2024 ஏப்ரல் 17, புதன்கிழமை

புளியம்பொக்கணை நாகதம்பிரான் உற்சவம்

Johnsan Bastiampillai   / 2022 மார்ச் 15 , பி.ப. 12:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

சுப்பிரமணியம்  பாஸ்கரன்

 

 

 

 

இலங்கையிலுள்ள சைவக் கோவில்களில் அற்புதங்கள் நிறைந்ததும்  வரலாற்று தொன்மை கொண்ட கோவிலாக புளியம்பொக்கணை நாகதம்பிரான் கோவில் காணப்படுகின்றது.

இக்கோவில், கிளிநொச்சி மாவட்டத்தின்  கரைச்சிப் பகுதியில் அமைந்துள்ளது. கோவிலின் வருடாந்த பங்குனி உத்தரப் பொங்கல் விழா,  நேற்று வௌ்ளிக்கிழமை (11)  விளக்கு வைத்தல் வைபவத்துடன்  ஆரம்பமாகியுள்ளது.

நாகதம்பிரான் சர்ப்ப குழந்தையாகப் பிறந்த பங்குனி மாத உத்தர நட்சத்திரம் கூடிய பௌர்ணமி தின நாளில்,  புளியம்பொக்கணை நாகதம்பிரான் கோவில் வருடாந்த பொங்கல் உற்சவம் நடைபெற்று வருகின்றது.

பாரம்பரிய வழிபாட்டு முறைகளையும் பல்வேறு தனித்துவங்களையும்  சிறப்பியல்புகளையும் தன்னகத்தே கொண்ட புளியம்பொக்கனை நாகதம்பிரான் கோவிலின் வருடாந்த பொங்கல் விழா, கொவிட்-19 சூழலைக் கருத்தில் கொண்டு, உரிய சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்களுடன் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.
 இலங்கை தீவில் உள்ள சைவக் கோவில்களில், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கரைச்சி புளியம்பொக்கணை நாகதம்பிரான் கோவில், தனிச்சிறப்பைக் கொண்டதுடன், இதன் வரலாறும் புதுமையானதாகும்.

அதாவது, நல்லுள்ளங்கெண்ட  செல்வந்தராக காணப்பட்ட நீதி நாயக முதலியார் கமலம் தம்பதியினரின் இல்லற வாழ்வில், எந்தக் குறைகளும் இன்றி வாழ்ந்தபோதும் குழந்தைச் செல்வம் இல்லாத ஒரு குறை அவர்களை வாட்டியது.

இதனால், இவர்கள் முழுமுதற் கடவுளாகிய சிவபெருமானை வணங்கி பல தான தர்மங்களைச் செய்து, விரதம் இருந்து வந்தனர். சிவபெருமானை வணங்கி வழிபட்டதன் பயனாக, கமலம் அம்மையார் கர்ப்பமுற்று இரண்டு ஆண் பிள்ளைகளையும் ஒரு பெண்பிள்ளையையும் அத்துடன் ஒரு பாம்பையும் குழந்தையாகப் பெற்றெடுத்தார்
பங்குனி மாத உத்திர நட்சத்திரமும் பௌர்ணமி திதியும் கூடிய நன்னாளில் பாம்பு குழந்தையாகப் பிறந்ததை  கண்ட உற்றாரும் ஊராரும் அச்சமடைந்திருந்த வேளை , தாய் தந்தையர் இது இறைவன் செயலென எண்ணி பாம்பையும் பிள்ளைகளோடு சேர்த்து பாலூட்டி வளர்த்தனர்.

அவர்களுடன் கூடவே, பாம்பும் குழந்தையாகவே வளர்ந்தது.  பிள்ளைகள் வளர்ந்து அவர்களும் இல்லற வாழ்வில் இணைய அந்தப் பாம்பும் திருமணம் செய்தது போன்று வேறு பாம்புகளுடன்  கூடி வாழ்ந்து வந்தது.

பிள்ளைகள் மாப்பாணி  முதலியார், வவுனிய முதலியார், வள்ளிநாச்சி  என்றும் இவர்களுடன் கூடிப்பிறந்த பாம்பு தம்பிரான் என்றும் அழைக்கப்பட்டு வந்தது
தந்தையான நீதிநாயக முதலியார், தனது வயோதிப  காலத்தில் தனக்குரிய காணி மற்றும் சொத்துகளை எல்லாம் பிள்ளைகளுக்கும் பகிர்ந்து அளித்தார்.

இதனால் ஆத்திரமடைந்த நாகதம்பிரான் என்ற பாம்பின் செயலால்,  சொத்துகள் மீண்டும் நான்கு பங்குகளாகப் பகிரப்பட்டன. பாம்பு தனது பங்கை தங்கையான வள்ளிநாச்சியாரின் பங்கோடு  சேர்த்து, அதையும் எடுத்துக்கொள்ளுமாறு உணர்த்தியது.

நீதி நாயக முதலியாரும் கமலம் அம்மையாரும் பாம்புடன் இணைந்து வாழ்ந்தார்கள்.  வழமைபோன்று கமலம் அம்மையார் ஒருநாள் வீட்டு முற்றத்தை கூட்டும் போது, இந்த பாம்புடன் சேர்ந்த ஏனைய பாம்புகளும் கூட்டிக் குவித்த  குப்பைகளை கிளறியும்  அவர் மீது ஏறியும் இறங்கியும் திருவிளையாடல்களை செய்த வண்ணமிருந்தன.
 இதன் தொல்லை தாங்க முடியாது கமலம் அம்மையார், “தொலைந்து போங்கள்”  என்று விளக்குமாற்றினால்  தட்டினார். உடனே கோபமடைந்த தம்பிரானும் ஏனைய பாம்புகளும் வீட்டை விட்டு வெளியேறின.

