2025 ஜூன் 25, புதன்கிழமை

குத்துச் சண்டையில் சாதனை படைத்த ‘தங்கமங்கை’ இந்துகாதேவி

Ilango Bharathy   / 2022 ஜனவரி 26 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

“என்னைப் போன்ற ஏராளமானவர்கள் பல்வேறு துறைகளிலும் சாதிக்க ஆர்வமாக உள்ளனர்,
ஆனால், அவர்களுக்கு நிதிப் பிரச்சினை; அவர்களுடைய குடும்பங்களின் பொருளாதாரப்
பிரச்சினை என்பன, அவர்கள் சாதிப்பதற்குச் சவாலாக அமைகின்றன. சமூகத்தில் இத்தகைய
திறமையாளர்களை இனங்கண்டு, அவர்களுடைய திறமைகளை வௌயுலகுக்குப்
பகிரங்கப்படுத்தும் உதவிகளை செய்வதற்கு, பலரும் பாரபட்சமின்றி முன்வர வேண்டும்” என்று, குத்துச்சண்டை போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற கனேஸ் இந்துகாதேவி
வேண்டுகோள்விடுத்துள்ளார்.



பாகிஸ்தான் நாட்டின் தலைநகர் லாகூர் நகரில் நடைபெற்ற சர்வதேச குத்துச்சண்டையில் 25
வயதுக்கு உட்பட்ட 50-55 கிலோ கிராம் எடைப் பிரிவில் நடைபெற்ற இறுதி போட்டியில்,
முல்லைத்தீவு மாணவி கணேஸ் இந்துகாதேவி, தங்கப்பதக்கம் பெற்று சாதனை படைத்து,
முல்லைத்தீவு மாவட்டத்துக்கும் நாட்டுக்கும் பெருமை தேடித் கொடுத்துள்ளார்.




முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட
கரிப்பட்டமுறிப்பு பிரதேசத்தில், புதியநகர் கிராமத்தில் வாழ்ந்துவரும் இவர், பெரும்
சவால்களுக்கும் நெருக்கடிகளுக்கும் முகம் கொடுத்து, இந்த வரலாற்றுச் சாதனையை நிலைநாட்டி உள்ளார். இந்தச் சாதனை மாணவியை பல்வேறு தரப்பினரும் வீடுதேடிச் சென்று பாராட்டி வருகின்றனர்.


இவரது வெற்றிக்கு பின்னால் உள்ள வலிகளும் வேதனைகளும் ஏராளம்; பாறையில் முளைத்த
பயிர் போன்ற சூழ்நிலையிலேயே இவரது இந்தச் சாதனை நிகழ்த்தப்பட்டது என்பதை,
அவரோடு உரையாடிய போது உணரமுடிந்தது.

ஏ-9 வீதியில் மாங்குளம் சந்தியிலிருந்து ஒட்டுசுட்டான் வீதியில் பயணிக்கும் போது,
கரிப்பட்டமுறிப்பு என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்தக் கரிப்பட்டமுறிப்பு கிராமம் பண்டைய
வரலாற்றுக் காலத்திலும் சரி, சமீபத்திய வரலாற்றுக் காலத்திலும் சரி, பல்வேறு வீரதீர
சாதனைகள் படைத்த மண்ணாகத் திகழ்கின்றது.

அதாவது, முன்னைய காலத்தில் மிகவும் வலிமை கொண்ட ஓர் ஆண் யானையும் பெண்
யானையும் இந்தப் பகுதியில் ஒற்றுமையாக வாழ்ந்து வந்ததாகவும் இதில் ஆண் யானை முதலில் இறந்து விட்டதாகவும் அதன் பின்னர் கவலையடைந்த பெண் யானையும் இறந்ததாகவும், ஆண் யானை இறந்த இடம் ‘மணவாளன் பட்டமுறிப்பு’ என்றும் பெண் யானை இறந்த இடம் ‘கரிப்பட்ட முறிப்பு’ என்றும் பெயர் வந்ததாக இந்தக் கிராமவாசிகள் கூறுகின்றனர்.

இப்படியான  வரலாறு கொண்ட மண்ணில் இருந்துதான், தனது அயராத உழைப்பாலும் விடாமுயற்சியாலும் தோல்விகளையே வெற்றியின் படிக்கற்களாக்கிச் சாதனை படைத்த இந்துகாதேவி வாழ்ந்து வருகின்றார்.

இந்தக் கிராமத்தின் பிரதான வீதியிலிருந்து, ஏறத்தாள மூன்றரைக் கிலோ மீற்றர்
தொலைவிலுள்ள புதிதாக உருவாக்கப்பட்ட புதியநகர் கிராமத்தில், இந்திய அரசின் நிதி
உதவியுடன் உருவாக்கப்பட்ட வீட்டுத்திட்டத்தில் கணேஸ் இந்துகாதேவியும் அவரது தாயாரும்
வசித்து வருகின்றனர்.

குத்துச் சண்டைப் போட்டியில் வெற்றி பெறும் வரையும், யாரும் அவர்களைக் கண்டு
கொள்ளவில்லை; இன்று அவரைத் தேடி எத்தனையோ பேர் வந்து, வாழ்த்திச் செல்வதைக்
காணமுடிகின்றது.



