Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 28, சனிக்கிழமை
Thipaan / 2015 ஜூன் 21 , மு.ப. 08:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நவரத்தினம் கபில்நாத்
எமது மக்களின் நல்லாக்கங்களை உலகறியச் செய்ய வேண்டும். இவற்றினூடாக மிகவும் ஒழுக்கமுள்ள ஒரு சமூகமாக தமிழ்ச் சமூகம் மாற்றப்பட வேண்டுமென வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
வவுனியா செட்டிகுளத்தில் வன்னியர் கவிராயரின் சிலை திறப்பு விழாவில் நேற்று சனிக்கிழமை(20) நடைபெற்றது.
அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர்,
வன்னியூர் கவிராயராக இலக்கிய உலகில் இடம் பிடித்த எஸ்.எவ்.சௌந்தரநாயகம் என்ற இந்தப் படைப்பாளியை இயன்ற வரை எண்ணிப்பார்க்கவும் இலைமறை காயாக வாழ்ந்த இவரையும் இவரின் படைப்புக்களையும் உலகுக்கு அறிமுகஞ் செய்யும் நோக்கோடும் அவரின் படைப்புக்களை நூல் வடிவில் வெளியிடவிருக்கும் இப்பணியானது போற்றுதற்குரியது.
நான் வன்னியூர் கவிராயர் பற்றி அதிகம் அறிந்திருக்காத போதும் அவரின் வாழ்க்கைச் சுருக்கக் குறிப்பொன்றை இந்நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் எனக்கு வழங்கியிருந்தார்கள்.
எஸ்.எவ். சௌந்தரநாயகம், தாம் பிறந்த மண்ணின் மேலுள்ள அளவற்ற பாசத்தினாற் போலும் வன்னியூர் கவிராயர் என்னும் புனைபெயரைச் சூடிக்கொண்டிருந்தார்.
இப்பொழுதெல்லாம் வன்னிவளநாடு, வீரஞ்செறிந்த வன்னிநாடு என நாம் கூறிப் பெருமைப்பட்டுக் கொள்கின்றோம். ஆனால் கவிராயர் தமது புனைபெயரைச் சூடிக்கொண்ட ஐம்பதுகளில் வன்னி என்றால் நாகரிகத்தின் நிழல்கூடப்படாத சகல துறைகளிலும் பின்தங்கிய வனம் சார்ந்த பிரதேசம் என்று பொருள் கொள்ளும் நிலை இருந்தது. ஒருவன் வன்னியான் என்று தன்னைக்கூறிக் கொள்ள சற்றுத் தயங்கிய காலகட்டம் அது.
ஓரிடத்தில் சிந்தனையை மாற்றுமாறு வேண்டுகின்றார் கவிராயர்,
எல்லோரும் ஓர் குலம் எல்லோரும் ஓர் இனம்
எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள் என்று
எல்லோரும் இன்றும் என்றும் வாழ்ந்திட
நான் நாமாகச் செய் சிந்தனையை – என்றார்.
'நான்' என்பது போய் 'நாம்' என்ற பொதுமைப்பாடு உருவாக வேண்டும் என்பதில் அவர் குறியாக நின்றார். இன்றைய காலகட்டத்தில் எம் எல்லோராலும் எமது மனதிற்கு எடுக்க வேண்டிய ஒரு கருத்து இது. 'நான்' – 'நாமாக' மாற வேண்டும். எம்மிடையே கருத்து வேறுபாடுகள் இருக்க வேண்டும். ஆனால் 'நான்' என்ற அகந்தை இருக்கக் கூடாது.
நாம் யாவரும் ஒரே மொழி பேசும் சகோதர சகோதரிகளே என்ற எண்ணம் மேலோங்க வேண்டும் என்ற கருத்தை இற்றைக்கு 40 வருடங்களுக்கு முன்னரே எம்முன்னே வைத்து விட்டுச் சென்று விட்டார் கவிராயர். 1978ஆம் ஆண்டில் இவர் இறைவனடி சேர்ந்தார்.
பல நூற்றுக் கணக்கான கவிதைகள் பத்திரிகைகளிலும், ஏனைய இலக்கிய இதழ்களிலும் வெளியிடப்பட்ட போதும் இவரது கவிதைத் தொகுதி ஒன்று கூட இதுவரை வெளிவரவில்லை. இக்குறைபாடு தற்போதைய நூல் வெளியீட்டின் மூலம் ஓரளவு சீர் செய்யப்படுமென நம்புகின்றேன்.
அத்துடன் இவ்வாறான பொருள் பொதிந்த கவிதைத் தொகுப்புக்களும் கவிதைகளும் பாடசாலை மாணவர்களின் பாடப் புத்தகங்களில் இடம்பெற வேண்டியது முக்கியமானதாகும்.
இப் பொறுப்பைப் பாடசாலைப் புத்தக மறுசீரமைப்புக் குழுவின் கவனத்துக்கு விடுக்கின்றேன். இது போன்ற நல்ல நிகழ்வுகள் மேலும் மேலும் முன்னெடுக்கப்பட வேண்டும். எமது பின்னணிகள் வெளிவர வேண்டும்.
எமது மக்களின் நல்லாக்கங்கள் உலகறியச் செய்ய வேண்டும். இவற்றினூடாக மிகவும் ஒழுக்கமுள்ள ஒரு சமூகமாக தமிழ்ச் சமூகம் மாற்றப்பட வேண்டுமென தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago