Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 28, சனிக்கிழமை
Thipaan / 2015 ஜூன் 21 , மு.ப. 08:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒரு கிராமத்தின் அபிவிருத்தியானது அக்கிராமத்தின் சனசமூக நிலையச் செயற்பாட்டிலேயே தங்கியுள்ளது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
வவுனியா, மன்னார் வீதியில் அமைந்துள்ள வேப்பங்குளம் பாரதி சனசமூக நிலைய திறப்பு விழா சனிக்கிழமை (20) நடைபெற்றது.
அதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
'கிராமங்கள் தோறும் சனசமூக நிலையங்கள், நூல் நிலையங்கள், விளையாட்டுக்குழு ஒன்றியங்கள் என பல பரிமாணங்களில் மக்கள் நன்மைபெறக்கூடிய நிலையங்கள் பல திறக்கப்பட்டு வருகின்றன.
இவற்றுள் பல நிலையங்கள் மிகச்சிறப்பாக இயங்குகின்ற போதும் சில பெயரளவில் வெறும் கட்டடங்களுடன் நின்று விடுகின்றன.'
'உண்மையிலேயே ஒரு கிராமத்தின் அபிவிருத்தியானது அக்கிராமத்தின் சனசமூக நிலையச் செயற்பாட்டிலேயே தங்கியுள்ளது என்று கூறலாம்.
சனசமூகநிலையங்கள் சிறப்பாக இயங்குவதற்கு நிதி மூலதனமே முதன்மையானது என்று எம்மிடையே ஒரு தவறான கருத்து நிலவுகின்றது.' என தெரிவித்தார்.
'எதற்கெடுத்தாலும் மாகாண சபையிடமிருந்து கிடைக்கும் நிதி மூலம் கிடைக்கவில்லை அல்லது நகரசபையில் இருந்து நிதி மூலம் கிடைக்கவில்லை. ஆகையால் ஒன்றும் செய்யமுடியவில்லை எனக்கூறுகின்றனர்.
நாம் வேண்டுமெனில் வலுவுள்ள சனசமூக நிலைய அங்கத்தவர்களாக மாறி எமது கிராமத்திலுள்ள மூலதனங்களை அத்திபாரமாக வைத்து சனசமூக நிலையங்களை திட்டமிட்ட வகையில் முன்னேற்ற முடியும்.
பிரதேச ரீதியாக அடையாளம் காணப்படும் பிரச்சனைகளையும் அவற்றுக்கான தீர்வுகளை அல்லது ஆலோசனைகளையும் விவாதித்து சமூக மட்டத்தில் தீர்க்கக்கூடிய விடயங்ளை சமூக மட்டத்திலும் ஏனையவற்றை பிரதேச மட்டங்கள் அல்லது மாகாண மட்டங்களுக்கு எடுத்துரைப்பதன் வாயிலாகவும் மாகாண நல்லாட்சியில் பொறுப்புடன் பங்களிக்க முடியும்.' என கூறினார்.
'மக்களின் தேவைகளைக் கண்டறிந்து அவர்களின் குரலாக மாகாணசபைகள் செயற்படுவதற்கு இத்தகைய சனசமூக நிலையங்களின் அர்ப்பணிப்புடனான சேவைகள் அவசியமாகும்.
சனசமூக நிலையங்கள் என்பது வெறும் வாசிகசாலைகளை மட்டும் நடத்துவது அல்ல என்பதை நாம் முதலில் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். பல சனசமூக நிலையங்கள் வாசிகசாலைகள் நடத்துவதுடன் மட்டும் தமது பணி நிறைவடைந்துவிட்டது என்ற ஒரு தவறான கருத்தைக் கொண்டிருக்கின்றனர்.'
'தமது சமூகம் சார்ந்த அல்லது கிராமம் சார்ந்த ஆற்றல், ஆளுமை, திறன் விருத்தி என்பவற்றை அடையாளம் கண்டு அவற்றை விருத்தி செய்வதற்கான ஒரு களத்தை அமைத்துக் கொடுப்பதே சனசமூக நிலையத்தின் பாரிய பொறுப்பாகும்.
சனசமூக நிலையமானது அங்கத்தவர்களின் சிந்தனைகளுடன் மட்டும் மட்டுப்படுத்தப்பட்டு விடாது சமூக மட்டத்திலுள்ள சமூகப் பாதுகாப்பு, பண்பாட்டு விழுமியங்கள் ஆகியவற்றை உள்வாங்கி ஒரு கூட்டு செயற்பாட்டின் தொனியாக அமைய வேண்டும்.
அப்போதுதான் சனசமூக நிலையங்கள் பயனுறுதி மிக்க சிறந்த நிலையங்களாக மாற்றப்படும். ஒவ்வொரு கிராமமும் சுத்தத்துடனும் சுகாதாரத்துடனும் வைத்திருக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. இதை ஒவ்வொரு சனசமூக நிலையமும் உறுதி செய்து கொள்ளலாம்' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago