2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

கரும்பு அறுவடை முடியவில்லையென செய்கையாளர்கள் தெரிவிப்பு

Suganthini Ratnam   / 2015 ஜூலை 27 , மு.ப. 03:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

அம்பாறை, ஹிங்குராணை சீனிக் கூட்டுத்தாபனமும் நுரைச்சோலைப் பிரதேச கரும்புச் செய்கையாளர்களும் செய்துகொண்ட உடன்படிக்கையின் பிரகாரம், 2014ஆம் ஆண்டு நுரைச்சோலையில் சுமார் 154 கண்டங்களில் 385 ஏக்கரில் மேற்கொள்ளப்பட்ட கரும்புச் செய்கைக்கான அறுவடைக்காலம் முடிவடைந்தபோதிலும், அதன் அறுவடை இன்னமும் முடிவடையவில்லை என்று கரும்புச் செய்கையாளர்கள் தெரிவித்தனர்.

இந்த தாமதத்தினால் தங்களுக்கு  பாரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளதுடன், வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்; அவர்கள் கூறினர்.

சாதாரணமாக கரும்புச் செய்கை பண்ணப்பட்டு ஒரு வருட காலப்பகுதியினுள்  அறுவடை மேற்கொள்ளப்பட்டுவிடும். ஆனால்,  நுரைச்சோலையில் கரும்புச் செய்கை பண்ணப்பட்டு ஒரு வருடமும் நான்கு மாதங்களும் கடந்துள்ள நிலையிலும், அதன்  அறுவடை  இன்னமும் முடிவடையவில்லை.

மேலும், காலம் கடந்து அறுவடை மேற்கொள்ளப்படுமிடத்து, கரும்பு முதிர்ச்சியுற்று அவற்றிலுள்ள சாறு குறைவடைந்துபோகும் என்று கரும்புச் செய்கையாளர்கள் கூறினர்.  

கரும்புச் செய்கைக்கான மூலப்பொருட்கள், உரவகைகள், கிருமிநாசினிகள் ஆகியவற்றை  செய்கையாளர்களுக்கு வழங்கி அறுவடையின் பின்னர் இதற்கான கட்டணத்தை சீனிக் கூட்டுத்தாபனம் அறவீடு செய்யும். அத்துடன், கரும்புச் செய்கைக்காக வங்கிகளிடமிருந்து 200,000 ரூபாவை கடனாக இக்கூட்டுத்தாபனம் பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கையையும் மேற்கொண்டுள்ளது. வங்கிகளில் பெற்றுக்கொள்ளப்பட்ட கடன் மூன்று கட்டங்களாக மூன்று வருடங்களில் செலுத்தி முடிக்கவேண்டும். பதினாறரை வட்டி வீதத்தில் பெற்றுக்கொண்ட கடனை ஒரு வருடம் நிறைவடைந்தும், இதுவரை செலுத்தாமையால், கடனை செலுத்துமாறு வங்கிகளிலிருந்து  அறிவித்தல்கள் வந்தவண்ணமுள்ளன.

எனவே, இவ்வாறு கரும்புச் செய்கை அறுவடையை துரிதப்படுத்தி முடிக்குமாறும் கரும்புச் செய்கைகயாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் நுரைச்சோலை கரும்புச் செய்கைக்கான கள உத்தியோகஸ்தர் ஜே.ஹாறூனிடம் கேட்டபோது, கடந்த மூன்று மாதங்களாக பருவமழை பெய்தமையால், அறுவடை  தாமதமாகியது. ஆனால், கடந்த ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி அறுவடை ஆரம்பிக்கப்பட்டு இதுவரையில்  60 கண்டங்களில் அறுவடை முடிவடைந்துள்ளன. தற்போது 39 கண்டங்களில் அறுவடை  மேற்கொள்ளப்படுகின்றது. இன்னும்  55 கண்டங்களில்; மாத்திரமே அறுவடை மேற்கொள்ளப்படவேண்டியுள்ளது' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .