2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

வேற்றுமத மக்கள் குடியேற்றம்; பொன்தீவு கண்டல் கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்

Menaka Mookandi   / 2013 ஒக்டோபர் 28 , மு.ப. 11:03 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


மன்னார், நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பொன்தீவு கண்டல் கிராமத்தில் அரசியல் ரீதியாக வேற்று மத மக்களை குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெக்கப்பட்டு வருவதாக கூறி அக்கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நானாட்டான் பிரதேச செயலகத்திற்கு முன் கூடிய இக்கிராம மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர். 1866ஆம் ஆண்டு குடியேறிய பொன்தீவு கண்டல் கிராம மக்கள், தங்களது கிராமத்தில் வேற்று மதத்தைச் சார்ந்த  மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்படுவதாகவும் இதற்கு நானாட்டான் பிரதேச செயலாளர் துணை போவதாகவும் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இந்நிலையில் குறித்த பொன்தீவு கண்டல் கிராம மக்களின் பிரதிநிதிகளுக்கும் மன்னார் நானாட்டான் பிரதேச செயலாளர் எஸ்.சந்திரையாவுக்கும் இடையில் இன்று காலை 10.30 மணியளவில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது.

இந்த சந்திப்பில் மன்னார் நகரசபை முதல்வர் எஸ்.ஞானப்பிரகாசம், நகரசபை உறுப்பினர் இரட்னசிங்கம் குமரேஸ், வடமாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி பிரிமூஸ் சிராய்வா மற்றும் பிரதேச செயலக அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

இதன்போது இடம்பெற்ற பேர்ச்சுவார்த்தையின் பின் குறித்த பொன்தீவு கண்டல் கிராமத்தில் தற்போது இடம்பெற்றுவரும் மீள்குடியேற்ற நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துவதாக நானாட்டான் பிரதேச செயலாளர் உறுதியளித்தார்.

தற்போது காணி வழங்கப்பட்ட வேற்று மத மக்களை மதங்களுக்கிடையில் பிரிவினைவாதம் ஏற்படாதவாறு குறித்த கிராமத்திற்கு அருகாமையில் உள்ள இடங்களில் குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதாக நானாட்டான் பிரதேச செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது குறித்த பொன்தீவு கண்டல் கிராமத்திற்கு அருகாமையில் குறித்த வேற்று மத மக்களை குடியமர்த்துவதற்காக அரச காணிகள் உள்ளதா என்பது தொடர்பான ஆராய்சிகள் இடம்பெற்று வருகின்றன.
 
குறித்த காணிகள் அடையாளம் காணப்படும் பட்சத்தில் அந்த மக்கள் அவ்விடத்திலேயே குடியேற்றம் செய்யப்படுவார்கள் என பிரதேச செயலாளர் மேலும் தெரிவித்தார்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X