2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

ஆடி அடங்கும் வாழ்க்கையும்; சுரண்டும் அரசாங்கமும்

Editorial   / 2024 பெப்ரவரி 06 , பி.ப. 12:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிறப்பிருக்குமானால் கட்டாயம் இறப்பிருக்கும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமே இல்லை, இந்த பூமியில் பிறக்கும் ஒவ்வொருவரும் இறந்தேயாக வேண்டும். உயிரினங்களும் இறக்க வேண்டும். இல்லையேல், சனத்தொகை அதிகரித்து பூமி தாங்கிக்கொள்ளாது என்றெல்லாம் கூறுவர். அந்த இறப்பு எவ்வாறு அமையும் என்பது எவராலும் சொல்லவே முடியாது.

பிறக்கும் முன்னர், கருவிலேயே சிலர் கலைத்துவிடுவர், பிறப்பதற்கு முன்னரே சிசு இறந்துவிடும், பிறந்தவுடன் இறக்க நேரிடும், அதன்பின்னர், பெற்றோரின் கவனயீனத்தால் குழந்தைப் பருவத்திலேயே இறப்பு ஏற்படும். தவறுதலான செயற்பாடுகளினால் சிறுவர்கள், இளைஞர்கள் இறந்துவிடுவர். இவ்வாறான சந்தர்ப்பங்களில் வாழவேண்டிய வயதில் காலன் காவுக்கொண்டுவிட்டான் என்பர்.

இயற்கை அனர்த்தங்கள், விபத்துக்கள், நோய்வாய்ப்பட்டதன் பின்னர் இறந்து விடுதல், வாழ்ந்து கழித்து விட்டால் ஒரு வயதுக்கு மேல் கட்டாயம் மரணித்தே ஆகவேண்டும். வயது முதிர்வின் காரணமாகவும் இறப்புகள் நிகழும், அவ்வாறானவர்களின் மரணங்களின் போது, “ஆடி அடங்கிய வாழ்க்கை” என்பர்.

எவ்வாறு மரணித்தாலும், ஆறடி நிலமே சொந்தமாகும். தற்போதைய காலகட்டங்களில், புதைப்பதற்குப் பதிலாக, சடலத்தை எரியூட்டிவிட்டு சாம்பலை மட்டுமே சுடச்சுட கைகளில் கொடுத்துவிடுவர். அந்தளவுக்கு எல்லாமே சுருங்கிவிட்டது.

பல இடங்களில் இன்னும் புதைக்கும் சம்பிரதாயமே இருக்கிறது. இறுதிச் சடங்குகள் ஒவ்வொரு சமயங்களுக்கும் இடையில் வேறுபடும். பொதுவாக பார்க்குமிடத்து “ஆடி அடங்கும் வாழ்க்கையடா ஆறடி நிலமே சொந்தமடா” என பாடியிருப்பது பொருத்தமானதாய் இருக்கிறது. நமது நாட்டை பொறுத்தவரையில் ஊழல் மோசடியில், 115ஆவது இடத்திலேயே இருக்கின்றது.

அரசு சாரா அமைப்பான ‘டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்’ நிர்வாக வெளிப்படைத்தன்மை, இலஞ்சம், ஊழல் மற்றும் முறைகேடுகள் போன்றவற்றைக் காரணிகளாகக் கொண்டு 180 நாடுகளில் 2023ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளிலேயே இது அம்பலமானது.

ஊழல், மோசடி இல்லாத நாடுகளே இல்லை என்பதுதான் உண்மை, எரியூட்டுவதற்கான கொண்டுவரப்படும் சடலங்களுக்குக் கூடுதலான கட்டணங்கள் அறவிடப்பட்ட சம்பவமொன்று மாத்தளை மாநகர எல்லைக்குள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மாநகர எல்லைக்குள் மரணிக்கும் சடலத்துக்கு 5 ஆயிரம் ரூபாய் அதிகமாகவும், எல்லைக்குள் வெளியில் மரணிக்கும் ஒருவரது சடலத்தை எரியூட்டுவதற்கு அதிகமாக 5 ஆயிரம் ரூபாயும் அறவிடப்பட்டுள்ளமை அம்பலமாகியது.

இவ்வாறான நிலையில், இறுதிச் சடங்குகளுக்கான கட்டணங்கள் கொழும்பு மாநகர சபையினால் அதிகரிக்கப்பட்டுள்ளன.

1,500 ரூபாயாக வசூலிக்கப்பட்ட தொகை, தற்போது 15 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப் பட்டுள்ளது. 5 ஆயிரமாக இருந்த கட்டணம் 25 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. பொருளாதார வசதி இல்லாதவர்களில் சிலர் தங்களுடைய உறவினர்களின் சடலங்களை வீட்டிலேயே வைத்திருந்த சம்பவங்களும் உண்டு.

நாட்டில் வாழமுடியாத நிலைமையே ஏற்பட்டுள்ளது. பல பொருட்களுக்கான தட்டுப்பாடு உள்ளிட்ட காரணிகளால், இறப்புகளின் சதவீதம் அதிகரிக்கக்கூடுமென அஞ்சப்படுகின்றது. இதற்கிடையில் தான் ஆடி அடங்கும் வாழ்க்கையிலும் அரசாங்கம் சுரண்டிக்கொண்டிருக்கின்றது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X