2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

“அணையா விளக்கு“ போராட்டத்திற்கு அணிதிர‌ள அழைப்பு ​

R.Tharaniya   / 2025 ஜூன் 22 , பி.ப. 02:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் நடைபெற உள்ள அணையா விளக்கு போராட்டத்திற்கு தமிழர் தேசமாக அனைவரும் அணி திரள வேண்டும் என யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.

யாழ்ப்பாணம் செம்மணி மனிதப்   புதைகுழியில் புதைக்கப்பட்டவர் களுக்குச் சர்வதேச நீதி கோரியும், சர்வதேசக் கண்காணிப்புடன் மனிதப் புதைகுழி அகழ்வை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தியும் ‘மக்கள் செயல்’ என்ற தன்னார்வ இளையோர் அமைப்பால் எதிர்வரும் 23ஆம் திகதி தொடக்கம் 25ஆம் திகதி வரையில் செம்மணி வளைவுப் பகுதியில் ‘அணையா விளக்கு’ என்ற பெயருடன் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டம் தொடர்பாக கருத்து தெரிவித்த போதே யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் லிகிதர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

சிவில் சமூக அமைப்புகள் இணைந்து அணையா விளக்கு என்ற போராட்டத்தை மனித புதைகுழிக்கு சர்வதேச நீதி வேண்டி போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அறிய முடிகிறது.  நாங்கள் ஒரு பங்காளராக பங்கேற்று முற்றுமுழுதாக வடக்கு கிழக்கில் மிகப்பெரிய அழைப்பை முன்னெடுக்கின்றோம்.

எமது உறவுகளுக்காக உயிரிழந்த உறவுகளுக்காகவும் இழைக்கப்பட்ட அநீதிக்காகவும் தமிழ் தேசமாக திரண்டு போராட்டத்தில் ஒன்று சேர வேண்டும். இலங்கைக்கு தற்போது வருகை தரவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்ய உள்ளதாக அறிய முடிகிறது.  மிக முக்கியமாக செம்மணி சித்துபாத்தி இந்து மயானத்தை மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள பகுதியை மனிதப் புதைகுழி யாக அறிவிக்க வேண்டும்.

தொடர்ச்சியாக சர்வதேச நியமங்களுக்கு உட்பட்டு சர்வதேசத்தின் முற்றுமுழுதான தலையிட்டு அகழ்வாய்வை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும்.  செப்டம்பர் மாதத்தில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் ஈழத் தமிழர்களுடைய பிரச்சினையை திசை திருப்பவே மனித உரிமைகள் ஆணையாளரை இலங்கை அரசாங்கம் அழைத்துள்ளது.

வடக்கு கிழக்கு தமிழர்கள் இந்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தி எங்கள் பிரச்சினைகளையும் மனித புதைகுழிகள் தொடர்ச்சியாக தோண்டப்படும் விடயங்களையும் வெளிப்படுத்த வேண்டும் - என்றார்.

நிதர்சன் வினோத்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X