட்ட திருத்தத்தை உடனடியாக செய்து, மாகாண சபை தேர்தலை நடத்தலாம் என்ற கருத்தை பல உறுப்பினர்கள் வெளிப்படுத்தியிருந்தார்கள் எனவும், அவர் கூறினார்.
நான் தயாரித்திருந்த சட்ட மூலத்தை தற்போது ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன செயலாளரிடம் தான் கொடுத்திருப்பதாகத் தெரிவித்த அவர், "அமைச்சரவை இது குறித்து ஆலோசித்து ஒரு முடிவெடுத்து, அப்படி செய்வதாக இருந்தால் வருகின்ற நாள்களிலே அதனை வர்த்தமானியில் பிரசுரித்து ஓர் அரசாங்க வரைபாக, சட்டமூலமாக அதனை கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம்" என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
20 minute ago
44 minute ago