2025 செப்டெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

சஹ்ரானின் சகோதரி உட்பட 62 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு

Princiya Dixci   / 2021 ஓகஸ்ட் 05 , பி.ப. 01:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

வா.கிருஸ்ணா, கனகராசா சரவணன்

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட சஹ்ரானின் சகோதரி, சியோன் தேவாலய தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் உட்பட வெவ்வேறு 4 வழக்குகளை கொண்ட 62 பேரையும் எதிர்வரும் 19ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு, மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.சி.எம். றிஸ்வான் உத்தரவிட்டார்.

இவர்கள் அனைவரும், கொவிட் 19 நிலைமை காரணமாக கடந்த 06 மாதங்களுக்கு மேலாக நீதிமன்றுக்கு அழைத்துவரப்படாத நிலையில் இன்று (05) பல்வேறு சிறைச்சாலைகளிலிருந்து மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்துக்கு அழைத்துவரப்பட்டிருந்தனர்.

21.4.2019 உயிர்த்த ஞாயிறன்று இடம்பெற்ற தாக்குதலின் பின்னர் சஹ்ரான் குழுவோடு தொடர்புடையவர்கள் என்றும் இவர்கள் ஹம்பாந்தோட்டை மற்றும் நுவரெலியா போன்ற இடங்களுக்கு பயிற்சிக்காக சென்றார்கள் என்ற சந்தேகத்தில் காத்தான்குடியைச் சேர்ந்த 63 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவர்களில் 5 பேர் பிணையிலும், இருவர் வழக்கில் இருந்தும் விடுவிக்கப்பட்ட நிலையில் 56 பேர் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த 56 பேருடன் குண்டுத் தாக்குதல் தொடர்பாக வெவ்வேறு 4 வழக்கு இலக்கங்களை கொண்ட சஹ்ரானின் சகோதரி மற்றும் அவரின் கணவர், சியோன் தேவாலய தற்கொலை குண்டுத் தாக்குதலை மேற்கொண்ட ஆசாத்தின் தாயார், சீயோன் தேவாலய தற்கொலை குண்டுதாரி பயணித்த பஸ் ஆசனத்தைப் பதிவு செய்த சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட 6 பேர் உட்பட 62 பேரும் தொடர்ந்து இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X