2026 மே 03, ஞாயிற்றுக்கிழமை

சிறுபோகத்தில் கிளிநொச்சிக்கு வெற்றி

Niroshini   / 2021 ஒக்டோபர் 31 , மு.ப. 11:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

 

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மாவட்டத்தில், நீர்ப்பாசனத் திணைக்களத்தின்  கீழுள்ள 78.6 சதவீதமான நிலப்பரப்பில், இவ்வாண்டு  சிறுபோக நெற்செய்கை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவித்த மாவட்ட பிரதி நீர்ப்பாசன பொறியியலாளர் இராஜகோபு, இதைத் தொடர்ந்து, காலபோகச் செய்கை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள ஒன்பது வரையான நீர்ப்பாசனக் குளங்கள், நீர்ப்பாசனத் திணைக்களத்தால் பராமரிக்கப்பட்டு  வருகின்றன எனவும் அதாவது, கிளிநொச்சி கிழக்கு நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கீழுள்ள இரணைமடு குளம், பிரமந்தனாறு குளம், கல்மடுக்குளம், கனகாம்பிகை குளம்,  உள்ளிட்ட நான்கு  குளங்களும், மேற்கு நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கீழுள்ள அக்கராயன் குளம், வன்னேரிக்குளம், குடமுருட்டிகுளம், கரியாலை நாகபடுவான் குளம், உள்ளிட்ட ஐந்து  குளங்களும் பராமரிக்கப்பட்டு வருகின்றன எனவும் கூறினார்.

 

இதில், கிழக்குப் பகுதியில், 26 ஆயிரத்து 297 ஏக்கர் நிலப்பரப்பிலும் மேற்கு பகுதியில், 7,367ஏக்கர் நிலப் பரப்பிலும் என சுமார் 33 ஆயிரத்து 664 ஏக்கர் வரையான  நிலப்பரப்பு நீர்ப்பாசன பரப்பளவைக் கொண்டுள்ளதாகத் தெரிவித்த அவர், இது வடக்கு மாகாணத்தில் 50 சதவீதமான நிலப்பரப்புகளை கிளிநொச்சி மாவட்டம் கொண்டுள்ளது எனவும் கூறினார்.

 

'இந்த நிலையில்,  இவ்வாண்டு மேற்கொள்ளப்பட்ட சிறுபோகச் செய்கையின் போது, மொத்த நிலப்பரப்பில்  78.6 சதவீதமான நிலப்பரப்பில், சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு வெற்றி கொள்ளப்பட்டுள்ளது. 2020ஆம் ஆண்டில், 68.2 சதவீதமான நிலப் பரப்பில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டது' என்றும் அவர் தெரிவித்தார்.

 

இரணைமடுக்குளம், அக்கராயன் குளம், குடமுருட்டி குளம் ஆகிய குளங்களின் இவ்வாண்டு, காலபோக செய்கை 100 சதவீதம் பூர்த்தி அடைந்துள்ளதாகவும் கல்மடு குளத்தின் 75 சதவீதமான நிலப்பரப்பிலும் வன்னேரிகுளத்தின் கீழ் 70 சதவீதமான நிலப்பரப்பிலும் புதுமுறிப்பு குளத்தின் கீழ் 92 சதவீதமான நிலப்பரப்பிலும் பயிர்ச்செய்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அவர் கூறினார்.

               


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .