2025 ஜூன் 28, சனிக்கிழமை

மாணவர்களின் கல்வியில் பாதிப்பை ஏற்படுத்தும் ஆசிரியர்கள் பற்றாக்குறை: மு.சந்திரகுமார் எம்.பி

Menaka Mookandi   / 2015 ஜூன் 23 , பி.ப. 12:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெற்றோர்கள் தங்கள் பின்ளைகளின் கல்வி வளர்ச்சியில் ஆர்வம் செலுத்துகின்ற நல்ல சூழல் நிலவுகின்ற போதும், பாடசாலைகளில் காணப்படுகின்ற ஆசிரியர் பற்றாக்குறை அதற்கு தடையாக இருக்கிறது என நாடாளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமார் தெரிவித்தார்.

பூநகரி வலைப்பாடு பாடசாலைக்கு பல்லூடக தெறிகருவி, வலைப்பாடு வானவில் இசை குழுவுக்கு இசை கருவிகள், விளையாட்டுக் கழக மைதானம் புனரமைப்பு என்பவற்றுக்கு தனது விசேட நிதி ஒதுக்கீடான 8 இலட்சம் ரூபாய் செலவில் செவ்வாய்க்கிழமை (23) வழங்கிய பின்னர் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'வலைப்பாடு எமக்கு ஒரு புதிய கிராமம் அல்ல. எனக்கும் வரைப்பாட்டுக் கிராமத்திற்குமான உறவு என்பது கடந்த 35 வருடங்களாக காணப்படுகின்றது. ஆயுத போராளியாக செயற்பட்ட காலத்தில் வலைப்பாடு கிராமம் எங்களுக்கு வழங்கிய அன்பும், ஆதரவும் எங்கள் போராட்டத்துக்கு பெரும் உந்து சக்தியாக இருந்தது' என்றார்.

'பாடசாலையில் மாணவர்கள் மத்தியில் நான் எப்பொழுதும் அரசியல் பேசுவது கிடையாது. அது எனது கொள்கையும் அல்ல. அது மட்டுமல்ல வலைப்பாட்டு கிராமத்தில் அந்த மக்களுக்கு நான் அரசியல் பேசவேண்டும் என்ற நிலைமை இல்லை. காரணம்  வலைப்பாடு எனது அரசியலையும், செயற்பாட்டையும் நன்கு புரிந்துகொண்ட கிராமம்.

வலைப்பாட்டு கிராமத்தில் ஏனைய பிரதேசங்களை விட ஒரு சிறப்பம்சம் இருக்கிறது. இறுக்கமான, ஒழுக்கமான சமூக கட்டுப்பாடும் ஒற்றுமை ஆகும். இது இந்த மக்களிடையே நல்ல சமூக கட்டமைப்பை உருவாக்கியிருக்கிறது. இது எந்தவிதத்திலும் பாதிக்கப்படக்கூடாது. எங்களுக்குள்  இருக்கும் ஒற்றுமை சிதைக்கப்பட்டால், எங்களுக்குள் சமூக சீர்கேடுகள், தலைதூக்கினால் அது வலைப்பாட்டு கிராமத்தின் தனித்துவத்தை சீரழித்துவிடும்' என்றார்.

'பூநகரி தெற்கு பிரதேச பாடசாலைகள் எதிர்கொள்ளும் ஆசிரியர் பற்றாக்குறைப் பிரச்சினையை பல இடங்களிலும் வெளிப்படுத்தி வருகின்றோம். வடமாகாணத்தில் கல்வித்துறையின் அதிகாரத்துக்கு இந்த  மக்களால் அனுப்பபட்டவர்கள் இதுபோன்ற கிராம பாடசாலைகளின் கல்வி வளர்ச்சி தொடர்பில் அக்கறையின்றி இருப்பது கவலைக்குரியதாக இருக்கிறது.

கடந்த காலத்தில் பெற்றோர்கள்  தங்கள் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சியில் அக்கறை செலுத்த முடியாத சூழல் காணப்பட்டது. ஆனால் தற்போது அந்த நிலைமை மாறி பிள்ளைகளின் கல்வி வளர்ச்சியில் பெற்றோர்கள் அதிக கவனம் செலுத்துகின்ற சூழல் ஏற்பட்டிருக்கின்ற போதும் தொடர்ச்சியாக நிலவுகின்ற ஆசிரியர் பற்றாக்குறை அந்த ஆர்வத்தை இல்லாதொழிக்க செய்கிறது' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .