Gavitha / 2016 ஓகஸ்ட் 10 , மு.ப. 03:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகலிங்கம் கோபிகிருஷ்ணா
வட மாகாணத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் நீர் வசதியை ஏற்படுத்துவதற்காக, மன்னார் மாவட்டத்தை அண்டியுள்ள பறங்கியாற்றிலிருந்து பாலியாற்றுக்கு நீரைத் தொடர்புபடுத்த வேண்டுமென, நாடாளுமன்ற உறுப்பினரும் ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா கோரி நின்றார்.
நாடாளுமன்றத்தில் வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரம் முடிவடைந்தமையைத் தொடர்ந்து, நிலையியற் கட்டளை 23ஃ2இன் கீழ், நீர்;ப்பாசன மற்றும் நீர்முகாமைத்துவ அமைச்சர் விஜித் விஜயமுனி டி சொய்ஸாவிடம்
கேள்வியொன்றை முன்வைத்து உரையாற்றும்போதே, டக்ளஸ் எம்.பி இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றிய அவர், பறங்கியாற்றிலிருந்து பாலியாற்றுக்கு நீரைத் தொடர்புபடுத்துவதனூடாக, மாங்குளம், வவுனிக்குளம், கொள்ளாவிலன்குளம், கல்விலன்குளம், மல்லாவிக்குளம் போன்ற பாரிய குளங்கள் பயன்பெறும் எனவும், இத்திட்டத்தின் மூலமாக, மாங்குளம், மன்னாரின் ஒரு பகுதி, கிளிநொச்சி, யாழ்ப்பாணத்தின் ஒரு பகுதி ஆகியவற்றைச் சேர்ந்த மக்களின் குடிநீர்ப் பிரச்சினை தீர்வுபெறுமெனவும் சுட்டிக் காட்டினார். அத்தோடு, விவசாயம், கால்நடைகள் அபிவிருத்தி, அதற்கேற்ப மேய்ச்சல் தரை உருவாக்கம் ஆகியன மேம்படுவதுடன், நிலத்தடி நீர் வளமும் மேம்பாடடையும் எனவும் தெரிவித்தார்.
இந்தத் திட்டமானது, மகாவலித் திட்டத்தில் முன்னர் உள்வாங்கப்பட்டிருந்தது எனத் தெரிவித்த டக்ளஸ் எம்.பி, அவ்வாறு இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுமாயின், சுமார் 30,000 ஏக்கர் வரையிலான காடழிப்பு இடம்பெறுமெனவும், அதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுமெனவும் தெரிவித்தார். எனவே, அத்திட்டத்துக்கு மாற்றீடாக, பறங்கியாற்றிலிருந்து கால்வாய் அமைத்து, பாலியாற்றுக்கு நீரைக் கொண்டு செல்வதன் மூலமாக, வடக்கின் நீர்ப் பிரச்சினையைக் கணிசமானளவு தீர்த்துக் கொள்ள முடியுமெனத் தெரிவித்தார். கடந்த காலங்களில் இத்திட்டம் முன்மொழியப்பட்டிருப்பினும், அது நடைமுறைப்படுத்தப்படாமை வருத்தமளிப்பதாகத் தெரிவித்த அவர், இங்கு காணப்படும் நீர்வளமானது, பயன்பாடற்ற வகையில், கடலுக்குச் சென்று கொண்டிருப்பதாகவும் சுட்டிக் காட்டியதோடு, இதுகுறித்து நடவடிக்கை எடுக்க முடியுமா எனவும் கேள்வியெழுப்பினார்.
அமைச்சரின் அறிவிப்பைத் தொடர்ந்து எழுந்த சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல, 'குறித்த கேள்வியெழுப்பப்பட்ட அமைச்சர் விஜித் விஜிதமுனி டி சொய்ஸா, சபையில் இல்லை என்பதால், நாளைய (இன்று) தினம் பதிலளிக்கப்படும்' எனத் தெரிவித்தார்.
13 minute ago
29 minute ago
44 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
29 minute ago
44 minute ago
50 minute ago