குன்றும் குழியும் செம்மண் புழுதியுமாக காணப்படுகின்ற வீதியூடாகச் சென்று, புதிய நகர்
கிராமத்தின் அந்தத்தில் இந்துகாதேவியின் வீடு அமைந்துள்ளது. சிறுவயதில் தன்னுடைய
தந்தையை இழந்து, தாயாரின் அரவணைப்பில் வளர்ந்த இந்துகா தேவி வறுமையிலும் சாதித்துக் காட்டியிருக்கிறார்.

தன்வீட்டிலிருந்து மூன்றரை கிலோ மீற்றர் கால்நடையாகச் சென்று, கரிப்பட்டமுறிப்பு சந்தியில் பஸ்ஸூக்காகப் பலமணிநேரம் காத்திருந்து, பயணம் செய்து, பயிற்சி பெற்று, இன்று இந்தச் சாதனையைப் படைத்திருப்பது பெரும்பாக்கியமாகும். ஒட்டுசுட்டான் பிரதேசத்தை பூர்வீகமாகக் கொண்ட இவர், நாட்டில் ஏற்பட்ட அமைதியின்மை காரணமாக இடம்பெயர்ந்து வவுனியா, சிதம்பரபுரத்தில் தங்கியிருந்தார்.

இவரது தந்தையார் விபத்தொன்றில் உயிரிழந்த நிலையில், இந்துகாதேவி சிறு குழந்தையாக
இருக்கும் போதே தாயார் மத்திய கிழக்கு நாட்டுக்கு பணியின் நிமித்தம் சென்ற நிலையில்,

அவரது பேத்தியாருடன் சிறு பராயத்தை கழித்ததுடன் வவுனியா ஸ்ரீ நாகராஜா
வித்தியாலயத்தில் தனது ஆரம்ப கல்வியை கற்றார், 2013 ஆம் ஆண்டு, எட்டாம் தரத்தில் கரிப்பட்டமுறிப்பு பாடசாலையில் தன்னுடைய கல்வியைத் தொடர்ந்து, பின்னர் உயர்கல்வியை ஒட்டுசுட்டான் மகாவித்தியாலயத்தில் கற்றார்.

தனது வெற்றி தொடர்பில் அவர் மனந்திறந்து கூறும்போது; “முதன்முதலில் சர்வதேச
மட்டத்தில் நடைபெற்ற போட்டியில் கலந்து கொண்டு வெற்றி வைத்திருக்கின்றேன். இதற்கு
நிறையவே கஸ்ரப்பட்டிருக்கின்றேன். நிதி உதவி கிடைக்காமல், அதற்காக நிறைய
அரசியல்வாதிகளிடமும் பெரியவர்களிடமும் கதைத்திருந்தேன். எந்த உதவிகளும்
கிடைக்கவில்லை.

கடைசியாக, இந்தப் போட்டிக்கு போவதில்லை என்ற முடிவு எடுத்திருந்தேன். கடைசி
நேரத்தில், 13ஆம் திகதி பாகிஸ்தான் பயணிக்க வேண்டும். மூன்று இலட்சம் எவ்வளவோ
சிரமப்பட்டுக் கட்டிய நிலையில், இன்னும் 90,000 ரூபாய் தேவை என்ற நிலை இருந்தது.
‘சிறு துளி பெரு வெள்ளம்; உதவிடும் உறவுகளின் கவனத்துக்கு’ என, வவுனியாவிலுள்ள
‘தமிழ்விருட்சம்’ அமைப்பின் நிறுவுநர் செல்வராஜா சந்திரகுமார் கண்ணன், தனது சமூக
வலைத்தளத்தில் ஒரு வேண்டுகோளை விடுத்த நிலையில், இதனை ஏற்று, வவுனியா 93. 96
மகாவித்தியர்கள் நற்பணிமன்றம், இந்த நிதியுதவியை வழங்கி, போட்டிக்குச் சென்று, வெற்றி
பெறுவதற்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளது. அவர்களுக்கு என்றும் நான் சிரம் தாழ்த்தி வணக்கம்
செலுத்துகின்றேன்; நன்றி கூறுகின்றேன்.

நான் போட்டிக்குப் போவதற்கு பணத்தேவைக்காக கேட்டபோது, எந்த உதவிகளையும்
செய்யாது, எனக்கு கடைசிவரை உதவுவதாகத் தெரிவித்து, எதையும் செய்யாத
அரசியல்வாதிகளாக இருந்தாலும் சரி, பெரியவர்களாக இருந்தாலும் சரி இப்போது என்னைத்
தேடி வருகின்றார்கள். என்னைப் போல் ஏராளமானவர்கள் சாதிக்க ஆர்வமுள்ளவர்களாக
உள்ளார்கள். அவர்களுக்கு நிதி ஒரு பிரச்சினையாக உள்ளது. சமூகத்தில் சந்திக்கக்கூடிய
பிரச்சினைகள் நிறையவே உள்ளன. அதை எல்லாம் தாண்டி, நாங்கள் முன்வரவேண்டும்” என்று
நம்பிக்கையுடன் கூறியிருந்தார்.

இவரை போன்று பலர் சாதிக்க முனைந்தாலும், அவர்களது குடும்பங்களின் வறுமை,
பொருளாதாரப் பிரச்சினை என்பன சவாலாக அமைகின்றன. சமூகத்தில் இவர்களை
இனங்கண்டு, அவர்களுக்கான உதவிகளைச் செய்வதற்குப் பலரும் பாராபட்சமின்றி முன்வர
வேண்டும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .