2026 மே 03, ஞாயிற்றுக்கிழமை

’மன்னாரில் மின்தகன நிலையத்தை அமைக்க தீர்மானம்’

Niroshini   / 2021 ஓகஸ்ட் 31 , பி.ப. 01:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் மாவட்டத்தில், கொரோனா மரணங்கள் அதிகரித்துள்ள நிலையில், சடலங்களை வவுனியாவில் உள்ள மின் தகன நிலையத்துக்குக் கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக, மன்னார் மாவட்டச் செயலாளர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமேல் தெரிவித்தார்.

இந்நிலையில், மன்னார் மாவட்டத்தில் உடனடியாக மின் தகன நிலையத்தை அமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இதற்கு மாவட்டத்தில் உள்ள அனைவரின் ஒத்துழைப்பும் தேவை எனவும், அவர் கூறினார்.

மாவட்டச் செயலகத்தில், இன்று (31) நடைபெற்ற அவசர கலந்துரையாடலை தொடர்ந்து, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், தற்போதைய சூழ்நிலையில், வவுனியாவிலும் கொரோனா மரணங்கள் அதிகரித்துள்ள நிலையில், ஏனைய மாவட்டங்களில் இருந்தும் சடலங்கள் தகனம் செய்ய வவுனியாவுக்கு கொண்டு செல்லப்படுவதால், வவுனியாவில் உள்ள மின் தகன இயந்திரத்தின் செயல்திறன் குறைவடைந்துள்ளதாகத் தெரிவித்தார்.

இந்த நிலமையால், முன் அனுமதியின்றி சடலங்களை வவுனியா தகன நிலையத்துக்கு கொண்டு வர வேண்டாமென தங்களுக்கு தெரியப்படுத்தி உள்ளதாகத் தெரிவித்த அவர், இந்த நிலையில், மன்னார் மாவட்டத்தில், உடனடியாக மின் தகன நிலையத்தை அமைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார்.

'இதற்கமைய, மன்னார் நகரசபை பிரிவில் உள்ள மன்னார் பொது மயான பகுதியில் மின் தகன நிலையத்தை அமைக்க முடிவு செய்துள்ளோம்.

'மின் தகன நிலையத்தை அமைப்பதற்கும் வாகனத்துக்கு பணம் கொடுத்து சடலங்களை அனைவராலும் ஏற்றி வர முடியாது என்பதால் வாகனம் ஒன்றை கொள்வனவு செய்யவும், சுமார் 30 மில்லியன் ரூபாய் நிதி தேவைப்படுகிறது. அதனால், தேவையான நிதியை பெற்றுக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.

'மன்னார் நகர சபை மற்றும் பிரதேச சபைகள் தங்களால் இயன்ற நிதி உதவியை வழங்குவதாக தெரிவித்துள்ளனர். அத்துடன், நிதி போதாமை காரணமாக, அரச சார்பற்ற அமைப்புகள், வெளிநாட்டில் உள்ள நண்பர்கள், தனவந்தர்கள் முன் வந்து உதவி செய்ய முன்வர வேண்டும்' எனவும், அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .