2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

பண்புகளை இழக்கும் பகிடி வதைகள் வேண்டாம்

A.Kanagaraj   / 2024 பெப்ரவரி 03 , மு.ப. 02:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

பல்கலைக்கழகத்துக்குத் தெரிவாகும் மாணவர்களிடையே உள்ள கூச்ச சுபாவத்தைப் போக்குவதற்காகவும் மாணவர்களிடையே காணப்படும் ஏற்றத்தாழ்வினைப் போக்கி, அவர்களிடையே ஒரு சுமூகமான நெருக்கத்தை ஏற்படுத்துவதற்கும், பொறாமை போன்ற அற்ப உளப் பிரச்சினைகளைப் போக்குவதற்குமே, அந்தக் காலத்தில் பல்கலைக்கழகங்களில் 'ராக்கிங்' செய்யப்பட்டது.

 பேராதனை பல்கலைகழகத்தில் பொறியியல் பீட மாணவனாக  1997ஆம் ஆண்டில், இணைந்த செல்வநாயகம் வரப்பிரகாஷ் என்ற மாணவன்,   பகிடிவதைக்கு உள்ளான நிலையில் உயிரிழந்தான்.     அங்கிருந்த சிரேஷ்ட மாணவர்களால் ஆயிரம் முறை தோப்புக்கரணம் போட வைக்கப்பட்டான். இதனால், அவனது சிறுநீரகங்கள் சிதைக்கப்பட்ட நிலையிலேயே உயிரிழந்தான்.  

பகிடிவதையால் பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த வரப்பிரகாஷ், 'நான் இனி பல்கலைக்கழகம் போகாமல் இருந்துவிடுகிறேன். அவர்களை தண்டிக்க வேண்டாம். மன்னித்து விட்டுவிடுங்கள்' என்று கோரியிருந்தான். தன்னுடலுக்கு இன்னல்களை ஏற்படுத்தியவர்களுக்கு மன்னிப்பளித்த அந்த வரப்பிரகாஷ், இன்னுயிரை இழந்தான்.

  வரப்பிரகாஷுக்கு பகிடிவதையை வழங்கிய மாணவன், பொலிஸாரால் இனங்காணப்பட்ட நிலையில், அவனுக்கு எதிராக வழக்கும் தொடரப்பட்டது. இந்த வழக்கின் தீர்ப்பு, கண்டி மேல் நீதிமன்றத்தினால், 2014 ஆண்டு ஜூலை மாதம் 4ஆம் திகதி வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

இதன்போது, குற்றவாளியாக இனங்காணப்பட்ட  மாணவனுக்கு  மரண தண்டனையும் விதிக்கப்பட்டது. இருப்பினும், வழக்கு விசாரணைகளுக்காக சந்தேகநபர், நீதிமன்றத்தில் ஆஜராகியிருக்கவில்லை. அச்சந்தேகநபர் வெளிநாட்டுக்குத் தப்பிச்சென்றுவிட்டதாகப் பொலிஸார் அறிவித்தனர். இதனால், அவருக்கு எதிராக பகிரங்க பிடியாணையும் பிறப்பிக்கப்பட்டது. இருப்பினும், இதுவரையில் அவர் சிக்கியதாகத் தெரியவில்லை.

பகிடிவதை என்பது, சிரேஷ்ட மாணவர்களால் புதிய மாணவர்கள் மீது திணிக்கப்படும் உடல், உள ரீதியான துன்புறுத்தலாகும். ஆரம்ப காலத்தில், புதியவர்களுடன் நட்பை ஏற்படுத்திக்கொள்ளும் நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பகிடிவதை, பிற்காலத்தில் வன்முறைச் செயல்களுக்கும் குற்றங்களுக்கும் .

நாட்டில் உள்ள சகல பல்கலைக்கழகங்களிலும் தெரிந்தும் தெரியாமலும் புதுமுக மாணவர்கள், சிரேஷ்ட மாணவர்களால், மாணவிகளால் பகிடி வதைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். இரண்டொரு சம்பவங்களை தவிர, ஏனைய சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வராமல் விட்டுவிடுகின்றன. இந்த பகிடி வதையை தாங்கிக்கொள்ள முடியாதவர்கள், பல்கலைக்கழக கல்வியை இடையிலேயே கைவிட்டுவிடுகின்றனர்.

இவ்வாறான சம்பவங்களை தவிர்க்கும் வகையில், பல்கலைக்கழங்களுக்கு செல்லும் புது மாணவர்களுக்கு தலைமைத்துவ பயிற்சிகள் வழங்கப்பட்டன. இராணுவத்தால் வழங்கப்பட்ட தலைமைத்துவ பயிற்சிகளுக்கும் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. கொஞ்ச காலத்தில் அதுவும் காணாமல் போய்விட்டது.

13 வருட கனவை நனவாக்கிவிட்டு பல்கலைக்கழகங்களுக்கு நுழையும் புதிய மாணவர்களில் பலரும் தங்களுடைய கல்வி வாழ்க்கையை பாதியிலேயே கைவிடவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு இந்த பகிடிவதை தள்ளிவிடுகின்றது. ஆகையால், புது மாணவர்களை ஏனைய மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தும் வகையிலேயே நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதே உசித்தமானது. அத்துடன், பகிடி வதைகளில் ஈடுபடும் மாணவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்க​வும் வேண்டும். 31.12.2024

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X