2026 மே 18, திங்கட்கிழமை

சசாராம் இரயில் நிலையத்தில் தீ விபத்து (வீடியோ)

Mayu   / 2026 மே 18 , மு.ப. 11:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

பீகார் மாநிலம் சசாராம் இரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பயணிகள் ரயில் ஒன்றின் பெட்டி திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சசாராம் ரயில் நிலையத்திலிருந்து பாட்னா நோக்கிச் செல்ல வேண்டிய விரைவுப் பயணிகள் ரயில் (Fast Passenger Train), இன்று (18) காலை 6 மணியளவில் 6-வது நடைமேடையில் புறப்படத் தயாராக இருந்தது. அப்போது, திடீரென ரயில் பெட்டி ஒன்றிலிருந்து கரும்புகை வெளியேறி தீப்பிடிக்கத் தொடங்கியது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த இரயில்வே பாதுகாப்புப் படையினர் மற்றும் ஊழியர்கள் தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். ரயில் புறப்படுவதற்கு சற்று முன்னதாக இந்த விபத்து நடந்ததால், நடைமேடையில் இருந்த பயணிகள் மத்தியில் பெரும் பீதி ஏற்பட்டது. இருப்பினும், இந்த விபத்தில் உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை என அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

முதற்கட்ட விசாரணையின்படி, மின் கசிவு (Short Circuit) காரணமாக இந்தத் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெட்டியை ரயிலில் இருந்து பிரித்தெடுக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. முழுமையான ஆய்வுக்குப் பிறகு ரயில் மீண்டும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நேற்று (17) மத்தியப் பிரதேசத்தின் ரத்லம் பகுதியில் டெல்லி நோக்கிச் சென்ற ராஜ்தானி எக்ஸ்பிரஸ் இரயிலின் ஏசி பெட்டி ஒன்றில் பெரும் தீ விபத்து ஏற்பட்ட நிலையில், இன்று இரண்டாவது முறையாக மற்றொரு இரயில் தீப்பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ராஜ்தானி எக்ஸ்பிரஸ் விபத்திலும் பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.

தொடர்ச்சியாக இரயில்களில் தீ விபத்துகள் ஏற்பட்டு வருவதால், இரயில் பெட்டிகளில் உள்ள தீயணைப்பு பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் உள்கட்டமைப்புகளை ஆய்வு செய்ய நாடு தழுவிய தணிக்கைக்கு (Audit) இரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. வருங்காலத்தில் இத்தகைய அசம்பாவிதங்களைத் தவிர்க்க பாதுகாப்புத் தயார்நிலை குறித்து விரிவான அறிக்கை சமர்ப்பிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X