2026 மே 18, திங்கட்கிழமை

dd

’’விஜய்யின் ஆட்சி தாங்காது!’’

Editorial   / 2026 மே 18 , மு.ப. 11:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக (தவிக) கூட்டணி அரசு, இன்னும் ஆறு மாதங்களுக்குக் கூட நீடிக்காது என்று திமுக மூத்த தலைவரும் திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினருமான அனிதா ராதாகிருஷ்ணன் கடுமையாக விமர்சித்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இக்கருத்தைத் தெரிவித்தார்.

கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், விஜய்யின் 'தமிழக வெற்றிக் கழகம்' (தவிக) பெற்ற பெரும் வெற்றியைத் தொடர்ந்து புதிய அரசு பதவியேற்றது. இதற்கு முன்னர் முதலமைச்சராக இருந்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், மிக விரைவில் மீண்டும் முதலமைச்சராகப் பொறுப்பேற்பார் என்றும் அனிதா ராதாகிருஷ்ணன் இதன்போது உறுதியபடக் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அனிதா ராதாகிருஷ்ணன், "எங்களது 'தலைவர்' தான் அடுத்த முதலமைச்சர். இன்னும் நான்கு அல்லது ஆறு மாதங்களுக்குள் எங்களது தலைவர் (மு.க. ஸ்டாலின்) மீண்டும் முதலமைச்சராகப் பொறுப்பேற்பார்," என்று குறிப்பிட்டார்.

அனிதா ராதாகிருஷ்ணனின் இந்த அதிரடி விமர்சனம் குறித்து முதலமைச்சர் விஜய்யின் அலுவலகமோ, தமிழக வெற்றிக் கழகமோ (தவிக) அல்லது அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகளோ இதுவரை எந்தப் பதிலும் அளிக்கவில்லை.

தமிழகத்தில் தவிக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளுக்கும் இடையே அரசியல் யுத்தம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் பின்னணியில் இந்த கருத்துக்கள் வெளியாகியுள்ளன.

கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் விஜய்யின் 'தமிழக வெற்றிக் கழகம்' பெற்ற வெற்றி, தமிழக அரசியல் வரலாற்றில் பல தசாப்தங்களில் காணாத ஒரு மிகப்பெரிய திருப்பமாக அமைந்தது. தமிழகத்தின் மொத்தமுள்ள 234 தொகுதிகளில், தவிக கூட்டணி தனித்து 108 இடங்களைக் கைப்பற்றி அசுர சாதனை படைத்தது. பெரும்பான்மைக்கு வெறும் 10 இடங்களே குறைவாக இருந்த நிலையில், கடந்த 62 ஆண்டுகாலமாக திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு துருவங்களே மாறி மாறி ஆட்சி அமைத்து வந்த பாரம்பரிய அரசியலுக்கு இந்த வெற்றி முற்றுப்புள்ளி வைத்தது.

பெரும்பான்மைக்கான 10 இடங்களின் பற்றாக்குறை, தேர்தல் முடிந்து ஒரு வார கால அரசியல் அதிரடிகளுக்குப் பிறகு சரிசெய்யப்பட்டது. காங்கிரஸ், இரு இடதுசாரிக் கட்சிகள் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) ஆகியவற்றின் ஆதரவுடன் தவிக ஆட்சியைக் கைப்பற்றியது. இதில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், விஜய்யின் ஆட்சிக்கு முட்டுக்கொடுத்துள்ள இந்த மூன்று முக்கியக் கட்சிகளும், இதற்கு முன்னர் திமுக கூட்டணியில் அங்கம் வகித்தவை என்பது குறிப்பிடத்தக்கது.


பெரும்பான்மை பலம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து, தனது திரைத்துறை வாழ்க்கையிலிருந்து அரசியல் பயணத்தை நோக்கிய நகர்வை முழுமையாக்கும் வகையில் விஜய் முதலமைச்சராகப் பதவியேற்றார். அதன் பின்னர் நடைபெற்ற சட்டப்பேரவை நம்பிக்கை வாக்கெடுப்பில் 144க்கு 22 என்ற வாக்குகள் கணக்கில் விஜய் அரசு அமோக வெற்றி பெற்றது.

இந்த வாக்கெடுப்பின் போது அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களில் ஒரு பகுதியினர், கட்சியின் கொறடா உத்தரவை மீறி விஜய்க்கு ஆதரவாக வாக்களித்ததால் அதிமுகவுக்குள் பெரும் பிளவு ஏற்பட்டதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டது.

விஜய் முதலமைச்சராகப் பதவியேற்றது முதல், அவரது அரசாங்கத்தின் நிர்வாகத் திறமை, புதிய நியமனங்கள் மற்றும் கொள்கை முடிவுகள் குறித்து திமுக தரப்பிலிருந்து தொடர்ச்சியாகக் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. எனினும், தங்களது ஆட்சி பலவீனமாக இருப்பதாக எதிர்க்கட்சிகள் மீண்டும் மீண்டும் கூறிவரும் புகார்களை ஆளுங்கட்சியான தவிக முற்றிலும் நிராகரித்துள்ளதுடன், அரசாங்கம் மிகவும் ஸ்திரமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X