2026 மே 18, திங்கட்கிழமை

நீதி கிடைக்கும் வரைக்கும் போராட்டம் தொடரும்

Mayu   / 2026 மே 18 , மு.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 17-ஆம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு, மட்டக்களப்பு மாவட்டம் குருமண்வெளியில் இன்று (18) காலை விசேட நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை உறுப்பினர் பத்ததேவுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சப்பட்டுச் சிரட்டைகளில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குறிப்பிட்டதாவது:

"மே 18 என்பது தமிழர் வரலாற்றில் மறக்க முடியாத நாள். எமது விடுதலைப் போராட்டம் மௌனிக்கப்பட்ட இந்த நாளில், உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் எமது இன அழிப்பு குறித்துப் பேசிவருகின்றனர். ஆனால், 17 ஆண்டுகள் கடந்தும், நாட்டில் ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்ட போதிலும் கொல்லப்பட்ட மக்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை."

தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மீதும் தனது அதிருப்தியை வெளியிட்ட அவர், பொறுப்புக்கூறல் விடயத்தில் இந்த அரசாங்கமும் போதிய முன்னேற்றத்தைக் காட்டவில்லை என்று சுட்டிக்காட்டினார். இருப்பினும், இறைவனுடைய தீர்ப்பிலிருந்து எவருமே தப்ப முடியாது என்றும், உயிரிழந்த உறவுகளுக்கு நீதி கிடைக்கும் வரை தமிழரசுக் கட்சி தனது போராட்டத்தைக் கைவிடாது என்றும் அவர் இதன்போது உறுதியளித்தார்.

இந்நிகழ்வில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை தவிசாளர் மேகசுந்தரம் வினோராஜ், உப தவிசாளர் அ.வசீகரன், போரதீவுப்பற்று பிரதேச சபையின் உப தவிசாளர் கயசீலன், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தினர்.

வ.சக்திவேல்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X