Suganthini Ratnam / 2017 ஏப்ரல் 25 , மு.ப. 08:56 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன், வடிவேல் சக்திவேல், எம்.எஸ்.எம்.ஹனீபா, எம்.எஸ்.எம்.நூர்தீன்
அம்பாறை, இறக்காமம் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட மாணிக்கமடு, மாயக்கல்லி மலைப் பிரதேசத்தை அண்டியுள்ள பொதுமக்களின் காணிகள் ஆக்கிரமிப்புச் செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டு செல்லவுள்ளதாக கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்,
மாயக்கல்லிமலை விவகாரம் தொடர்பான மகஜரை முதலமைச்சரிடம் இறக்காமத்தைச் சேர்ந்த சிவில் சமூகப் பிரதிநிதிகள் திங்கட்கிழமை (24) கையளித்தபோதே, அவர் இதனைக் கூறினார்.
இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த முதலமைச்சர், 'கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளிலும் தொடர்ச்சியாக காணிகள் கையகப்படுத்தப்படுவதை வெறுமனே அவதானித்துக் கொண்டிருக்க முடியாது.
சிறுபான்மையினருக்குச் சொந்தமான பூர்வீகக் காணிகள் மீதான அத்துமீறல் நல்லாட்சிக்கு நல்ல சகுனம் அல்லவென்பதுடன், இது மக்கள் மத்தியில் பாரிய அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது' என்றார்.
'இந்த நாட்டில் சமாதானமும் இன சௌஜன்யமும் நிறைந்த அபிவிருத்தியைக் காண்பதற்கு இனவாதிகள் தொடர்ந்து தடையாக இருந்து வருகின்றனர். இதனால் நாடு பின்னோக்கிச் செல்வதுடன், இன விரிசல்களும் ஏற்படுகின்றன.
பல்லின மக்கள் வாழும் இந்த நாட்டில் எல்லா இனத்தவர்களும் தமது இடங்களில் சுதந்திரமாகவும் நிம்மதியாகவும் வாழ்வதற்கான உரிமை இருக்கின்றது என்பதையும் இனவாதிகளுக்கும் அவர்களுக்கு ஒத்தூதுகின்ற அரசியல்வாதிகளுக்கும் நாம் சொல்லியாக வேண்டும்.
அரசியல் யாப்பின் அடிப்படையில் விதந்துரைக்கப்பட்டுள்ள நாட்டுப் பிரஜை ஒருவரின் உரிமைக்கு அச்சுறுத்தல் ஏற்படுமிடத்து, அது தொடர்பில் நீதிமன்றத்தில் முறையிடுவதற்கான உரிமை எமக்கு இருக்கின்றது.
நீதிமன்றத்தில் வழக்கொன்று நிலுவையிலுள்ள நிலையில் மாயக்கல்லி மலையில் இவ்வாறு அத்துமீறுவது நீதித்துறையின் அதிகாரத்தை கேள்விக்குட்படுத்துவதாகும்.
நீதித்துறையை கேள்விக்குட்படுத்தும் நபர்கள் யாராக இருந்தாலும் தராதரம் பாராது கைதுசெய்யப்பட வேண்டும்.
சிறுபான்மையினரின் பூர்வீக நிலங்கள் மீதான ஆக்கிரமிப்பு, அந்தச் சமூகங்களின் எதிர்கால இருப்பையே கேள்விக்குட்படுத்தும் என்பதை நாம் நன்கு உணர்ந்துள்ளதுடன், அவ்வாறான செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை' என்றார்.
25 Jan 2026
25 Jan 2026
25 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 Jan 2026
25 Jan 2026
25 Jan 2026