2024 ஏப்ரல் 30, செவ்வாய்க்கிழமை

இந்திய உளவுத்துறையின் எச்சரிக்கையும் சீண்டிப் பார்த்தலும்

Editorial   / 2023 ஓகஸ்ட் 22 , பி.ப. 05:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய உளவுத்துறையின் எச்சரிக்கையும் சீண்டிப் பார்த்தலும்

இறுதியாக நடைபெற்ற ஜனாதிபதி தேர்லுக்கு முன்னர், முஸ்லிம்களுக்கு எதிரான பிரசாரம், நாக்கூசும் அளவுக்கு முன்னெடுக்கப்பட்டமை யாவரும் அறிந்த விடயம். அதற்குப் பின்னர், ஒவ்வொரு செயற்பாடும் பொய்ப்பிக்கப்பட்டன.

“சிங்கள மக்களுக்கு மலட்டுத் தன்மையை ஏற்படுத்தும் துகள், கொத்துரொட்டியில் கலக்கப்பட்டுள்ளது ஆகையால், முஸ்லிம்களின் உணவகங்களின் சாப்பிடக்கூடாது” என்று  பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டன.

இறுதியில், முஸ்லிம் வைத்தியர் ஒருவர், எவ்விதமான அனுமதியும் இன்றி, சிங்கள இளம் தாய்மார்களுக்கு கருத்தடைச் செய்துவிட்டார் என்றும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. எனினும், அதில் இரண்டொரு தாய்மார்கள் மீண்டும் கருத்தரித்தனர். அந்த வைத்தியருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் பொய்யாகின.

இவ்விரண்டு சம்பவங்களுக்கு இடையில், முஸ்லிம் இளைஞர்கள் வேண்டுமென்றே கைது செய்யப்பட்டமை, பர்தா பிரச்சினை இவ்வாறு அடுக்கிக்கொண்டே போகலாம்.

இவ்வாறான பொய்ப் பிரசாரங்களால், பெருபாலான சிங்கள மக்கள், முஸ்லிம்களை சந்தேகக் கண்கொண்டே பார்த்தனர். இவையெல்லாம் அரசியலுக்காக ஜோடிக்கப்பட்டமை என்பது பின் நாளிலேயே வெளிச்சத்துக்கு வந்தன.

இதனிடையே, வடக்கு, கிழக்கில் தமிழர்களின் பூர்வீக காணிகளில் அடத்தாக புத்தர் சிலைகளை வைத்தல், விஹாரைகளை நிறுவுதல் என்பன அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ‘தட்டிக்கேட்டால் தாக்குவோம்’ என்ற சிந்தனையைத் துளிர்விடச் செய்துள்ளனர்.

எங்கிருந்தாவது ஆரம்பிக்கவேண்டும் என்ற சின்னத்தனமான சிந்தனையில் செயற்படுவோரே, இனவாதத்தை கக்கி, இரத்தத்தை சூடேற்றும் பணியை கனக்கச்சிதமாக செய்து கொண்டிருக்கின்றனர். இவற்றின் ஊடாக, நாட்டில் ஏற்படும் இரத்தக்களரியில் குதிப்பதற்கே முயல்கின்றனர்.

இதனிடையே, இலங்கையில் மீண்டும் இனக்கலவர சூழல் ஏற்பட்டுள்ளது என இந்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதைச் சாதாரணமாக பார்த்துவிடமுடியாது. ஏனெனில், உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலுக்கு முன்னர், இந்தியாவின் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தமை அறிந்ததே!

‘இலங்கை அரசின் தொல்பொருள் திணைக்களத்தின் ஆதரவுடன், தமிழர் பகுதிகளை ஆக்கிரமித்து, விஹாரைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இது தமிழர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தி உள்ளன’ என்றும் இந்தியச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையைப் பொறுத்தவரையில், எங்கிருந்தாவது இனமோதலை ஏற்படுத்தவேண்டும் என்ற நோக்கத்திலான சீண்டிப்பார்த்தல் கைங்கரியங்கள் இடம்பெறுகின்றன. தற்போது இந்தச் சீண்டிப்பார்த்தல்கள் கனன்றுகொண்டிருக்கின்றன. எப்போது தீப்பிளம்பாய் கக்கும் என்பது யாருக்கும் தெரியாமலே இருக்கின்றது.

யுத்த களரிக்கும் பின்னர், கொவிட் - 19 பெருந்தொற்றுக்குள் சிக்கியிருந்த நாடு, மீண்டெழுந்து கொண்டிருந்த போது, பொருளாதார நெருக்கடி அப்படியே அமிழ்த்திவிட்டது. இதற்கிடையே மீண்டுமொரு இனமோதல் என்ற நெருக்கடியைத் தாங்கிக்கொள்ளும் அளவுக்கு நாடு இல்லை.

அவ்வாறானதொரு நிலைமை ஏற்படுமாயின், சுற்றுலாத்துறை உள்ளிட்ட சகல துறைகளும் கடுமையான பாதிப்பை சந்திக்கவேண்டிவரும். ஆகையால், இந்திய உளவுத்துறையின் எச்சரிக்கையை ஆழமாகக் கவனித்து, சீண்டிப்பார்க்கும் எண்ணத்தை கைவிடுவதே நாட்டுக்கும் எதிர்காலத்துக்கும் சிறந்தது.  18.08.2023

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X