2025 மே 01, வியாழக்கிழமை

வரட்சி காரணமாக சேனாநாயக்க சமுத்திரத்தில் நீர்மட்டம் குறைவு

Suganthini Ratnam   / 2017 ஏப்ரல் 06 , மு.ப. 07:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

தற்போது நிலவும் வரட்சி காரணமாக அம்பாறை சேனாநாயக்க சமுத்திரத்தில் நீர்மட்டம் குறைந்து வருவதாக அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் துஷித பி வணிகசிங்க தெரிவித்தார்.

சேனநாயக்க சமுத்திரத்தில் 770,000 ஏக்கர் அடி நீர் தேக்கி வைக்கப்படுவது வழமையாகும். ஆனால்,  இம்முறை கிடைத்துள்ள குறைவான மழை வீழ்ச்சி மட்டும் வரட்சி காரணமாக 260,000 ஏக்கர் அடி நீர் மட்டுமே காணப்படுகின்றது

இந்நிலையில், குடிநீருக்காக 5,000 ஏக்கர் அடி நீரும், நெற்செய்கைக்காக 190,500 ஏக்கர் அடி நீரும் கரும்புச் செய்கை மற்றும் ஏனைய தேவைகளுக்காக 20,000 ஏக்கர் அடி நீரும் நிலம் உறுஞ்சுதல் மற்றும் ஆவியாதல் ஆகியவற்றுக்காக  45,000 ஏக்கர் அடி நீரையும் ஒதுக்கீடு செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.  

அம்பாறை மாவட்டக் கல்லோயா வலதுகரை விவாசய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் அக்கரைப்பற்றுப் பிரதேச செயலகத்தில் இன்று(6)  நடைபெற்றபோதே, அவர் இதனைக் கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தபோது, 'நீர்ப்பற்றாக்குறை காரணமாக இம்முறை மேற்கொள்ளப்படவுள்ள சிறுபோகம் 42 சதவீதமாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், கரும்புச் செய்கை 10,822 ஏக்கரிலும் நெற்செய்கை 45,940 ஏக்கரிலும் மொத்தமாக 56,762 ஏக்கரில் மேற்கொள்ளப்படவுள்ளது.

அம்பாறை நகரில் 14,833 ஏக்கரிலும்; இடது கரை வாய்க்கால் மூலம்  அக்கரைப்பற்றில் 10,080 ஏக்கரிலும் சம்மாந்துறையில் 4008 ஏக்கரிலும் அம்பாறை வலது கரையில் 2,360 ஏக்கரிலும்  அக்கரைப்பற்று, சம்மாந்துறை, கல்முனை ஆகிய பகுதிகளில்; ஆற்றுப்பாய்ச்சல் மூலம் 14,659 ஏக்கரிலும் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும், தற்போது ஏற்பட்டுள்ள வரட்சியான காலநிலை நாட்டின் பொருளாதாரம் மற்றும் சுகாதாரம்  ஆகியவற்றில்  பாரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றது. இதனைக் கருத்தில் கொண்டு மழை வேண்டி எதிர்வரும் நாளை காலை சேனநாயக சமுத்திரத்துக்கு அருகில் சமய நிகழ்வு, பிரார்த்தனை ஆகியவற்றை நடத்துவதற்கு  மாவட்டச் செயலகம் ஏற்பாடு செய்துள்ளது.

இம்;மாவட்டத்திலுள்ள அனைத்து ஆலயங்கள், மத வழிபாட்டுத் தலங்கள், நிறுவனங்கள் ஆகியவற்றிலும்  மழை வேண்டி மத வழிபாடுகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என்றார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .