2024 ஏப்ரல் 30, செவ்வாய்க்கிழமை

அங்காடி விவகாரமும் திலீபனின் ஊர்தி மீதான தாக்குதலும்

Editorial   / 2023 ஒக்டோபர் 03 , பி.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

அங்காடி விவகாரமும் திலீபனின் ஊர்தி மீதான தாக்குதலும்

தியாக தீபம் திலீபனின் உருவப்படம் தாங்கிய நினைவு ஊர்தியின் மீது, திருகோணமலையில் அப்பட்டமாக நடத்தப்பட்ட தாக்குதலை அங்கிருந்த பாதுகாப்பு சீருடை தரித்தவர்கள் கைகட்டி வேடிக்கை பார்த்தனர். இல்லையேல், தாக்குதல்களை மேற்கொண்ட பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு இடமளித்துவிட்டு கண்டும் காணாதது போலவே இருந்தனர்.

அந்தத் தாக்குதல் சம்பவத்துக்கு பாராளுமன்றத்துக்கு உள்ளும் வெளியிலும் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பின. அதனையடுத்தே சந்தேகத்தின் பேரில் சிலர் கைது செய்யப்பட்டனர்.  திலீபனின் ஊர்திக்கு இடைக்காலத் தடையுத்தரவை பிறப்பிக்குமாறு கோரி வடக்கு, கிழக்கில் உள்ள நீதிமன்றங்களில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.  பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தள்ளுப்படி செய்யப்பட்டன.

யாழ்ப்பாணத்துக்குச் சென்றிருந்த சட்டமா அதிபர் திணைக்களத்தின் சட்டத்தரணிகளால் தாக்கல் செய்யப்பட்ட மனுவும் நிராகரிக்கப்பட்டது. எனினும், கொழும்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு மட்டுமே தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

திலீபனின் ஊர்தி தொடர்பில் இருதரப்பு கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. இனவாதத்தை தூண்டும் ஒரு நிகழ்வாகவே இந்த ஊர்தியை பார்கின்றனர். எனினும், நினைவேந்தலை நியாயப்படுத்துகின்றனர்.

திலீபனின் ஊர்தியும், அதனோடு சென்றிருந்தவர்களும் தாக்கப்பட்டதை பொலிஸார் வேடிக்கை பார்த்தது மட்டுமே எஞ்சியிருக்கிறது. இதற்கிடையே, பொரளை பல்பொருள் அங்காடியில் திருடினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் யுவதியொருவர் கண்மூடித்தனமாகத் தாக்கப்பட்டார். சம்பவம் தொடர்பில் ஐவர் கைது செய்யப்பட்டனர்.
இதனையடுத்து அறிக்கையொன்றை விடுத்துள்ள இலங்கை பொலிஸ், சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு யாரையும் தாக்க எவருக்கும் உரிமை இல்லை அந்த நபரையோ பெண்ணையோ பிடித்து பொலிஸில் ஒப்படைக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.

அப்படியாயின், திலீபனின் உருவப்படம் தாங்கிய ஊர்தி மீதும், அதனோடு சென்றிருந்தவர்கள் மீதும் காடைத்தனமாக தாக்குதல் நடத்தப்பட்டபோது இவ்வாறதொரு தெளிவூட்டும் அறிக்கையை இலங்கை பொலிஸ் விடுக்காமல் விட்டது ஏன்?

நாட்டின் சட்டம் சகலருக்கும் சமமானதாக இருக்கவேண்டும், இன,மொழி, மத வேறுபாடுகளுக்கு அமைய, தங்களுக்குத் தேவையான வகையில் சட்டங்களை நடைமுறைப்படுத்துவது, முரண்பாடுகளையே ஏற்படுத்தும், தாக்குதல் சம்பவங்களை பல வகைப்படுத்தலாம் என்றாலும் தாக்குதலே நடத்தப்பட்டுள்ளது என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.

ஏனெனில், திருகோணமலையில் திலீபனின் ஊர்தி மீது தாக்குதல் நடத்தப்பட்ட காட்சிகள் அடங்கிய காணொளி சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டிருந்தது என்பதை பொலிஸார் கவனத்தில் கொண்டிருக்கவேண்டும். அப்போது, அங்கு பொலிஸாரும் இருந்துள்ளனர்.

திலீபனின் ஊர்தி மீதான தாக்குதலை ஒரு களவுடன் ஒப்பிட்டிருக்கக்கூடாது. எனினும், காடைத்தனமான தாக்குதலுக்கு ஒரு சட்டமும், களவெடுத்தமைக்கு சட்ட ரீதியில் விளக்கமளித்து கடுமையான அறிவுறுத்தல் விடுத்தமையை ஏற்றுக்கொள்ள முடியாது.

 என்பதுடன், சகலருக்கும் சட்டம் சமமானது  என்ற சிந்தனை உதிக்கும் வரையில், பக்கசார்பான முடிவுகளே எடுக்கப்படும் என்பது கடந்தகால கசப்பாகும். அதனை மாற்றியமைக்க முயற்சிக்கவும்.

25.09.2023

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X