பாம்புகளை காணாத தந்தையாரும் அயலவர்களும் எங்கும் தேடியும் கண்டுகொள்ளவில்லை. இதனால் களைப்படைந்து கவலையுடன் தூங்கியபோது கனவில் தோன்றிய சிவன், பாம்புகள் கொக்காவில் காட்டு வழியாகச் சென்று, புதூர் என்ற இடத்தில் தங்கியிருக்கின்றன. நீங்கள் அங்கு சென்று அவர்களை அழைத்து வந்து, புளியம்பொக்கணை என்ற இடத்தில் கோவில் அமைத்து அந்தப் பாம்பை தெய்வமாக வழிபட்டால்,  அனைத்து நன்மைகளும் உண்டாகும் என்று கூறி மறைந்தார்.

அப்படியே பாம்பை புளியம் பொக்கணைக்கு  அழைத்து வந்து, பூசை செய்தனர். நீதி நாயக முதலியார்  இறந்தபின்பனர் அவரது மகன் வவுனிய முதலியார் ,இவ்வாறு பூஜை செய்து வருகின்ற காலத்தில், ஒரு பங்குனி உத்திரத்தை முன்னிட்டு விளக்கு வைத்து விட்டு, மாட்டு வண்டியில்  ஊர்கள் தோறும் சென்று பொருட்களைச் சேகரித்து வருகின்றவேளை, வழமைபோன்று கண்டாவளை மடுக்கரை என்ற இடத்தில் தரித்து, தம்பிரானுக்கு பூசை செய்து அன்னதானம் வழங்குவதற்கு ஏற்பாடாக இருந்த வேளை, அவ்விடத்துக்கு ஒல்லாந்தர் வந்த போது இந்த வைபவத்தைக் கண்டனர்.

அந்த நேரத்தில் அங்கு கூடியிருந்த பக்தர்களையும் பூசகரையும் பார்த்து, “நீங்கள் எங்களுக்கு எதிரான எந்த காரியங்களையும் செய்யக்கூடாது” என்று தடுத்ததோடு “மீறினால் சுட்டு விட்டுவிடுவோம்” என்று அச்சுறுத்தினார்.

இதனால் அச்சமடைந்த  பூசகர், “எமது முன்னோர்கள் வழக்கப்படி, குல தெய்வத்தின் வழிபாடு வழமை  போன்று இதை  செய்து வருகின்றோம்” எனக் கூறினார்.
அப்போது அந்த அதிகாரி உங்களின்  குலதெய்வம் என்ன என்று  மிரட்டினார். “எங்களின் குலதெய்வம் ஒரு பாம்பு” என்றார். “அப்படியானால் பாம்பை இப்போது எங்களுக்கு காண்பிக்க வேண்டும். இல்லையேல் இருக்கின்ற பூஜை பொருட்களை தூக்கி எறிந்து உங்களையும் விரட்டுவேன்” என்று அச்சுறுத்தினார்.

அப்போது பூசகர் பூசைக்குரிய எல்லாவற்றையும் செய்து, ஒரு புதிய மண்பானையில் வெள்ளைத் துணியை முறுக்கி வைத்துவிட்டு, மனத்தூய்மையோடு தோத்திரங்களை பாடி பூஜை செய்து, சிவபெருமானை வேண்டி நின்றார்.  அப்போது பானையிலிருந்து  பெரும் இரைச்சலோடு ஐந்து தலை கொண்ட நாகம் காட்சியளித்து, மறைந்து கொண்டது.

இதைக்கண்ட ஒல்லாந்த அதிகாரி, பூசகரிடம் மன்னிப்புக் கேட்டு, அவரை வணங்கி,  கோவிலின் பூசைக்கு சென்று வழிபட்டு, தாங்கள் கண்ட பாம்பின் உருவத்தை போன்று வெள்ளியால் செய்த நாக படத்தையும் பூசகரிடம்  கொடுத்தனர்.
 அன்று தொடக்கம்  இன்றுவரை அந்த நாக படத்தை வைத்து, நீதி நாயக  முதலியாரின் வழித்தோன்றல்கள் பூசை செய்து வருகின்றனர்.

சர்ப்பக் குழந்தை பிறந்த பங்குனி மாத உத்திர நட்சத்திரமும் பௌர்ணமி திதியும் கூடிய நாளில், வருடம்தோறும் பொங்கல் உற்சவம் நடத்தப்படுகிறது. அந்த வகையிலேயே வழமைபோன்று இவ்வருடமும் புளியம்பொக்கணை நாகதம்பிரான் பொங்கல் உற்சவமானது, நேற்று  வெள்ளிக்கிழமை பாரம்பரிய முறைப்படி விளக்கு வைத்தல், பிரம்பு வளங்கும் நிகழ்வுகளோடு ஆரம்பமாகியது.\

எதிர்வரும் வெள்ளிக்கிழமை (18) நடைபெறவுள்ள  பொங்கலுக்கான பண்டமெடுக்கும் வைபவத்துக்கு பாரம்பரிய முறைப்படி மாட்டு வண்டிகளில் மீசாலை பண்டமரவடிக்கு சென்றுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .