Suganthini Ratnam / 2016 நவம்பர் 17 , மு.ப. 06:04 - 0 - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா
இறக்காமம், மாணிக்கமடு மாயக்கல்லி மலையில் புத்தர் சிலை வைக்கப்பட்டதைத் தொடர்ந்து அங்கு பௌத்த மத வழிபாடுகள் நடைபெறுவதுடன், நிரந்தர மடாலயம் அமைப்பதற்கான முன்னெடுப்பும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அப்பிரதேச மக்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
குறித்த மலையில் புத்தர் சிலை வைக்கப்பட்டமை தொடர்பான நீதிமன்ற விசாரணை நடைபெற்றுவரும் நிலையில், தேரர்களுடன் பெரும்பான்மையின மக்களும் அங்கு வந்து செல்கின்றமை தங்களுக்கு அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளதாக அம்மக்கள் தெரிவித்தனர்.
மாயக்கல்லி மலையில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலைக்கு அருகில் கடந்த திங்கட்கிழமை (14) மாலை புனித போயா நோன்மதித் தின தியான நிகழ்வு முதன்முறையாக அம்பாறை வித்தியானந்த பிரிவனாதிபதி கிரிந்திவெல சோமரத்தின தேரர் தலைமையிலான தேரர்களின் பங்கேற்புடன் நடைபெற்றது.
அன்றையதினம் மாலை மாயக்கல்லி மலையெங்கும் எண்ணைய் விளக்குகள் ஏற்பட்டு தியான நிகழ்வு நடைபெற்றது.
இதற்காக பஸ் வண்டிகள், வான்கள் மற்றும் கென்;டர் ரக வாகனங்களில் பிக்குகள், பௌத்த தர்ம பாடசாலை மாணவர்கள் உள்ளிட்டோர் ஏற்றிவரப்பட்டதாக அப்பிரதேச மக்கள் கூறினர்.
மலையடிவாரத்தில் மடாலயம் அமைப்பதற்கான காணி வழங்குமாறு இறக்காமம் பிரதேச செயலாளரிடம் அண்மையில் தேரர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாகத் தெரியவருகின்றது.
பொலிஸ் மற்றும் நீதிமன்ற விசாரணையிலுள்ள இப்பிரதேசத்தில் காணி வழங்கும் அதிகாரம் தனக்குக் கிடையாது என இறக்காமம் பிரதேச செயலாளர் எம்.எம்.நஸீர், இன்று வியாழக்கிழமை தெரிவித்தார்.
மாயக்கல்லி மலையில் புத்தர் சிலை வைப்பு விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை எதிர்வரும் 30ஆம் திகதிவரை அம்பாறை நீதவான் நீதிமன்றத்தால் ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


10 minute ago
13 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
13 minute ago
1 hours ago
1 hours ago