2024 ஏப்ரல் 30, செவ்வாய்க்கிழமை

பயனாளிகளை அலைக்கழித்து கடனாளியாக்காதீர்

Editorial   / 2023 ஒக்டோபர் 24 , பி.ப. 02:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒவ்வொரு மாதமும் ஒருசில நாட்களில், தபால் காரியாலயங்கள் சமூர்த்தி வங்கிகள் உள்ளிட்டவற்றை அவதானித்தால் இயலாதவர்கள், வயோதிபர்கள், விடியற்காலை ஏழு மணிக்கு முன்பிருந்தே வரிசையில் காத்துக்கிடப்பார்கள். அவர்களுக்கென   டோக்கன்கள் வழங்கப்படும். அதனை வாங்கிக்கொண்டு கால்கடுக்க, தங்களுக்கான நேரம் வரும் வரையிலும் காத்திருப்பர்.

கையில் சிறு தண்ணீர் போத்தலை வைத்துக்கொண்டும், ஏதாவது சிற்றுண்டியைச் சாப்பிட்டுக்கொண்டு காத்திருப்பர். காலையிலேயே வீட்டிலிருந்து வந்தவர்கள் மாலை வேளையிலே வீடுகளுக்குத் திரும்புவர். கால்கடுக்கக் காத்திருந்த பலரும் மயங்கி விழுந்துவிடுவர்.

அரசாங்கத்தால் வழங்கப்படும் சொற்ப பண சலுகையை பெற்றுக்கொள்வதற்கே இவ்வாறு காத்திருப்பர். தாங்கள் எதிர்பார்த்தபடி பணம் கிடைக்காவிட்டால், ஏக்கத்துடனும் மன விரக்தியுடனும் வீட்டுக்குத் திரும்பவேண்டிய துர்ப்பாக்கியசாலிகள்தான் அவர்கள். அந்தளவுக்கு அரசாங்கத்தின் செயற்பாடுகள் உள்ளன.

சமூர்த்தி உதவித் தொகையைப் பெறுவோர், வயோதிபர்களுக்கான நிதியைப் பெற்றுக்கொண்டவர்கள், இதுவரை காலமும் எவ்விதமான அலைச்சலும் இன்றி, தங்களுக்கான இலவச சலுகையை மிக இலகுவாகவே பெற்றுக்கொண்டனர். 

எனினும், அவர்களில் பெரும்பாலானவர்கள் அஸ்வசும திட்டத்தின் கீழ் இணைக்கப்பட்டனர். இதுவே அவர்களுக்கு பெரும் தலையிடியாய் மாறிவிட்டது. புதிதாக வங்கிக் கணக்குகளைத் திறப்பதற்காக அரச வங்கிகளின் முன்பாக வரிசையில் நின்றனர். அதற்கான வழக்கப்பட்ட ரசீதை  பெற்றுக்கொண்டு பிரதேச செயலகங்களுக்கு அலைந்தனர். 

அவ்வாறானவர்களில் ஒருசிலருக்கு மட்டுமே நிதி கிடைத்தது. ஏனையோர் ஏமாந்து நிற்கின்றனர். முதியோருக்கான தொகையையும், சமூர்த்தியையும் இழந்து பலரும் நிர்க்கதியாகிவிட்டனர்.
முச்சக்கரவண்டி காரர்களிடம் கடன் சொல்லி, வீட்டிலிருந்து வங்கிகளுக்கு வந்தாலும், அவர்களுக்கு உரிய விளக்கங்கள் கொடுப்பதில்லை. பணம் இன்னும் வரவில்லை, சமூர்த்தி  கொடுப்பனவுகளை எம்மால் வழங்கமுடியாது. அங்குச் செல்லுங்கள், இங்குச் செல்லுகள் என அலைக்கழிக்கப்படுகின்றனர்.

தங்களுடைய சிறு, சிறு செலவுகளுக்கும் வைத்திய செலவுகளுக்காகவும் அரசாங்கத்திடம் இலவச நிதிக்காகக் கையேந்தி நிற்கும் முதியோர் பலர், முச்சக்கரவண்டி காரர்களுக்கு இறுதியில் கடனாளியாகிவிடுகின்றனர்.

அஸ்வசும திட்டத்தின் கீழ் தங்களைப் பதிவுச் செய்துகொண்ட சுமார் 800,000 குடும்பங்களுக்கு இன்னும் ஜூலை மாதத்திற்கான கொடுப்பனவுகள் கிடைக்கவில்லையெனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், கருத்து தெரிவித்துள்ள  நலன்புரி நன்மைகள் சபையின் மேலதிக ஆணையாளர் (செயல்பாடு) ரத்னசிறி ராஜபக்ச ஜூலை மாதம் தொடர்பான முழு கொடுப்பனவுகள் 12 இலட்சம் குடும்பங்களுக்கு மாத்திரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஏனைய குடும்பங்களுக்கான கொடுப்பனவுகளை அடுத்த இரண்டு மாதங்களில் வழங்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

அப்படியாயின், ஓகஸ்ட், செப்டெம்பர் மற்றும் ஒக்டோபர் ஆகிய மாதங்களுக்கான கொடுப்பனவுகள் இன்னும் பிந்தும் என்பதே அர்த்தமாகும். அதற்காக இன்னும் எத்தனை தடவைகள் ஏறியிறங்க வேண்டிய நிலைமை ஏற்படுமெனப் பயனாளிகள் அஞ்சுகின்றனர் அதுவே உண்மையாகும்.

2023.10.18

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X