2026 மார்ச் 26, வியாழக்கிழமை

ஒரே ஆசிரியருக்குப் பலமுறை இடமாற்றமா? (வீடியோ)

Lenin Raj   / 2026 மார்ச் 26 , பி.ப. 12:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆசிரியர்களின் இடமாற்றக் கோரிக்கைகளை மாகாணக் கல்வித் திணைக்களம் முறையாகப் பரிசீலிக்கவில்லை எனக் குற்றம் சாட்டி, ஆசிரியர்கள் இன்று 26 வட மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழு மற்றும் ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாகக் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.

மாகாணக் கல்வித் திணைக்களம் தகுதியான ஆசிரியர்களின் இடமாற்றக் கோரிக்கைகளைப் புறந்தள்ளிவிட்டு, ஏற்கனவே இடமாற்றம் பெற்ற ஆசிரியர்களுக்கே தொடர்ச்சியாக இடமாற்றங்களை வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதாகப் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

இந்தக் குறைபாடுகள் குறித்துக் கல்வித் திணைக்களத்திற்கு மேல்முறையீடு செய்த போதிலும், அந்த முறையீடுகளைப் பொதுச் சேவைகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்காமல் கல்வித் திணைக்களம் மறைப்பதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நீண்டகாலமாக பின்தங்கிய கிராமங்களில் பணியாற்றுபவர்கள், தீராத நோய்களால் பாதிக்கப்பட்ட மற்றும் சிகிச்சை பெற்று வருவோர், குடும்பச் சூழல் காரணமாகத் தூர இடங்களுக்குச் செல்ல முடியாத நிலையில் உள்ளவர்கள், இதனால் பாதிக்கப்படுவதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

போராட்டத்தின் ஒரு கட்டமாக, ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகள் சிலர் வட மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் ஆழ்வார்பிள்ளையை சந்தித்துத் தமது கோரிக்கைகளை முன்வைத்தனர். அதனைத் தொடர்ந்து, ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாகவும் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.

தமது மேல்முறையீடுகள் பரிசீலிக்கப்பட்டு நியாயமான தீர்வு கிடைக்கும் வரை, தற்போது பணியாற்றும் பாடசாலைகளிலேயே தொடர்ந்து பணியாற்றத் தமக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அவ்வாறு இல்லையெனில், இந்தப் போராட்டம் பல்வேறு வடிவங்களில் தீவிரமடையும் எனவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .