2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

அனுபவம் புதிது ; பேஸ்புக்

Editorial   / 2019 ஓகஸ்ட் 16 , பி.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

அதிக முறை முகநூல் என்ற சமூக வலைத்தளத்தில் பாலியல் வன்முறையும் கொலையும் செய்யப்பட்ட, செய்யப்படுகின்ற ஒரு பெண் என்றால் அது நானாகத்தான் இருப்பேன். இதைச் சொல்வதில் ஒரு பெருமையும் இல்லை. ஆனால் இந்தத் தொடர் வன்முறைகளுக்கு ஏன் ஆண்கள் என்னைத் தேர்ந்தெடுத்தார்கள் என்பதைப் பற்றிப் பேச வேண்டியது அவசியம்.  

நானொரு முஸ்லிம் என்ற வகையில் இந்தவிதமான வன்முறைகளை முஸ்லிம் ஆண்கள்தான் நிகழ்த்துகிறார்கள் என்பது தெட்டத் தெளிவான உண்மை. முதலாவதாக இவர்களை முஸ்லிம் ஆண்கள் என்று சொல்லலாமா என்று யோசிக்கிறேன். கெட்ட வாடையைத் தருவதற்காக மலத்தை மலம் என்று கூறாமல் வேறு பெயர் கொண்டா அழைக்க முடியும்? இஸ்லாத்தின் போக்கை “நவீன உலக” ஆண்கள் தங்களுக்குத் தகுந்தபடியாக வளைத்துக் கொண்டிருப்பதிலிருந்து அவர்கள் தங்களை முதன்மைப்படுத்திக் கொள்கிறார்கள். உலகத்தில் உள்ள அத்தனை பெண்களும் ஆண்களின் ஆதிக்கத்துக்குக் கீழே இருக்கவேண்டும் என்று விரும்புகிறார்கள்.

என்னை வன்முறை செய்வதிலும் கொலை செய்வதிலும் முஸ்லிம் ஆண்களுக்கு ஒரு தனிச் சுகம் இருந்து கொண்டே இருக்கின்றது. கிட்டத்தட்ட இது “சுய இன்பம்” பெறுவதுபோன்ற ஒரு சுகம் இவர்களுக்கு. இதற்குச் சில தெளிவான காரணங்கள்  உண்டு. ஒன்று நானொரு பெண். இரண்டு நானொரு முஸ்லிம் பெண். மூன்று நானொரு தனியாக வாழ்கின்ற பெண். இந்த மூன்று காரணங்களும் ஆண்களுக்கு விசேடமானவை. இவர்களைப்

பொறுத்தவரை ஒரு பெண் என்றால் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று சில சட்டங்கள் வைத்திருக்கிறார்கள். நான் அந்த சட்டங்களுக்குள் இல்லை என்பது அவர்களது நீண்டகாலக் குறைபாடு. ஏக்கம். வருத்தம். இரண்டாவது நானொரு முஸ்லிம் பெண்ணாக இல்லை என்பதிலுள்ள கோபம். முஸ்லிம் பெண் என்றால் முஸ்லிம் பெண் என்று சொல்லத்தக்க வகையில் உடை உடுத்தியிருக்க வேண்டும். நாவை அடக்கிப் பேச வேண்டும். முக்கியமாக ஆண்கள் தான் பெண்களின் எஜமானர்கள் என்று பேச வேண்டும். அப்புறம், மதம் கலாசாரம் என்று வரும்போது அடக்க ஒடுக்கமாக ஒதுங்கிப் போய்விடவேண்டும். விமர்சனம் கிமர்சனமெல்லாம் பேசவே கூடாது. அதெல்லாம் ஆண்கள் பார்த்துக் கொள்ளவேண்டிய காரியங்கள். அடுத்தது மூன்றாவது காரணம், தனியாக வாழ்கின்ற பெண். இவர்களைப் பொறுத்தவரை, தனியாக வாழ்கின்ற பெண், தனியாக வாழ்வதாக வெளியே சொல்லவே கூடாது.  இன்னும் தெளிவாகச் சொல்வதென்றால் தனியாக ஒரு பெண் வாழவே கூடாது. அவள் எப்போதும் ஒரு ஆணுடன், ஆணின் துணையுடன், அவனது பாதுகாப்புடன்தான் வாழவேண்டும்.

இந்த மூன்று காரணங்களும்தான் பொதுவாக நான் முகநூல் போன்ற சமூக வலைத்தளங்களில் தாக்கப்படக் காரணம். இந்தக் காரணங்களை விடவும் இந்தக் காரணங்களுக்குப் பின்னாலுள்ள கூட்டு மனநிலை மிக முக்கியமானது. இந்த மூன்று காரணங்களும் பொருந்துகின்ற ஒரு பெண் என்றால் அவளுக்கு யாரும் புத்தி சொல்லலாம் என்று லுங்கியை மடித்துக் கொண்டு கிளம்பிவிடுகின்ற உளவியல், வெறுமனே ஆணுக்கு மட்டுமே இருக்கக் கூடியது. ஆண் என்கின்ற ஒரேயொரு தகுதியும் அதிகார உணர்வும்தான் இதனைச் செய்யத் தூண்டுகிறது. தன்னைப் பற்றியோ, பிறரைப் பற்றியோ, சமூக வாழ்வு, ஒழுங்கு பற்றியோ எந்தத் தெளிவும் அறிவும் அற்றவர்கள் மட்டும்தான் இப்படிச் செய்ய முடியும். இந்த மூன்று பொருத்தங்களும் உள்ள பெண் இருந்து, அவள் சமூகத்தில் தன்னிறைவாக வாழ்கிறாள் என்று தெரியும்போது ஆண்கள் மிரண்டு போகிறார்கள். எப்படி இதெல்லாம் சாத்தியம் என்று மூளையைக் கசக்கிப் பிழிந்து காரணங்களை அவர்களே கண்டறிகிறார்கள். அவர்கள் கண்டறிகின்ற காரணங்களில் நிறைய ஆண்கள் இருப்பார்கள். “இவளுக்கு இவனுடன் தொடர்பு” “அவனுடன் தொடர்பு” என்றெல்லாம் கதைகளைக் கட்டி விடுகிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை ஒரு பெண் தனியாக வாழவே முடியாது. வாழவும் கூடாது. நிஜத்தில் இல்லை என்றாலும் திரைமறைவில் ஓர் ஆண் இருப்பான் என்று தங்களைத் தாங்களே நெஞ்சைத் தட்டிச் சொல்லித் திருப்திப்பட்டுக் கொள்வதற்குத்தான் இந்தக் காரணங்கள். இந்த மனநிலை கொண்ட ஆண்கள்தான் நாம் வாழும் சமூகத்தில் அதிகம். ஒரு பறவை இறந்துக் கிடந்தால் நாய்கள் பல சேர்ந்து தெருவையே நாசப்படுத்தி வைப்பதுபோல, ஒரு பெண்ணைக் குதறுவதில் ஆண்கள் மகத்தான மகிழ்ச்சியை அடைகிறார்கள். இத்தனை பேரின்பம் அவர்களுக்குச் “சுய இன்பத்தில்” கூட கிடைக்குமா என்பது சந்தேகம்.

இந்த வகை ஆண்களிடம் நான் கவனித்த இன்னொரு ஒற்றுமை உள்ளது. அவர்கள் பெரும்பாலும் “தனிமையில்” இருக்கும் ஆண்கள். ஒன்றில் திருமணமாகாத ஆண்கள். அல்லது திருமணமாகியும் வேலை நிமித்தம் மனைவி, பிள்ளைகளைப் பிரிந்து தனிமையில் இருப்பவர்கள். இவர்களில் அனேகர், மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து கொண்டு இந்த மகத்தான சமூகக் கடமையைச் செய்கிறார்கள். சில போராளிகள் இங்கேதான் நம் திருநாட்டில் வாழ்ந்து கொண்டு பல்வேறு ஏக்கங்கள், ஏமாற்றங்களை மனத்தில் ஒளித்துக் கொண்டு சமூகத்துக்காக ஏதாவது செய்யவேண்டும் என்ற வேகத்தில் இதனைச் செய்கிறார்கள். இவர்களது சமூகக் கடமையெல்லாம் ஒரு பெண்ணைத் துகிலுரிப்பதுடன் முடிவடைவதுதான்.

இது ஒரு நீண்ட காலமாக நடக்கின்ற விளையாட்டு. ஆதலால் இவற்றைக் கடப்பதற்கு நானும் பல உத்திகளைக் கற்றுத் தேறியிருக்கிறேன். முக்கியமாக இவற்றுக்கெல்லாம் நான் பதில் சொல்வது கிடையாது. என்னைப் பொறுத்தவரை அவசியமற்றது. இன்னும் சொன்னால் யாராவது நண்பர்கள் சொன்னாலே ஒழிய, இவர்களது எழுத்துச் சீர்த்திருத்தங்களை நான் கண்டு கொள்வதுகூட இல்லை.

சில நாள்களுக்கு முன்பு கொழும்பு கனத்தை வீதியிலிருந்து பொரள்ளை வழியாக பத்தரமுல்லைக்குச் செல்வதற்காக வந்து கொண்டிருந்தபோது தெருவில் குடித்துவிட்டு மல்லாந்து விழுந்துகிடந்த ஒரு மனிதனைக் கண்டேன். அவன் இறந்துபோய்க் கிடக்கிறானோ என்று தோன்றுகிறளவுக்கு அவனில் ஈக்கள் மொய்த்திருந்தன. அவன் உடுத்தியிருந்த “சாரங்” அவிழ்ந்து ஆணுறுப்பு முற்றிலுமாக வெளிப்பட்டுத் தெரிந்தது, அந்த வழியாகச் சென்றவர்கள் அந்த மனிதனை நின்று நிதானமாகக் கூடப் பார்க்கவில்லை. போகிற போக்கில் ஒரு பார்வையை வீசிவிட்டு அப்படியே தங்கள் வேலைகளைப் பார்க்க, என்ன காரணத்துக்காக வந்தார்களோ அந்த நோக்கத்துடன் நடந்து கொண்டிருந்தார்கள்.  நானும் அப்படியே அவ்விடத்தை விட்டுக் கடந்து போனேன்.

என்னைப் பொறுத்தவரை, முகநூல் போன்ற சமூகவலைத்தளங்களில் பெண்களை வன்முறை செய்கின்ற ஆண்களும் தெருவில் அப்படிக் கிடந்த ஆணும் ஒன்றுதான். நாம் செய்யவேண்டியது, கடந்து போகவேண்டியது மட்டுமே. இவர்களைக் காலம் சரியான நேரத்தில் தண்டிக்கும். தடை செய்யப்பட்ட தீவிரவாத தேசிய தௌஹீத் ஜமாஅத்தின் உறுப்பினவர்கள் பலரும் இப்படி முகநூலில் ஆட்டம் போட்டவர்கள்தான். பெண்களின் சதைகளைப் பிளந்து ருசித்தவர்களும்தான். அவர்களின் கதிகளைத்தான்  காண்கிறோமே!


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .